search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு"

    பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    ‘பணக்காரர்’ என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

    இதோ...

    1. தூண்டுதலைத் தாண்டுங்கள்

    ‘இது எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசைத் தூண்டுதலை உங்களால் புறக்கணிக்க முடிந்தால், பணம் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு பெரிதாகத் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    2. சிறந்தவராக மாற முயலுங்கள்


    உங்கள் பணியில் அல்லது தொழிலில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.



    3. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்

    பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும், ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எளிய வாழ்க்கை எல்லோருக்கும் ஏற்றது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், ஆடை, அணிகலன்களுக்கான செலவைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    4. நிதித் திட்டமிடல் அவசியம்

    பணத்தைச் சேமிக்கும், செலவழிக்கும் வழிகள் குறித்த நிதித் திட்டமிடல் முக்கியம். உங்கள் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆகும் பயணம் தொடங்கும். நல்ல பொருளாதாரத் திட்டத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்யவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். நமது வருமானம், செலவுகள் பற்றிய தெளிவான பார்வை நமக்கு இருந்தால், ‘பட்ஜெட்’டில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிது.

    5. முதலீட்டுக்கு முக்கியத்துவம்

    பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறமை, அதிர்ஷ்டம், வாரிசுரிமை போன்றவற்றை மட்டும் பொறுத்ததல்ல. கையில் உள்ள பணத்தை தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருவதும் முக்கியம். வளமாக உள்ள பலரும் கூட சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார்கள் அல்லது தப்பான ஆலோசனைகளைக் கேட்டு தவறான முதலீடுகளில் பணத்தைப் போட்டு இழக்கிறார்கள். முதலீடு செய்வதற்கு பெருந்தொகை தேவை என்று எண்ணத் தேவையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் போன்றவற்றில் சிறுதொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே நாளடைவில் பணக்காரர் ஆகிவிடலாம்.
    நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதியையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ முடியாது. அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையும் பார்க்க வேண்டும். நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

    எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.

    மொத்த நிலுவை தொகையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதம் உள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்ற கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 எடுத்தால் அதற்கு 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.



    மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

    நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

    இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.

    எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...
    நம் அனைவருக்கும் பொருளாதாரம் சார்ந்த கனவுகள், இலக்குகள் உண்டு. அது, வீடு வாங்குவதாக இருக்கலாம், நிலம் வாங்குவதாக இருக்கலாம், கார் வாங்குவதாக இருக்கலாம், வங்கி இருப்பு குறிப்பிட்ட தொகையை எட்ட வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    திட்டமிட்டுச் செயல்பட்டால் இத்தகைய கனவுகளை ஒருநாள் நனவாக்க முடியும். உதாரணமாக, முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    பல்வேறுபட்ட விதங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்களது வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். ஆனால் உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு புத்திசாலித்தனமான முதலீடு முக்கியம்.

    அது என்ன புத்திசாலித்தனமான முதலீடு, அதன் அம்சங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்...

    * முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டில் இருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன் களைக் கணக்கிடுவது முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை அறிவுப்பூர்வமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

    * முதலீடு குறித்த முறையான ஆராய்ச்சி முக்கியம். நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான அறிவு பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    * முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், பங்குச் சந்தை எங்கு செல்லும் என்பதை ஊகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.

    * நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.

    * பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் அந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.

    * உங்கள் முதலீடுகளின் செயல் திறனைச் சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் ‘போர்ட்போலியோ’ செயல்திறனைக் கண்காணிக்கவும். மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.

    * சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்துகொள்ளுங்கள்.

    * ஒரு சில முதலீடுகள் உடனடியாகப் பணம் எடுக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஓர் அவசர சூழ்நிலையிலும் அத்தகைய முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

    * முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை யதார்த்தமாகவும், அறிவார்ந்த விதத்திலும் எடுங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருபோதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட நிதி இலக்குகளை எட்ட முடியாது என்பதை உணருங்கள்.
    மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
    தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.

    மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.

    ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

    வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.

    அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

    பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

    வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
    ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...
    எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான். சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும்.

    சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும். அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.

    அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.

    உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?

    பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...

    உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.

    இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

    இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.

    ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.

    வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.

    மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும். 
    வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
    வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    உதவும் காப்பீட்டு திட்டங்கள்

    அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடன் மறு சீரமைப்பு

    வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

    கூடுதல் தொகை காப்பீடு

    பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

    காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

    கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

    கடனோடு இணைந்த காப்பீடு

    வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
    நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    அப்படியென்றால், சொத்தை வாங்கும்போது எந்தெந்த வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

    எனவே, ஆவணத்தை கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது. நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசு சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டும்.



    எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தைப் பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். சலுகை விலையில் கிடைக்கிறது என கருதி அவசர அவசரமாக வாங்கி, அவதிப்படுவதை தவிருங்கள். பிரச்சினை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.

    நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல வில்லங்கச் சான்றிதழ் 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
    தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...
    இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக ‘டெபிட் கார்டு’ உள்ளது.

    வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது.

    இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம்.

    வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை ‘பிளாக்’, அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.

    உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.

    இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்...

    உங்களது ‘யூசர் ஐடி’ மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள்.



    ‘ஈ- சர்வீசஸ்’ எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே ‘பிளாக் ஏடிஎம் கார்டு’ என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

    பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும்.

    நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.

    அதை உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும்.

    வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.

    கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.

    டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

    அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும். 
    கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.
    ‘கோடீஸ்வரர்’ ஆக வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பமில்லை?

    ஆனால், படிப்படியாக கோடீஸ்வரர் நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்றால், சில விஷயங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசனை நிபுணர்கள்.

    அவை பற்றி...

    * ‘எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசை தூண்டுதலை உங்களால் கடக்க முடிந்தால், நிதி நிர்வாகத்தில் பெரிய திறமை பெற்றவராகிவிடுவீர்கள். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு விலைமதிப்பில்லாததாகத் தெரிந்தாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் நெருக்கடியான காலத்தில் உதவும். அதை நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    * நீங்கள் உங்கள் பணியில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்கினீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை அயராது இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றி சிறப்பான பலன்களைப் பெறமுடியும். எல்லோரையும் போல நாமும் பணி செய்வதைக் காட்டிலும், செய்வதை சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

    * குறைந்த பட்ஜெட்டிலும் உங்களால் சீரான வாழ்க்கை வாழ முடியுமா என்று முயன்று பாருங்கள். பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பீர்களா? உங்கள் தேவைகளுக்காக முன்கூட்டியே பணத்தைச் சேர்த்து வைக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவு. நாம் நினைப்பதற்கு மாறாக பணக்காரர்கள் பலரும் எளிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். உலகப் பெரும் பணக்காரர்கள் மார்க் சக்கர்பெர்க், வாரன் பப்பெட் போன்றோரைச் சொல்லாம். அவர்கள் ஆடம்பரமற்ற வாழ்க்கையை விரும்புவது, சிக்கன குணத்தால் அல்ல, எளிமை வாழ்க்கையின் சுகத்தை உணர்ந்ததால்தான்.



    * நாம் செலவழிக்கும் முறையானது, நமது நிதிநிலை மற்றும் சொத்துகள் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைக் குறைத்தல், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்கிப் போடுவதைத் தவிர்த்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    * உங்களின் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆவதற்கான பாதை துவங்குகிறது. நல்ல பொருளாதார அடித்தளத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல், உங்களின் தேவைகளுக்கான செலவுகளை மாதாமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்ய வைத்து அதிகமாகச் சேமிக்க வழிவகுக்கும். உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நிதித் திட்டமிடலில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிதாக இருக்கும்.

    * பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறன் அல்லது அதிர்ஷ்டம் அல்லது வாரிசு உரிமை போன்றவற்றைப் பொறுத்ததல்ல. ஆனால் செல்வச் செழிப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலும் முதலீட்டாளர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். முதலீடு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்றே நாம் நினைப்போம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சிறுதுளிகள் ஒன்று சேர்ந்து பேராறாக உருவாவது போல, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்துவரும் சிறிய அளவிலான தொகையும், சரியான சொத்து முதலீடும் விரைவில் உங்களைக் கோடீஸ்வரராக மாற்றும்.

    கோடீஸ்வரர் ஆவது மட்டுமல்ல, அதை நோக்கிய பயணமும் சுகமானதுதான். அலுக்காமல் சலிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே இருந்தால், கடைசியில் மலை உச்சியை அடைந்து விடலாம்தானே?
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம்.

    ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது? இந்தக் கேள்வி அவ்வப்போது நமக்குள் எழும்.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் எண் கொண்டவைதான்.

    நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவு செய்ய முடியும்.

    பொதுவாக டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் ஏன் சிறந்தவை என்பது குறித்துப் பார்க்கலாம்...

    கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது ‘கேஷ் பேக்’, தள்ளுபடி போன்ற பலவிதமான சலுகைகள் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளும் கிட்டும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை முன்னேற்றம், புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும். டெபிட் கார்டில் எப்போதாவதுதான் இது போன்ற பலன்கள் கிடைக்கும்.

    கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும்போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால், நம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட அபாயம் இல்லை. நமக்குரிய வரம்பை மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது.

    நாம் ஏதேனும் கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் நமது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பெண்ணை சோதிக்கும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எனவே எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும்போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது.

    இதெல்லாம் ஒப்பீட்டு அளவில், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டை முன்னே நிறுத்தும் விஷயங்கள்.

    அதேநேரம், கிரெடிட் கார்டு தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தைச் செலுத்தியதற்கு அபராதமும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.

    கையில்தான் கார்டு இருக்கிறதே என்று, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்க விரும்புவோருக்கும் கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமலே செலவழிக்க முடிவது இன்று இனித்தால், நாளை நீளமான ‘ஸ்டேட்மெண்ட்’ வரும்போது கசக்கும்.

    ஓர் ஆசையில் நம்மை மீறிச் செலவழித்துவிடுவோம் என்று எண்ணுபவர்களும், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர்களும் கிரெடிட் கார்டை நாடாமல் இருப்பதே நல்லது.
    புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் பெண்கள் அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் இளைஞர், இளைஞிகள், அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தமது தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதித்தும் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிப்போர் அதிகம்.

    பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போதே, அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது வாழ்க்கை முழுவதும் உதவும்.

    பணத்தைச் சரியாக செலவழிப்பது என்பது, பணம் சம்பாதிப்பதற்கு ஈடான கடினமான விஷயம்.

    சேமிப்பு, முதலீடுகள், சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் நம் சம்பாத்தியத்தின் வாயிலாக நமது எதிர்கால நிதிநிலையைப் பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

    புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளவர்கள், தமது சம்பாத்தியத்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பார்ப்போம்...

    * பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டிங் துறை, விளம்பர பட்ஜெட்டையும், உற்பத்தித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துக் கொள்வது போல, தனி மனிதரான நீங்களும் ஒரு பட்ஜெட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருவாயில் 60 சதவீதத்துக்கு மிகாமல் செலவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் வரவு- செலவு திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாமல், உங்கள் வரவு செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த பட்ஜெட் கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமானதாக இருக்கக் கூடாது.

    * உங்கள் வரவு- செலவுத் திட்டம், சோதனை முறையில் பல்வேறு தவறுகளையும், சோதனைகளையும் கடந்த பின்னர்தான், நேர்த்தி ஆகும். உங்களைத் தேவையற்ற செலவுகளை நோக்கி இழுக்கும் விளம்பரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மிஞ்சும் தொகை உயரும். செலவு பிடிக்கும் சில பழக்கங்களைக் கைவிடுவது கடினம்தான். உதாரணமாக, அடிக்கடி ஓட்டல், சினிமா செல்வது போன்றவை. ஆனால் தேவையற்ற செலவுகளுக்கு கடிவாளம் போட்டால்தான் சேமிப்பு உயரும்.

    * நிதி விஷயத்தில் நாம் எட்ட வேண்டிய குறுகிய கால, நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்போது, அதைத் தொடர்வதற்கான ஆர்வம் கூடும்.

    * கிரெடிட் கார்டுகள் என்பது அத்தியாவசியமான விஷயம் என்று கூற முடியாது. நீங்கள் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்குக்கு வந்துவிட்டீர்கள் என்றால், அது குறித்து ஆலோசிக்கலாம்.

    * உங்கள் பணியிடமும், நகரமும் அடிக்கடி மாறக்கூடியதாக இருந்தால், அதற்கேற்ப ஒரு நெகிழ்வான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறுவோருக்கு வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் திட்டங்கள் தேவையில்லை.

    * உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, 3 வருடத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், 3 வருட முதலீட்டுத் திட்டத்தில் இணையலாம்.

    * சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன் நிச்சயமற்ற சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறும்போதோ அல்லது வருவாயில் துண்டு விழும்போதோ இந்த அவசரகால நிதி உங்களுக்கு உதவும்.

    * பங்குச்சந்தைகள் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் ஈக்விட்டி தொடர்பான சேமிப்புத் திட்டங்கள், புராவிடன்ட் பண்ட், டிவிடன்ட் பண்டில் முதலீடு செய்யுங்கள். ஓய்வு காலம் குறித்து யோசித்து அதற்குத் திட்டமிடுங்கள்.

    * உங்களின் முதலீடுகள், நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை சில நேரம் மோசமான சரிவை சந்திப்பதால், அது குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வரை அதில் இறங்கும் ‘ரிஸ்க்’கை தவிர்க்கலாம்.

    * ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

    * இன்றைய சூழலில், வங்கிக் கடனை தவிர்க்க முடியாது. ஆனால் எதற்காக கடன் பெறுகிறோம், அதை எவ்வாறு முறையாக திருப்பிச் செலுத்துகிறோம் என்பது முக்கியம். நீங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறிழைத்தால், அது உங்கள் கடன் மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெறுவது சிக்கலாகும். எனவே இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆண்டுகள் நகர நகர, உங்கள் சம்பளம் உயரும் அதேநேரத்தில், செலவுகளும் கூடும். எனவே நமது சேமிப்புகள், முதலீடுகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.
    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
    இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.

    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம்.

    உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா? அது நம்மைப் பாதிக்குமா?

    இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்...

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

    உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும்.

    குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும்.

    அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும்.

    நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும்.

    அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம்.

    அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க.

    நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும்.

    உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம்.

    நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

    சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன.

    ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

    சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி?

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்யப் பல வழிகள் உள்ளன. அவை...

    வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம்.

    மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம்.

    இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

    வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

    கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.
    ×