என் மலர்
நீங்கள் தேடியது "parenting"
- பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
- குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.
புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.
பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.
உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது
உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.
இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.
மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.
பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.
- நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது.
உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சில...
* நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.
* நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
* இலந்தைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.
* கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்துக்காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.
* நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.
* வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.
* பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் வளரும்.
* நினைவாற்றல் அதிகரிக்க செய்வதில் பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.
- பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம்.
- வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் உண்டு. அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் ஆழமாக பதிந்துவிடும். சில விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகலாம்.
தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக பெற்றோரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட. சில கேள்விகளுக்கான பதில் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதனை தெரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர குழந்தைகளுக்கு தவறான தகவல் கொடுக்கக்கூடாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அந்த கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பெற்றோருக்கு தெரியாத சில விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கலாம். அவர்களிடம் இருந்து அந்த விஷயத்தை பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் அதுபற்றி விவாதியுங்கள். நிறை, குறைகளை அவர்களுடைய மனம் நோகாமல் தெரியப்படுத்துங்கள்.
எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள், நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் விமர்சன கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக வளர்வார்கள். எதையுமே அலசி ஆராய்ந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள பழகிவிடுவார்கள்.
பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம். அப்படி மனதில் உதிக்கும் சந்தேகங்களை நோட்டில் எழுதச் சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை அவர்களையே தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது சாத்தியம் என்பதால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். செல்போனை இதுபோன்ற பயனுள்ள தேடலுக்கு பயன்படுத்த கொடுங்கள்.
வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள். தினமும் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். அன்று படித்த பக்கங்களில் இருந்து கேள்வி கேளுங்கள். சரியாக பதில் அளித்தால் பரிசு வழங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இது குழந்தைகளிடத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி செயல்படும் ஆர்வத்தை மேலோங்கச் செய்யும்.
எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் தாங்கள் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.
- வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
- வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.
பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டு பாடங்களை பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழக்கத்தை கற்பிக்கவும் தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றேனின் உதவியுடன் குழந்தை செய்யமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.
ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பிள்பற்ற வேண்டும்.
தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வார்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே..
* குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிக என்று நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள், மாறாக, வீட்டுப்பாடத்தை, நீங்களே செய்யாதிர்கள். இது குழந்தைக்கு வீட்டுப் பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.
* வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது. அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு சுற்றுக்கொடுக்கள், வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக அவர்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள்.
* வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்ய வில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' என்று கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
* வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.
• வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள். நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும்.
அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அடிக்கடி ஆசிரியரை சத்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.
- தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள்.
குழந்தைகள் பதின் பருவத்தை அடையும்போது தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் இதில் தலையிடும்போதே அவர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.
அதன் பின்னர் அவர்களை கண்காணித்து தவறு இருந்தால் உடனடியாக சுட்டிக்காட்டவேண்டும். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.
பதின் பருவத்தினர் கோபப்பட்டாலும் கத்தினாலும் பெற்றோர்களாகிய நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பொறுமையாகப் பேசி புரிய வைக்க வேண்டும்.
பதின் வயதினருக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் தேவையானது அன்பும் ஆதரவும். அந்தவகையில் உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை இனிமேல் நீங்கள் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களுக்காக நேரம் செலவழித்து பேசுவது பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பதின் பருவத்தினர் நேர்மையாக இருக்க இது உதவும்.
வீட்டின் முக்கிய முடிவுகளில் அவர்களை முன்னிலைப்படுத்தலாம். பதின் பருவத்தினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை பிசியாக வைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். நேரடியாக பல விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.
அதாவது படிப்பு மட்டுமின்றி, வேறு கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களின் திறமையை கண்டறிய முடியும். படிப்பு, கலைகளில் நேரம் செலவழிப்பதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற நேரம் கூட இருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முடியாத பட்சத்தில், இறுதியாக மன நல ஆலோசகரை அணுகலாம். சாதாரணமாக பதின் பருவத்தினரை ஏதாவது பொது இடத்திற்கு வெளியில் அழைத்து சென்று மனநல மருத்துவரிடம் பேச வைக்கலாம். பதின் வயதில் ஏற்படும் சில உணர்ச்சிகள், பெற்றோரிடம் சொல்ல முடியாதவையாக கூட இருக்கலாம்.
பதின் பருவத்தில் வரும் மாற்றங்கள் சாதாரணமானவை என்றாலும் அந்த நேரத்தில் பதின்பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துகின்றோமோ அதன்படி அவர்களின் எதிர்கால குணங்கள், நடத்தைகள் உருவாகின்றன.
- உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம்.
- பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம்.
உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம். பொதுவாக டீன்ஏஜ் எனும் பதின் பருவமான 13 வயது 19 வயது வரை குழந்தைகள் வளர்ப்பில் சிக்கலான பருவமாகவே பார்க்கப்படுகிறது. குழந்தை பருவத்திற்கும் வளர் பருவத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் உடலுறுப்புகளின் வளர்ச்சி, பலவித ஹார்மோன்களின் சுரப்பு என ஏற்படும் உடல் மாற்றங்கள், நடத்தையிலும் உணர்ச்சிகர பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த பதின் வயதில் குழந்தைகளை பெற்றோர்கள் சரியாக கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் காலம்காலமாக தொடர்கின்றன. பதின் வயதில் பெரும்பாலான குழந்தைகளிடம் கட்டுப்பாட்டை மீறிய எதிர்மறை நடத்தைகள் அதிகம் இருக்கும். இதற்கு உடலியல் மாற்றங்களே முக்கிய காரணம்.
மேலும், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம். தனித்துவத்தை தேடும் நோக்கில் மற்றவர்களிடம் மரியாதையின்றி கோபப்பட்டு நடந்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். குறுகிய மனப்பான்மை, பெற்றோருடன் விவாதம் செய்வது. குடும்பத்தினருடன் பேசுவதைத் தவிர்ப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது, விதிமுறைகளை மீறுதல் என அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். உடலியல் மாற்றங்களால் நிகழும் நடத்தை மாற்றங்கள் இவை என்பதால் இது சாதாரணமானதுதான். இதிலும் ஒரு படி அதிகமாக நாம் முதலில் குறிப்பிட்ட எதிர்மறை பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் கவலைக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.
இதில் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரிடம் பெற்றோர் மனம்விட்டு பேசினாலே இந்த பிரச்னைகள் சரியாகி விடும். இரண்டாவது கட்டத்தில் உள்ள பதின் பருவத்தினரின் நடத்தைகளில் பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு துரிதமாக சாமர்த்தியமாக செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் ஆரோக்கியமற்ற நடத்தைகளால் பதின் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
பதின் பருவத்தினருக்கு புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்தையும் ஒருவித பதற்றத்துடன் அணுகுவது, சிறிய பிரச்சினைகளை பெரிதாக்குவது, கூச்சல் போடுவது, முற்றிலும் பொறுமையின்றி இருப்பது என்று எல்லாம் இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சலினால் புகை, மது என தவறான பாதைகளில் செல்கின்றனர். இளைஞர்களை விட பதின் வயதினர்தான் போதைப்பொருள் பழக்கத்திற்கு இன்று அதிகம் அடிமையாகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு அப்போது இருப்பதில்லை. பதின் வயது மாற்றங்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் இருக்கும். மகன் அல்லது மகளின் உடல், மனதில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தீரக்க முடியும்.
- குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
- அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.
நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:
தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.
குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.
முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.
இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.
மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.
அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.
- வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.
- பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.
எப்படி படிக்க வேண்டும்? படிப்பதை எப்படி மறக்காமல் இருப்பது, படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
படிப்பதை நாம் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது அதை வைத்து உயர்ந்த இடத்துக்கு சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவோ இருக்க கூடாது. வாழ்க்கைக்கு உபயோகம் இல்லாத எந்த படிப்பும் வாழ்வதற்கு ஒரு முழுமையை தராது.
ஒரு ஆறு வயது குழந்தைக்கு நீங்கள் படித்த விஷயத்தை புரிய வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கே அதைப்பற்றிய புரிதல் இல்லை என்பதுதான் உண்மை. படித்ததை நியாபகம் வைத்துக்கொள்வதற்கு ஒரு சில கோட்பாடுகளை நாம் பார்க்கலாம்.
படிக்கும்போது குழந்தைகள் படித்ததை அப்படியே மனப்பாடம் செய்து படித்தோம் என்றால் வெறும் வார்த்தைகளை மட்டுமே நாம் புரிந்து வைத்திருப்போம். இதனால் அந்த பாடத்தில் உள்ள வார்த்தைகளை சீக்கிரமே மறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.
இரண்டாவதாக குழந்தைகளுக்கு புரியும் மொழிகளில் நாம் கற்ற பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பாடத்தை அவர்களுக்கு தெரிந்த தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் புரியும் அளவுக்கு அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் புரிந்து படிப்பதற்கும், படித்ததை அவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். படித்ததை அவர்களுக்கு எளிதாக புரியும் அளவுக்கு உதாரணங்களை கூறி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு அவர்கள் விரும்புகிற காற்றுன் திரைப்படங்கள், விளையாட்டுகளை கூறி அதனை விளக்க வேண்டும். அப்போது இன்னும் ஆர்வமாக படிப்பதற்கு வழிவகுக்கும்.
மூன்றாவதாக குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்தும் படித்த விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டியது முக்கியம். அதாவது படித்த பாடங்களை புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா? பிடிக்கவில்லையா? சூழ்நிலை சரியாக இல்லையா? ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கிறார்களா? என்பன போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவது மற்றும் இன்னும் தெளிவாக அவர்களுக்கு புரிய வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
இப்போது நம்மகிட்ட இன்டர்நெட் இருக்கிறது. எக்கச்சக்கமான கம்யூனிகேஷன் சேனல்கள் உள்ளது. ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்கு நிறையபேர் இருக்கிறார்கள். எனவே எந்த விஷயத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதன் மூலம் அல்லது அவர்கள் மூலம் கற்றுக்கொள்ள இன்று வாய்ப்புகள் நிறைய வந்துவிட்டன.
கடைசியாக குழந்தைகள் படித்ததை தெரிந்துகொண்டபிறகும் சிலருக்கு அது படிக்கும்போது மட்டுமே நினைவில் இருக்கிறது. ஆனால் அது 3 மாதங்கள் கழித்து கேட்டால் நினைவில் இருப்பதில்லை என்றால் இன்னும் பயிற்சி அவசியம். அதாவது படித்த பாடத்தை குழந்தைகள் எவ்வாறு பயின்றார்களோ அதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு குழந்தைகள் கற்றுக்கொண்ட பாடத்தை அவர்களுடைய நண்பர்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ முதலில் சொல்லித்தர பழக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளியில் தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை வீட்டிற்கு வந்ததும். ஆசிரியர் நடத்திய பாடங்களை பெற்றோருக்கு புரியும்படியாக எடுத்துக்கூற வேண்டும். இதில் பெற்றோர்கள் தவறு ஏதும் இருந்தால் திருத்திக்கொள்ளலாம். இன்னும் எளிமையாக கற்கும் அளவிற்கு அவர்களுகு சொல்லிக் கொடுக்கலாம். அவ்வாறு குழந்தைகளை நாம் பழக்கினால் தான் குழந்தைகளுக்கு அவர்கள் படித்த பாடங்கள் எத்தைனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்கும்.
சரி இவ்வாறு செய்வதற்கு நிறைய நேரம் எடுக்குமா? என்றால், நாம் நினைப்பதைவிட குறைந்த அளவு நேரமே தேவைப்படும். நாம் ஒரு பாடத்தை 10 தடவைக்கு மேல் படிப்பதை விட இரண்டு, மூன்று தடவை படிக்கும் போதே அவர்களுக்கு புரியும்படி கற்றுக்கொடுத்துவிட்டால் நன்றாக அவர்களுக்கு பதிந்துவிடும்.
யோசித்துபாருங்கள் ஒரு பாடத்தை குழந்தைகள் மாதத்தேர்வுக்கும் படிப்பார்கள். அதையே காலாண்டு தேர்வுக்கும் படிப்பார்கள், அரையாண்டு, முழுபரிட்சை தேர்வுக்கும் படிப்பார்கள். நாம் முதல் தடவை படிக்கும் போதே ஒரு பாடத்தை புரிந்து படித்துவிட்டால் நாம் அந்த பாடத்தை எப்போது கேட்டாலும் சொல்லும் அளவுக்கு அவர்கள் கைதேர்ந்தவர்களாகிவிடுவார்கள்.
இதேபோல் ஒரு பாடத்தை புரிந்து படித்து, படித்த பாடத்தை வழிமுறைப்படுத்தி, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எளிமையாக கற்றுக்கொள்ள முடியும். எனவே உங்கள் குழந்தைகளும் இதே வழிமுறையை பின்பற்றி படிக்க கற்றுக்கொடுங்கள். படித்தவை அனைத்தும் மனதில் இருந்து மறக்காமல் அதிக நினைவாற்றலுடன் விளங்கவும் உதவியாக இருக்கும்.
- நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியம்.
- இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டுள்ளது.
தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்
-என்று மாணவர்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் தான் இவை. இது போன்ற எண்ணற்ற கவிஞர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி தேசத்தின் தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதில் உறுதியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மாணவர்களின் அறிவும், செயல்திறனும் உள்ளது.
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இன்றும் உலக அரங்கில் இளைஞர்கள் அதிகம் உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. அவர்களால் எந்த சவால்களையும் எளிதாக வென்று விட முடியும். எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் இடையே எழுந்து உள்ள மோதல் போக்கு பல்வேறு தரப்பினருக்கும் கவலை அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது.
இன்றைய சூழலில் குடும்பங்களில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அவர்களை கையாளுவதில் மென்மையான போக்கே பெற்றோரிடம் இருக்கிறது. மேலும் அவர்களை முழு நேரமும் கண்காணித்து, கண்டிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் பிள்ளைகள் விரும்புவதை செய்து கொடுக்கவும், அவர்களின் எதிர்காலத்துக்காகவும் வேலை, வாழ்வாதாரம் என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் தன்வசதி ஒன்றையே பெரிதாக கருதிக் கொள்கிறார்கள். இதனால் சமூக ஓட்டத்தில் மற்றவர்களோடு இணக்கமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள தவறி விடுகிறார்கள்.
ஆனால் மாணவ- மாணவிகளின் பெரும் பகுதி நேரம் பள்ளிக் கூடத்திலேயே கழிகிறது. எனவே அவர்களை கண்காணிப்பது, கையாளுவது என்பது ஆசிரியர்களுக்கு இயல்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்களால் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் சந்தேகம் தான். மேலும் மாணவ- மாணவிகளை கையாளுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
அதோடு இன்றைய மாணவ- மாணவிகளிடம் இருக்கிற தைரியம், மூர்க்கமான போக்கு போன்றவை ஆசிரியர்களையே அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இதனால் வகுப்பறைகளில் பாடங்களை நடத்தி முடித்து வெளியேறுவது என்பதே சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது.
மேலும் வகுப்பறையில், மாணவ-மாணவிகளிடம் காணும் மாறுபாடுகளை சரி செய்வது குறைந்து வருகிறது. மேலும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு இருந்த பயம், மரியாதை இன்றைக்கு அர்த்தமற்றதாக மாறி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் வீட்டிலும், பள்ளியிலும் பரவலாக மாணவர்களுக்கு ஒரு கண்டிப்பற்ற சூழல் நிலவுகிறது. அதில் சில மாணவர்கள் குழு மனப்பான்மையில் ஒன்று சேரும் போது வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
அதுமிகமோசமாகி வீடு புகுந்து தாக்குவது போன்ற குற்றங்களை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்கிறது. அது மாணவ சமுதாயத்தின் மீதே தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வன்முறையால் அழிவு தான் நிகழும். ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்காது. மேலும் யார் மீதும் வன்முறை எண்ணம் இருக்க கூடாது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் அதிக எண்ணிக்கை யில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக நடைபெற்ற கவுன்சிலிங்கில் 40 ஆசிரியை கள் உள்பட 122 பேர், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம் என்று புறக்கணித்து விட்டனர். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பள்ளியில் நிர்வாக சிக்கல்கள் எழுகிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. பள்ளிச் சூழலிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள், கடிவாளம் இல்லாத குதிரை போல் ஆகி விடுகிறது. அது ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதிக்கப் படுகிறது. எனவே தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
இது மட்டுமின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்- ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. அப்போது தான் மாணவ- மாணவிகளின் படிப்பு மட்டுமின்றி சமூக நலப் பண்புகளை மேம்படுத்தி நல்லிணக்கத்தை கொண்டு வருவதில் வெற்றி காண முடியும். அதற்கான தொழில்நுட்ப தொடர்பு வசதிகள் தற்போது துணையாக இருக்கிறது. அதன் வழியாக கலந்துரையாடல் நிகழ்கிற போது மாணவர்கள் மத்தியில் இயல்பான மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படும்.
தற்போது டி.வி., செல்போன், சமூக வலைத்தளங்கள், சினிமா, அரவணைப்பு அற்ற நிலை என்று ஏராளமான புறச்சூழல்கள் உள்ளன. அவை மாணவர்களிடம் ஆக்ரோஷத்தையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைந்து இருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டதாக 2019-ம் ஆண்டு - 2,686 வழக்கு, 2020-ம் ஆண்டு - 3,394 வழக்கு, 2021-ம் ஆண்டு - 2,212 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதோடு பள்ளி மாணவர்களிடம் வேகமாக பரவும் தவறான பழக்கம் அவர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது போன்ற நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், நெறிப்படுத்தி கண்டிக்க கூடிய தோழமைகள் குறைந்து விட்டனர். இதனால் சில மாணவர்கள் மனம் போன போக்கில் எதிர்காலம் குறித்த அச்சமின்றி குற்றம் செய்ய துணிகின்றனர்.
இதனால் மாணவர் சமூகம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மாணவர்களின் அடையாளம் என்பது கல்வி கற்பது மட்டும் தான். எனவே வகுப்பறை சூழலை கொண்டாடுவதன் மூலம் தான் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்த வேண்டும். அதை விடுத்து வன்முறை எண்ணத்தில் வேறுவிதமான செயல்களில் ஈடுபட்டால் எதிர்காலம் பாதிக்கும்.
எனவே மாணவர்களை சரிப்படுத்த அன்பான வார்த்தைகள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு கண்டிப்பான பார்வையும் மிகமிக அவசியம். வேறுபாடுகளை மறந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தான் சீருடை வழங்கப்படுகிறது. அதற்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு. அத்தகைய சீருடை அணிந்த மாணவ- மாணவிகள் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உயர்கல்வி கற்று புகழ் பெற வேண்டும். அது தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல மனித சமூகத்துக்கும் நலம் அளிக்கும் என்பதை மாணவ- மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
- கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
- டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...
கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.
சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.
இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.
- சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது.
- நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும்.
இந்த காலத்து குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். கற்றுக்கொடுக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கும், சில ஸ்மார்ட்டான பயிற்சிகள் தேவை.
குறிப்பாக, கவனம் சிதறாமல் இருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யவும் ஒருசில மன பயிற்சிகள் தேவைப்படுகிறது'' என்று பக்குவமாக பேச ஆரம்பிக்கிறார், திரேசா.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்.சி. சைகாலஜி படித்திருக்கிறார். கூடவே, குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது குறித்தும், கவனிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறார். இதுசம்பந்தமான ஆய்வுகளில் கடந்த 10 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பதோடு, இதற்காக தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில், நினைவாற்றல் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மீது அதீத அக்கறை காட்டுவதோடு, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கிறார்.
''சாதாரண மனிதர்கள், சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள்'' என்று கூறுபவர், சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கிறார்.
''5 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. பல வருடங்களாக, குழந்தைகளுடன் பேசி பழகி ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான், இதை உறுதிப்படுத்தினோம்.
நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மை பயக்கும் பயிற்சிகளைத்தான், நான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்'' என்பவர், இத்தகைய பயிற்சிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றி, அதை சுலபமான வழிகளில் கொண்டு சேர்க்கிறார்.
''கல்வி, வகுப்பு தேர்வுகள்.... என ஏற்கனவே 'ஸ்டிரெஸ்' மனநிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் சுகமான அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர, கூடுதல் சுமையாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், அவர்கள் விரும்பும் வகையிலான பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறோம்.
எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், யோகா-தியானம்... என பயிற்சி அனுபவத்தை விளையாட்டு அனுபவமாக்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன்.
என்னுடைய பயிற்சிகளை குழந்தைகளும் விரும்புகிறார்கள்'' என்றவர், இந்த பயிற்சிகள், அவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் மாற்றும் என்கிறார்.
''நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்திருப்பார்கள். சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்வார்கள்.
பிரச்சினைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட பயிற்சிகள்தான், இந்த காலத்துக் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது'' என்பவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார்.
- எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும்.
- என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும், அதற்கு இப்போது என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம் என வழிகாட்டுகிறது இந்த பதிவு.
அனிமேஷன் சார்ந்த படிப்புகள்
திரைப்படங்கள் முதல் மொபைல் செயலிகள் வரை பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அனிமேஷன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கண்டுபிடிக்கப்போகும் பொருள்களுக்கு முன்வடிவம் கொடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனிமேஷன் உதவுகிறது.
நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ்
மருத்துவப் படிப்பு என்றால் எம்.பி.பி.எஸ் என்று மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அதைத் தாண்டியும் பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்தான் எம்.பி.பி.எஸ்-க்கு அடுத்தபடியாகப் பலரும் கால்பதிக்கும் இடமாக இருக்கிறது. இதற்கும் அடுத்தபடியாக இருப்பது, நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ். இந்தப் படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
வர்த்தக கலை படிப்புகள்
கடந்த கால் நூற்றாண்டாக அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இப்போது அந்தப் படிப்புகளுக்கான வரவேற்பு சற்றுக் குறைந்து, வர்த்தகப் படிப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கித் துறை, இன்சூரன்ஸ் துறை, மியூச்சுவல் பண்ட் துறை எனப் பல துறைகள் கணினி மயமாகிவிட்டன. இதனால் அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை வழங்கப்படுவது சாத்தியமாகி இருக்கிறது.
மீன்வளப் பொறியியல்
மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப் பலரும் அறிந்த பொறியியல் படிப்புகள் ஒருபக்கம் இருக்க, மீன்வளப் பொறியியல் போன்ற பலரும் அறியாத பொறியியல் பாடப்பிரிவுகள் நிறையவே உள்ளன. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கும் பிரிவும் நல்ல கல்லூரியும் அவசியம்.
மீன்வளத்துறை சார்ந்து மீன்வளப் பொறியியல் நான்காண்டு படிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 35 இடங்கள் சேர்க்கைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்புகள்
மனிதர்களுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவப் படிப்புக்கு என்றுமே தனி மவுசு உண்டு. காரணம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களின் தேவையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போதைய சூழலில், மருத்துவத்துறையில் தனிப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ரோபாட்டிக் சர்ஜரி, ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ் முதலிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும்பட்சத்தில் மருத்துவப் படிப்பு படித்தவர்களுக்கு இனி சிறப்பான வரவேற்பு கிடைக்கும். கால்நடைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இனிவரும் காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்
பொறியியல் துறையை எடுத்துக்கொண்டால், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொறியியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பொறியாளர்களுக்கான தேவை என்றுமே அதிக அளவில் உள்ளன. ஐ.டி தொழில்நுட்பத்தின் தேவை குறிப்பிட்ட சில பிரிவுகள் என்றில்லாமல், இன்று அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுகின்றன.
தாவரவியல் மற்றும் விலங்கியல்
இளங்கலை மூன்றாண்டு படிப்பான தாவரவியல் மற்றும் விலங்கியல், பலராலும் கவனம் பெறாத படிப்பாக உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான அடிப்படை, பள்ளிகளில் படிக்கிற தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகள்தாம். இன்று தனியார் கல்லூரிகள் அதிக அளவில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளை வழங்குவதில்லை. இதனால் பள்ளிகளில் இந்தப் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகள் படித்தால் எதிர்காலத்தில் குறைந்தபட்சம் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.
கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு
எல்லோருக்கும் தெரிந்த படிப்புதான் கணிதம் என்றாலும் இன்றைக்கு கம்ப்யூட்டர் மற்றும் நிதி சார்ந்த துறை உள்பட பல்வேறு படிப்புகளுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றனர் கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பினைப் படித்த மாணவர்கள். ஆசிரியர் பணி என்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பினைத் தாண்டி, டேட்டா அனாலிட்டிக்ஸ், ஆக்சூவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்பு இருக்கிறது. வெறும் கணிதப் படிப்பு என்பதுடன் நின்றுவிடாமல், பைதான், ஆர் லாங்குவேஜ் ஆகிய படிப்புகளையும் கற்று வைத்திருந்தால், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இளங்கலை கணிதப்படிப்பு படித்தாலே நல்ல வேலை கிடைக்கும் என்கிறபோது, முதுகலை கணிதப் படிப்பினைப் படித்தால் எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.