என் மலர்
நீங்கள் தேடியது "Paranthur Airport"
- கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
- 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.
ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
- ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாலையில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராமமக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 250- வது நாளை எட்டியது. இதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ஏகனாபுரம் கிராம மக்களின் போராட் டம் 250 நாளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
- 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
- போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் 250 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து கிராம மக்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.
- விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமக்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். திடீரென சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
- கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.
எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.
நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.
இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
- 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வரும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி அறிவித்த பிறகு, விஜய் முதல்முறையாக களத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
- நேரம், போராட்டக்குழு சார்பில் வரையறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து பேச தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி அன்று ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், வரும் 20ம் தேதி பரந்தூர் செல்லும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்குழு மற்றும் மக்களை சந்திக்க விஜய்க்கு, காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரம், போராட்டக்குழு சார்பில் வரையறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வரவேண்டும்.
சென்னை:
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் 20-ம் தேதி பரந்தூர் சென்று ஏகனாபுரம் மக்களைச் சந்தித்து பேசுகிறார்.
இதற்கிடையே பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும்தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை திருமண மண்டபத்தில்தான் நடத்த வேண்டும் என போலீசார் தரப்பில் கூறுவதாகவும், ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினர் அம்பேத்கர் திடலில் நடத்த அனுமதி கேட்டதால் இழுபறி நீடித்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.
இந்நிலையில், தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே சந்திக்க காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
- காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது.
- போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
விமானமா? விவசாயமா? -இப்படி ஒரு கேள்வியை கேட்டால் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை சொல்வது இரண்டும் வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
ஏனெனில் காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது. அது நம் உயிர்நாடி. அதே நேரம் பறக்கும் விமானங்கள் நம் வளர்ச்சியின் அடையாளம். எனவே இரண்டும் வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

பரந்தூரில் அரசு அமைக்க திட்டமிட்டுள்ள விமான நிலையத்துக்காக விளை நிலங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று அந்த பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
ஆனாலும் இதுவரை எந்த தீர்வையும் எட்டாத நிலையில் அந்த பகுதிக்கு நடிகர் விஜய் நேரில் சென்று பேசி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தன் அரசியலுக்கும் ஆதரவை திரட்டி சென்றுள்ளார்.
3 ஆண்டுகளாக நடக்கும் போராட்டத்துக்கு விஜய் இப்படி திடீரென்று ஆதரவு கரம் நீட்ட என்ன காரணம்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதற்கு விஜய் சொல்லி இருக்கும் பதில் ஒரு சிறுவனை பற்றியது. அந்த சிறுவன் ராகுல்தான்.
அவன் தனது மழலை மொழியில் பேசிய பேச்சுதான் தன்னையும் போராட்ட களத்துக்கு இழுத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ராகுலின் பேச்சு யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.
அதில், எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும். பள்ளிக்கூடங்களை விட்டால் போதும்.
எங்களுக்கு விமான நிலையம் வந்து நாங்க என்ன மேலயா பறக்க போறோம்? அவுங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாங்க. நாங்க அப்படி ஆக வேண்டாமா?
விவசாய நிலம் இருந்தா தானே நாங்க சாப்பிட முடியும்? வேறு எதை வச்சு நாங்க சாப்பிட முடியும்? ஏரி இருந்தா நாங்க குளிப்போம். விமான நிலையம் வேண்டாம். ஊரை விட்டால் போதும் எங்க பள்ளியை விட்டால் போதும்.
இதுதான் சிறுவன் ராகுல் வாயில் இருந்து உதிர்ந்த மழலை பேச்சு. இதுதான் எண்ணையும் இங்கு இழுத்து வந்திருக்கு என்கிறார் விஜய்.
அரசியல்வாதிகள் கையில் கிடைக்கும் எதையும் அரசியல் ஆக்குவதில் வல்லவர்கள் என்பது தெரிந்ததே.
அந்த வரிசையில் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அரசியலிலும் தான் முதிர்ந்தவன்தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுதான் முதல் முதலாக அவர் பொது வெளியில் வந்து செய்திருக்கும் அரசியல். அதை மிக சாதுரியமாக செய்து இருக்கிறார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
2026 தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்தி வரும் சதுரங்க விளையாட்டில் விஜய்யும் சமயோசிதமாக தன் காயை நகர்த்தி இருக்கிறார்.
தான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் வேண்டாம். வேறு இடத்தில் அமையுங்கள் என்ற முழக்கத்தோடு நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழி சாலையை எதிர்க்க வில்லையா? என்ற கேள்வியை எடுத்து வைத்து ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்து தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பரந்தூரில் விமான நிலையம் வருமா? வராதா? மக்கள் போராட்டம் நியாயமானதுதானா? என்ற கேள்விகள் விவாத பொருளாகி இருக்கும் நிலையில் விஜய்யின் இந்த திடீர் வருகையால் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் முதல் முறையாக சென்னையை கடந்து பல இடங்களுக்கும் தெரிய வந்துள்ளது என்பது மட்டும் உண்மை.
- விமான நிலையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் ஆபத்து.
- பிறந்த மண்ணை விட்டு மக்களை வெளியேற்றுவது, உணர்வுப்பூர்வமான பிரச்சனை.
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதிய விமான நிலையங்கள், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, மக்களை வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயரச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னால் அத்தகைய திட்டங்கள் அத்தியாவசியமானதுதானா? என அரசு ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுகள் அடிப்படையில் திட்டங்கள் அவசியம் என முடிவு செய்தால், முழுமையான வெளிப்படைத் தன்மையோடு, திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை சட்ட ரீதியில் பெற்று அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களிடம் கலந்துரையாடல் நடத்தி முழுமையான ஒப்புதலை பெற்ற பின்பே திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு விற்று வருகிறது.
அவ்வாறே தமிழகத்தில் கட்டமைக்கப்படும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் எதிர்காலத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் ஆபத்தும் உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களையும், விளை நிலங்களையும், மக்கள் வாழ்வாதாரங்களையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்வது உலகம் முழுவதும் நடந்து கொண்டுள்ளது.
இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இந்நிலையில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக பரந்தூர், கொடகூர், வளந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4800 ஏக்கர் நிலம் எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே சுட்டிக்காட்டியவாறு ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கான சட்டரீதியான கடமைகளை மேற்கொள்ளாமல், பெயரளவிற்கான கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலைய பணிகளை துவங்க உள்ளதாக தெரிகிறது.
இந்த நடைமுறை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்களுக்காக பிறந்த மண்ணை விட்டு மக்களை வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி, உணர்வுப்பூர்வமான பிரச்சனையும் ஆகும்.
மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் போலீஸ் முகாம் அமைத்து மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளை முடக்குவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளும் அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.
எனவே, தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன், திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை போன்றவைகளை தயாரித்த பின்னர் பொதுமக்களிடம் முறையான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
சட்டப்படி விவசாயிகள் கேட்கும் முழுமையான இழப்பீடு வழங்குவதுடன் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு விவசாயிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துவது, வேலை உத்தரவாதம் உள்ளிட்டு அனைத்தையும் உறுதி செய்திட வேண்டும்.
மேலும், கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.