என் மலர்
நீங்கள் தேடியது "Kalakshetra"
- மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர்.
- அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் மனுவில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை, பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.
- மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கலாஷேத்ரா விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.
சென்னை:
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஐ.ஜி. தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 2 டி.எஸ்.பி.க்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.
- பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை:
சென்னையை அடுத்த திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.
இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.
மேலும் 3 பேராசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியதால் ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. மாணவிகள் எந்தெந்த வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடமும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரி நிர்வாகம் தரப்பில் இன்று தேர்வு நடப்பதால் நாளை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஏற்கவில்லை. விசாரணை தாமதம் ஆனால் வழக்கு நீர்த்து போகும் என்பதால் இன்றே விசாரணையை தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள், பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பேராசிரியர் ஹரி பத்மன் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவர் வகுப்பில் படித்த மாணவிகளிடமும் விசாரணை நடந்தது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
- 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
திருவான்மியூர் கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.
அந்த அறிக்கையில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர் ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
- புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மாணவிகளிடம் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது.
நேற்று மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக சுமார் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், நிர்வாகத்தினர் யாரும் இல்லாமல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகல் விசாரணை நிறைவடைந்தது.
இதையடுத்து இறுதி அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் எஸ்.பி. மகேஷ்வரன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ஹரிபத்மன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது பழைய மாணவிகளும், தற்போது படிக்கும் மாணவிகளும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் மாணவிகளை தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.
- கடந்த சில நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்த குழுவினர் பள்ளியில் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை:
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த மாணவிகள் பாலியல் புகார் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. மாணவிகள் ஆன்லைனில் புகார் அளிக்க இணைய தள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஏற்கனவே கலாஷேத்ரா பள்ளி வளாகத்தில் ஆலோசனை நடத்தியது. பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள், மாணவிகளிடம் ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் பாலியல் சம்பவம் குறித்து குழுவினருக்கு கிடைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
- பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.
- பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.
ஆலந்தூர்:
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி உள்ளது. பாரம்பரிய பெருமைமிக்க இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன், தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தியது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து 250 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன், 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததையடுத்து கடந்த ஜூன் 6-ந் தேதி அவருக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்த ஹரிபத்மன் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பெண் புகார் அளித்திருந்தார்.
- அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்டனர்
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஷீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார்.
அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஷீஜித்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஷீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் மாணவி அளித்த புகாரில், ஸ்ரீஜித் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்திருந்தார்.
அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி நீலாங்கரை போலீசாரால் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
தற்போது ஸ்ரீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.