என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morgan Stanley"

    • வரும் 2028ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயரும்.
    • அதன்மூலம் உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்.

    புதுடெல்லி:

    உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனம் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டில் 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியது.

    வரும் 2026-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

    வரும் 2028ம் ஆண்டிற்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.

    கடந்த 1990-ம் ஆண்டில் உலகின் 12-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ம் ஆண்டில் 13-வது இடத்துக்கு பின்தங்கியது. 2020-ல் 9-வது இடத்துக்கும், 2023ல் 5-வது இடத்துக்கும் முன்னேறியது.

    உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும்.

    வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும்.

    உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், 2025-ம் ஆண்டில் இந்திய பங்குகள் விலைகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

    • தரப்பட்டியலில் உயர்வான இடங்களை அடைவது பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது
    • எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும்

    அமெரிக்காவின் நியூயார்க் மாநில மன்ஹாட்டன் பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு பொருளாதார சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. பொருளாதார சேவை நிறுவனங்களில் இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது.

    இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பல அளவுகோல்களை கொண்டு கணக்கிட்டு ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது. ரேட்டிங்ஸ் எனப்படும் இந்த தரப்பட்டியலில் உயர்வான இடங்களை அடைவது பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிறுவனம், தற்போது தரப்பட்டியலில் இந்தியாவை 'மதிப்பீடு குறியீட்டிற்கு மேல்' எனும் நிலைக்கு புதுப்பித்துள்ளது.

    இந்திய பொருளாதாரம் ஒரு நீண்ட ஏற்றத்தின் தொடக்கத்தில் இருப்பதாகவும், அதே சமயம் சீனாவில் பல வருடங்களாக நீடித்த பொருளாதார ஏற்ற நிலை, ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது.

    இந்தியாவில் சீர்திருத்த மற்றும் ஸ்திரத்தன்மைக்கான திட்டங்கள், வரப்போகும் காலங்களில் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தை தரக்கூடிய கண்ணோட்டத்தில் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

    மதிப்பீடு குறியீட்டிற்கு கீழ் இருந்த இந்தியாவை, மதிப்பீட்டிற்கு சமம் எனும் நிலைக்கு அந்நிறுவனம் உயர்த்திய 4 மாதங்களுக்கு பிறகு இந்த தர உயர்வு தரப்பட்டிருக்கிறது.

    ஃபிட்ச் எனும் நிறுவனம் நேற்று தந்த தர பட்டியலில் பொருளாதாரத்தில், அமெரிக்கா தனது கடன்தகுதிக்கான மதிப்பீட்டில், "ஏஏஏ" (AAA) எனும் நிலையில் இருந்து, "ஏஏ+" என கீழிறங்கியிருக்கிறது. அதே போல் சீனாவின் பொருளாதாரமும் இறங்குமுகத்தில் இருக்கிறது.

    உலக பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இந்த இரு நாடுகளின் தர மதிப்பீடு குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதை இந்த புது மதிப்பீடு குறிக்கிறது.

    மார்கன் ஸ்டான்லியின் இந்த மதிப்பீட்டிற்கு அடிப்படையாக இந்தியாவின் மதசார்பற்ற தலைமையும், இந்தியாவின் ஆற்றல் மிக்க இளம் வயதினரும் கணக்கில் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    ×