என் மலர்
நீங்கள் தேடியது "Madras HC"
- மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
- குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
- மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.
திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- அமலாக்கத் துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- மனுவில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
சென்னை:
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும். எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும் படியும் பரிந்துரைத்தனர்.
அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால் அதை திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆரம்ப கட்டத்திலே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை திசை திருப்பும் வகையில் இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் அங்கு எந்தவிதமான வழக்கும் தொடராமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை 8ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 7 ந்தேதி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு 8 மற்றும் 9-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். அனைத்து தரப்பும் தவறாமல் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டு உள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்தது.
அதன்படி, இன்று முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அங்கு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
எனவே கொடைக்கானல் நுழைவுவாயில் காமக்காபட்டி போலீஸ் சோதனைச்சாவடி, பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையே வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். இதுதவிர அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்களும், காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதி செய்யப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
- தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
- சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை:
சுப்ரீம் கோர்ட் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட சதவீத வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும்போது, அதைவிட பெருமளவு புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விடுவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதனால், மாற்றுமுறையில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டும், அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் நடவடிக்கை எடுத்தன.
இதற்காக தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதுபோல ஐகோர்ட் சார்பில் அவ்வப்போது லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.
சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், ''20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இந்த நடைமுறை சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று வக்கீல்கள், வழக்குகளை நேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துகிறோம்'' என்று கூறியுள்ளார்.
- ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது.
- தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பான வழக்கில் மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை எழும்பூர் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லாவின் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
இதனிடையே, தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே சட்டத்தின் நோக்கம்.
- சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது.
மதுரை:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யகொண்டான் திருமலை கிராமத்தில் உள்ள 51 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை. இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
எனவே அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு கட்டிடத்தை அங்கீகாரமின்றி கட்டலாம். பின்னர் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்குவிக்கக்கூடாது. அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
கட்டிடம் முறையாக கட்டப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து, நிறைவுச்சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை வருகிற 10-ந்தேதிக்குள் இந்த கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
- நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.
சென்னை:
கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு அம்மை, இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது. பருவநிலை மாற்றம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுகிறது.
நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.
"இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வழங்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நான் வக்கீலாக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரைத்த மருந்து இல்லை என நர்ஸ் தெரிவித்தார்.
பிறகு டாக்டர் வலியுறுத்திய பின், அந்த மருந்து எனக்கு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும்" என்றும் நீதிபதி கூறினார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
- நாளை 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடைபெற இருந்த அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கடந்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தமிழக காவல்துறையில் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் உரிய அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் நிலவிய சூழலை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு போலீசார் மீண்டும் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
அப்போது நாளை (6-ந்தேதி) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு அறிவுறுத்தியது. இது தொடர்பான வழக்கு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது உளவுத்துறை அறிக்கையின்படி எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை தமிழக காவல்துறை கோர்ட்டில் தெரிவித்தது.
கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்க முடியும் என்றும், 24 இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 23 இடங்களில் உள் அரங்குகளில் கூட்டம் நடத்தலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு 44 இடங்களில் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அர்.எஸ்.எஸ். அணிவகுப்பை பொது இடங்களில் நடத்தக்கூடாது, லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதை ம் எடுத்துச் செல்லக்கூடாது, விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக பேசக்கூடாது, இந்திய இறையாண்மைக்கு தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படக்கூடாது என்பது உள்பட 11 நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்திருந்தது.
ஐகோர்ட்டு விதித்துள்ள இந்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், குமரி மாவட்டம் அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களிலும் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய நோட்டீசை போலீஸ் சார்பில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இந்த நோட்டீசை வாங்க மறுத்து விட்டனர் என்றும், இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அனுமதி தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இதற்கிடையே நாளை 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடைபெற இருந்த அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு என்பது ராணுவ அணிவகுப்பு போன்றே நடைபெறும். வெள்ளை சட்டை, காக்கி டிரவுசர், கருப்பு கலர் தொப்பி அணிந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறிய லத்தியை வைத்துக் கொண்டு மிடுக்குடன் அணி வகுப்பில் நடந்து செல்வார்கள்.
அணிவகுப்பில் முதலில் ஒருவர் தலைமை ஏற்று செல்வார். அவரது பேண்டு வாத்திய குழுவினருடன் சாலை ஓரமாகவே போக்குவரத்து இடையூறின்றி அணி வகுப்பு நடைபெறுவது வழக்கம்.
குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் அணிவகுப்பு முடியும் இடத்தை சென்று விடுவோம். இத்தனை ஆண்டுகளாக அணிவகுப்பு என்பது சாலைகளில்தான் நடந்து உள்ளது.
ஆனால் சென்னை ஐகோர்ட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்த முடியாத அளவுக்கே நிபந்தனைகளை விதித்திருப்பதாக கருதுகிறோம். எனவே நாளை ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு நடைபெறவில்லை. அது ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் நிபந்தனைகளை தளர்த்தி, பொது வெளியில் எப்போதும்போல ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுவதால் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் சென்னையில் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவு தனி நீதிபதி உத்தரவாகும். இதனை எதிர்த்து ஐகோர்ட்டு பெஞ்சில் முறையிட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
வருகிற திங்கட்கிழமை (7-ந்தேதி) இது தொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் இன்று இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை ஒருநாள் முழுவதும் மூடப்படுகின்றன.
- நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் போது வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமாகும். இது இன்று வரை அதன் பழைமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் உயர்நீதிமன்றத்தை கட்டியதால் அதற்கு மரியாதை செய்யும் வகையிலும், மேலும் இது பொதுசொத்து அல்ல என்பதை வலியுறுத்தும் வகையிலும் ஆண்டிற்கு ஒருமுறை அதன் நுழைவு வாசல்கள் பூட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயத்தை சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் இன்று இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை ஒருநாள் முழுவதும் மூடப்படுகின்றன.
இதற்கான அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவாளர் பி.ஹரி வெளியிட்டார். நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் போது வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.
- விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.
- ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29-ந் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.