என் மலர்
நீங்கள் தேடியது "Old Courtalam Falls"
- பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பலர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (வயது 17) என்ற மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்து விட்டதாகவும் ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி நிர்வாகம் வனத்துறை வசம் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல ஆண்டுகாலம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வந்த பழத்தோட்ட அருவியை தோட்டக்கலைத் துறையிடம் இருந்து வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்று அந்த அருவியை நிரந்தரமாக மூடிவிட்டனர்.
மேலும் சிற்றருவி, செண்பகாதேவி ஆகிய அருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தடை விதித்ததோடு அங்குள்ள புகழ்பெற்ற செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கூட அங்கு செல்ல விடாமல் கெடுபிடி செய்து வருகிறார்கள்.
மேலும் குற்றாலத்தில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக குளித்து வந்த சிற்றருவியை கைப்பற்றிய வனத்துறை இப்போது அங்கு குளிப்பதற்கு கட்டணம் வசூல் செய்வதோடு அந்த அருவிக்கு செல்லும் பாதையில் நிரந்தர கேட் அமைத்து பூட்டியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் உள்ள அருவிகள், கோவில்கள், நீர்நிலைகளுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு வனத்துறையினர் கெடுபிடி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
எனவே பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கூறியதாவது:-
மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தற்போது வரை பழைய குற்றாலம் அருவிப்பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை.
ஆனால் பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேல் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்துவது குறித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுப்பு.
- சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .
அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.
இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுலா பயணிகள் தென்காசி பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியில் ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த வாரம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 நாட்கள் இந்த தடையானது நீடித்தது.
இந்த நிலையில் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது இன்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சேதாரம் அதிக அளவு காணப்பட்டு வரும் நிலையில், அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.