என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris"

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.
    • மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரி மக்கள் கூடும் பகுதியாகவும், பள்ளி வளாகமும், மார்க்கெட் பகுதியும் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். எனவே அங்கு மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படாமல் இருப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தும் அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இதனை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவர் தொங்கி கிடந்த அனைத்து கம்பிகளையும் ஒழுங்குபடுத்தி இழுத்து கட்டினார். சுமார் 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.இதை அந்த வழியாக சாலையில் சென்ற மக்கள் அவரை பாராட்டினர்.

    • தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒரு முக்கிய தலமாக கோத்தகிரி கொடநாடு காட்சி முனை இருந்து வருகிறது.

    இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கர்நாடக மாநில மலைததொடர் மற்றும் பள்ளத்தாக்குகள், பவானிசாகர் அணை காட்சி, தெங்குமரஹாடா காட்சி போன்ற முனைகளும், இதமான காலநிலைக்கேற்ப நல்ல சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம்.

    இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளான கர்நாடக, கேரளா, பிற மாநில, மாவட்ட மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    • கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்தல், பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுண்ட்டர், கடைகள் அமைத்தல், அழகிய நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பின்னர் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி, டிக்கெட் கவுண்ட்டர் கட்டும் பணி மற்றும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்காவில் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிவடையும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

    • பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் விற்பனை அதிகமாக நடந்தது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22-ந் தேதி ரூ.2 கோடியே 30 லட்சம், 23-ந் தேதி ரூ.3 கோடியே 25 லட்சம், தீபாவளியன்று ரூ.2 கோடியே 70 லட்சம் என 3 நாட்களில் ரூ.8 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் பீர் வகைகளை விட பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலத்தில் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    ஊட்டி,

    தமிழகத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    இதில் ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலம் 2 ஏக்கா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த் துறை சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவா்கள் வெளியேறவில்லை.

    இதைத் தொடா்ந்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்தனா்.

    அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடம் மீட்கப்பட்டு, நீா்நிலை புறம்போக்கு நிலம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.
    • 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.

    ஊட்டி,

    இங்கிலாந்தின் லண்ட னை சேர்ந்த சர் ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை அன்றைய பிரிட்டன் அரசின் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர்.

    நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.

    இவரின் கல்லறை ஊட்டில் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி எம்.பி ஆ. ராசாஅவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சர் ஜான் சல்லிவனுடைய கொள்ளு பேத்தி ஓரியல் சல்லிவனும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சர் ஜான் சல்லிவனுடைய 200-வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.

    அப்போது அவரின் மகள் வக்கீல் மயூரி, இங்கிலாந்து தி.மு.க அமைப்பாளர் பைசல், நிர்வாகிகள் பிரேம், சத்யா, செந்தில் மற்றும் கோகுல், சியாம், ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம், குன்னூர் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஜெகதளா பேரூர் அவைத்தலைவர் லியோன், பேரூர் பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் ஆல்பர்ட், தினகரன், ஒன்றிய பிரதிநிதிகள் கேசவமூர்த்தி, செபாஸ்டின் அமல்ராஜ், மூர்த்தி, சையது பாஷா, நேரு, ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் சாலினி, திலீப்குமார், ஆஷா, யசோதா, பிரமிளா, மோசஸ், சுகுணாம்பாள் உள்பட நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    • வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாலிபர் ஒருவர் படியில் நின்று பயணித்தார்

    ஊட்டி,

    ஊட்டியில் எச்.பி.எப். பகுதியைச் சோ்ந்தவா் போரன் (வயது 44). தனியாா் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறாா்.

    இந்நிலையில் போரன் சம்பவத்தன்று ஊட்டியில் இருந்து பிங்கா்போஸ்ட்க்கு பஸ் சென்றார். அப்போது மினி பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்று பயணித்தார். இதைப் பாா்த்த போரன் அவரை படியை விட்டு மேலே ஏறுமாறு கூறியுள்ளார்.

    இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது நண்பா்களை, பிங்கா்போஸ்ட் பகுதிக்கு வரும்படி கூறினார்.

    மினி பஸ் பிங்கா்போஸ்ட் வந்ததும், அந்த வாலிபர் தனது நண்பா்களுடன் சோ்ந்து போரனை அடித்து உதைத்து பீா் பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் வலியால் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த போரனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனா். பின்னர் இது குறித்து போரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில், ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போரனை தாக்கிய ஊட்டி வி.சி. காலனியைச் சோ்ந்த பிராங்க் (24) மற்றும் அவரது நண்பர் ஆனந்த் (32) ஆகியோரை கைது செய்தனா்.

    • நண்பர்கள் அவரை எழுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த மோகன் என்பவரது மகன் யுவராஜா (வயது 21). இவர் தனது நண்பர்கள் பூபதி, கணேஷ்குமார், ஜெகதீஷ் மற்றும் சிலருடன் தொரப்பள்ளியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். இரவு 11 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசினார். பின்னர் விடுதியில் தூங்கினார். நேற்று காலையில் நண்பர்கள் அவரை எழுப்பினர். ஆனால், அவர் எழ வில்லை. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் யுவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மசினகுடி போலீசில் தந்தை மோகன் புகார் செய்தார். இதன் பேரில் மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
    • 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    ஊட்டி,

    ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 147 பேருக்கு பயிற்சி ஆணைகளை நீலகிரி கூடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் இளைஞர்கள் திறன் திருவிழா கூடலூர் கோழிப் பாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, தமிழ்நாடு ஊரக தொழில் பயிற்சி நிறுவனம் உள்பட பல்வேறு துறைகளும், 15 பயிற்சி நிறுவனங்களும், 386 இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 147 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×