search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்காள தேசத்தினர் 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொழிலாளர்களோடு வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன், 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வாங்கி சரிபார்த்தனர்.

    அப்போது சிறுபூலுவம் பட்டி அத்திக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்காள தேசத்தினர் தங்கி வேலை பார்ப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பணியாற்றி வ ந்த வங்காள தேசத்தை சேர்ந்த அலாம்கிர் (27),சுமன்(21), மஞ்சுருல் ஹக் (24), அப்துல் கலாம்(31), கோகான் (30), டோலான் ஹூசைன் (21), ஜோஜிப்மியா (27), முக்தர் மியா(35), ஆஷிக் (25), லல்மியா(24), கபீர் ஹூசைன்(30), நூருல் (23),‌ ஷமின் (21), ஹபிபர் (25), குகான் (25), ரபிக்யுசிலிலேம் (50), ஜகான்கிர்லம் (40), பிஜாஸ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது அவை போலியானது என்பது தெரிய வந்தது. இந்த ஆதார் அட்டைகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அச்சடித்து உள்ளனர். ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 1500 வரை கொடுத்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வங்காள தேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாநகர போலீசார் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனுமதியின்றி தங்கி உள்ள வங்காள தேசத்தினர், நைஜீரியாவை சேர்ந்தவர்கள் பற்றி தகவல் கொடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.



    பிளஸ்-1 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    திருப்பூர்:

    பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் 97.93 சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 984 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 23 ஆயிரத்து 487 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த ஆண்டு 96.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 1.53 சதவீதம் கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் 95.61, மாநகராட்சி பள்ளியில் 96.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருப்பூர் கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு வெளியான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் பனியன் தொழிலாளி கொலையில் அவரது தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.

    ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமி‌ஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

    போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.

    கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.

    விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.

    உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி இருந்தது. #LokSabhaElections2019
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களில் காலையிலேயே திரண்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மதியம் சுட்டெரித்த வெயிலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்தது.

    மாலை 3 மணிக்கு பிறகு மீண்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை 6 மணிக்கு வரிசையில் காத்து நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஓட்டுப் போட்டனர்.

    மொத்தம் 19 லட்சத்து 58 ஆயிரத்து 577 வாக்காளர்கள் கொண்ட கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இதில் இறுதி நிலவரப்படி பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 66.69 சதவீதமும், சூலூரில் 72.43 சதவீதமும், கவுண்டம்பாளையத்தில் 64.60-ம், கோவை வடக்கில் 58.91, கோவை தெற்கில் 60.28, சிங்காநல்லூரில் 60.11 சதவீதம் என சராசரி யாக 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    15 லட்சத்து 20 ஆயிரத்து 278 வாக்காளர்கள் கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இதில் இறுதி நிலவரப்படி தொண்டாமுத்தூரில் 66.39, கிணத்துக்கடவு தொகுதியில் 69.36, பொள்ளாச்சியில் 75.79, வால்பாறையில் 71.27, உடுமலையில் 71.61, மடத்துக்குளத்தில் 72.36 என சராசரியாக 70.78 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத் தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் இறுதி நிலவரப்படி பெருந்துறையில் 81.66 சதவீதமும், பவானியில் 79.81, அந்தியூரில் 77.86, கோபியில் 80.67, திருப்பூர் வடக்கில் 62.67, திருப்பூர் தெற்கில் 62.08 என மொத்தம் 72.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பவானிசாகரில் 79.1, உதகையில் 66.9, கூடலூரில் 73.1, குன்னூரில் 71.7, மேட்டுப்பாளையத்தில் 74.3, அவினாசியில் 74.9 சதவீதம் என மொத்தம் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 4 சதவீதம் குறைந்து 64 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இம்முறை 2.2 சதவீதம் குறைந்து 70.78 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது. திருப்பூர் தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 76.27 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில் இம்முறை 3.33 சதவீதம் குறைந்துள்ளது. #LokSabhaElections2019
    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #Tirupur #ToxicGas
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



    அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupur #ToxicGas
    திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ElectionFlyingSquad #LokSabhaElections2019
    திருப்பூர்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், மொத்தமாக பணம் கொண்டு செல்வதை தடுக்க தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட்டபோது அதில், கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அது வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், போத்தனூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். வங்கி நிர்வாகிகள் உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். #ElectionFlyingSquad #LokSabhaElections2019
    திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது.  #Parliamentelection #LSPolls

    திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரம், துணிகள் எரிந்து சேதம் அடைந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நடராஜ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அதுல் ஆசாத் (56). இவர் 15 வேலம்பாளையம் ரிங் ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு வேலை முடிந்து ஊழியர்கள் பனியன் நிறுவனத்தை பூட்டி சென்றனர்.

    அதிகாலை 4.30 மணியளவில் பனியன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பனியன் நிறுவன உரிமையாளர் அதுல் அசாத் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இரு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் உடனடியாக அணைக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

    இந்த தீ விபத்தில் எந்திரங்கள், 20 தையல் மிஷின்கள், பல லட்சம் மதிப்புள்ள துணிகள், டீ சர்ட்டுகள் எரிந்து சேதம் அடைந்தது. இதனை பார்த்து பனியன் நிறுவன உரிமையாளர் கதறி அழுதார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தண்ணம் பாளையம் சபரி பிரியா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். பனியன் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீடு திறக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது வீடுகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இது குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீநாத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது. நகை- பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் கேட்டபோது நகை- பணம் இருந்தது என்று கூறினார். ஸ்ரீநாத் திருப்பூர் விரைந்துள்ளார். அவர் வந்த பின்னரே திருட்டுபோன நகை- பணம் குறித்து விபரம் தெரியவரும்.

    திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-ஆண்டிபாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். அவர்களின் நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 19) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினமுத்து (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி திருப்பூர் மங்கலம் ரோடு ஜான் ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் புகுந்து, அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத பிரதமரின் கிஸான் திட்டம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் விபரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் பணி மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தலைமையில் தாங்கினர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் மற்றும் கலெக்டர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 10-ந்தேதி சட்ட மன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    முன்னதாக, மேலாண்மை இயக்குநர் மற்றும் கலெக்டர் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி, காங்கயம் தாசில்தார் அலுவலகம், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு விவசாயிகள் குறித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஷ் பச்சாவு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    திருப்பூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் புறப்பட்டனர்.

    அமராவதிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பலியானவர்கள் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் (வயது 34), பனியன் தொழிலாளி அய்யாசாமி (45) ஆகியோர் என்பதும் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.

    ×