என் மலர்
நீங்கள் தேடியது "Puthiya Tamilagam"
- பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஏற்கனவே தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலையின்றியும், ஊதியம் இல்லாமலும் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது கட்சியினர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினர் உரிய அனுமதி இல்லாமல் அதிகமான வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பைக் அதானி குடும்பம் கெடுத்துள்ளது.
- அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி (வயது 62). இவர் இந்தியாவின் 2-வது பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ளார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சார வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஆந்திரா, ஜம்மு- காஷ்மீர் சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் அதானி குடும்பத்தின் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதானிக் குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பிற்கு பெரும் பங்கம் விளைவித்துள்ளது. அதானி குறித்து குற்றச்சாட்டை ஹிண்டன் பர்க் கடந்த வருடம் கூறிய பொழுது அது CIA சதி என்று கடந்து போய் விட்டோம். ஆனால், இந்த முறை அமெரிக்க அரசு அதானியின் முறைகேட்டைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, பல ஆதாரங்களுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி குடும்பத்தின் சூரிய ஒளி மின் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னரே அம்மாநிலங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. அதானி கம்பெனியின் சோலார் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால் பல மாநில அரசுகள் வாங்க மறுத்துவிட்டன. எனவே பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை ஊழல் படுத்தி அதிக விலைக்கு அதானி குடும்பம் தனது சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளனர்.
மேலும், இதன் மூலம் அதானி கம்பெனியின் வர்த்தகத்தை மிக உயர்த்தி காட்டி அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈர்த்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் சட்டப்படி, இது மிகப்பெரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எவரும் ஒதுங்கிப் போய் விட முடியாது. அண்மைக்காலமாக அடிக்கடி மின் கட்டண உயர்வும், அதனால் தொழில் நிறுவனங்கள் அபரிவிதமான மின்சாரக் கட்டண உயர்வால் பல தொழில்கள் நொடிந்து போய் விட்டன. அதிகாரிகள் ஊழல் எனும் வியாதிக்கு ஆட்பட்டு, அதிக விலைக்கு மின்சாரக் கொள்முதல் செய்வதால் தான் அந்த கூடுதல் விலை சாதாரண மக்களின் தலையில் சுமத்தப்படுகிறது. எனவே அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டை எளிதில் கடந்து போக முடியாது.
இதேபோன்று மத்திய அரசின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்களைக் குத்தகை எடுப்பதிலும் அரசியல் தலைமைகளையும், அதிகாரிகளையும் ஊழல் படுத்தாமல் கையகப்படுத்தி இருக்க முடியாது. மேலும், மிகக் குறுகிய காலத்தில் அதானி உலக அளவில் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டியிருக்க முடியாது. இப்போது சர்வதேச அளவில் முதல் பணக்காரர் என்ற நிலை மாறி, சர்வதேச அளவில் மிகப் பெரிய ஊழல்வாதி - குற்றவாளி என்ற நிலைக்கு அதானி தள்ளப்பட்டு இருக்கிறார். அதானி குழுமம் மீது மத்திய அரசு முறையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானியை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யக் கூடாது. இது 140 கோடி மக்களின் உலக அளவில் நன்மதிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அவர்களின் நலன் சார்ந்த விஷயமுமாகும்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 வருடங்களாக அதானிக் குடும்பத்திடமிருந்து கூடுதல் விலைக்கே சூரிய ஒளி மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் திருச்சுழி / கமுதி பகுதியில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை தமிழ்நாட்டில் மிக அதிக விலைக்கு பெற்றுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்களின் மீதான மின்சுமை அதிகரிக்கக் காரணமான அதானி குடும்பத்தின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் முழுமையாக விசாரிக்க. உயர்மட்ட விசாரணைக்கு அமைக்க வேண்டும். அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது. கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவின் அடையாளங்கள் அல்ல.! மாறாக அவமானச் சின்னங்களாக மாறி வருவது தடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் கள ஆய்வு பயணத்தை நேற்று தொடங்கினார்.
இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.
இதனிடையே, நெல்லை வரும் முதலமைச்சர் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். அப்போது முதலமைச்சரும் நேரம் ஒதுக்கி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் அரசு விழாவுக்குப்புறப்படும் போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இருட்டுக்கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.! என்று கூறியுள்ளார்.