என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Servevalaru dam"

    • இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
    • அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கன்னடியன் கால்வாய் பகுதிகளில் கனமழை கொட்டியது. அந்த பகுதியில் அதிகபட்சமாக 8.4 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அம்பை, வி.கே.புரம், ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

    அம்பையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ராதாபுரம், சேரன்மகாதேவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறில் 27 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 991 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு பெய்த மழையால் நீர்வரத்து 1433 கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 110.80 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 121 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 124.87 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3/4 அடி உயர்ந்து 77.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 593 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் மழை இல்லை.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி ஆகிய இடங்களிலும் இரவில் பலத்த மழை பதிவாகியது. இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா நதி நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 79 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி நீரே தேவை.

    • மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மணிமுத்தாறு வனப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு பகுதியில் 35 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 28 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 15.20 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை, மணிமுத்தாறு, களக்காடு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.05 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4½ அடி உயர்ந்து 121.72 அடியாக உள்ளது.

    இதேபோல் 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1½ உயர்ந்து 111.40 அடியாக காணப்படுகிறது.நேற்று 99.92 அடியாக காணப்பட்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று ½ உயர்ந்து 100.45 அடியாக உள்ளது.

    பிரதான அணையான பாபநாசத்திற்கு வினாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று கூடுதலாக 900 கணஅடி தண்ணீர் கூடுதலாக வருகிறது.

    இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளில் நலன் கருதி கடந்த 5 நாட்களாக மணிமுத்தாறில் குளிக்க தடை விதித்கப்பட்டிருந்தது. இன்று 6-வது நாளாக அங்கு குளிக்க அனுமதிக்கபடவில்லை.

    இதேபோல் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்த படி தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் நேற்று தலையணையில் குளிக்க களக்காடு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. அதிகப்பட்சமாக புளியங்குடியில் 44 மில்லி மீட்டரும், சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், ராமநதியில் 19 மில்லி மீட்டரும் மழை பாதிவாகி இருந்தது.

    இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, கருப்பாநதி பகுதி, அடவிநயினார் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சூரன்குடியில் 42 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 28 மில்லி மீட்டரும், வேடநத்தத்தில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதேபோல் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கீழ அரசரடி, காடல்குடி, வைப்பாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்தது.


    மழை காரணமாக சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை குண்டும்,குழியாக காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரியாததால் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    நேற்று இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×