search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111306"

    பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் களைகட்டியது. ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பண்ருட்டி:

    செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி, பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, மாளிகம்பட்டு, கீழக்குப்பம், நடுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கீழ்மாம்பட்டு, மேல் மாம் பட்டு, காடாம்டபுலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், சிறுதொண்டமாதேவி, தாழம்பட்டு, காளிக்குப்பம், நடுவீரப்பட்டு, புலியூர்காட்டுசாகை, அரசடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில்தான் பலாப்பழ சீசன் களை கட்டும்.

    கடந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் பண்ருட்டி பகுதியில் உள்ள பலா மரங்கள் குறைந்த அளவே காய்த்துள்ளன. விளைச்சல் குறைந்திருந்த போதிலும் அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் விற்பனைக்காக வேன்கள், மினி லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் தினமும் பண்ருட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் தற்போது பலாப்பழ சீசன் களை கட்டியுள்ளது.

    பண்ருட்டியில் உள்ள மொத்த வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மேலும் பல வியாபாரிகள் பண்ருட்டிக்கு வந்து, பலாப்பழங்களை வாங்கிச்செல்கிறார்கள்.

    மழையில்லாததால் பலாமரங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பலாப்பழங்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து ஒரு டன் பலாப்பழம் ரூ.20 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினர். ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் பலாப்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கப்படுகிறது.

    பண்ருட்டி அருகே வேன் டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சண்முகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21) வேன் டிரைவர்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் விஜயகுமார் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே விஜய குமார் கடப்பாரையால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    விஜயகுமாரை கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    பண்ருட்டி அருகே விவசாயியை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வீரசிங்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45), விவசாயி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சக்கரவர்த்தி, அவரது மகன் பாலமுருகன் மற்றும் உறவினர்கள் ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேரும் நேற்று வேல்முருகன் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வேல்முருகனை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். புகாரின் பேரில் சக்கரவர்த்தி, பால முருகன், ராஜசேகர், காசிலிங்கம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்னுபிரியா, ஜவ்வாதுஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிரசோதனை நடத்தினர்.

    அப்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் மளிகைகடை நடத்திவரும் குமார் (வயது 42) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பண்ருட்டி அருகே மினி லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பூங்குணம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 70). இவர் இன்று காலை பூங்குணம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு கனகராஜ் சென்றார்.

    அப்போது அந்த வழியாக பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கனகராஜ் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கிலும், நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறை யான்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடை பெற்று வருகின்றன.

    கடந்த சிலநாட்களுக்கு முன்பு கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள டாஸ் மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். அதுபோல் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் சந்தைதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை மீது மர்ம நபர்கள் பெட் ரோல்குண்டு வீசினர். இதில் கடையில் இருந்த ஊழியர் கண்ணன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று மாலை திடீரென்று கடலூர் வந்தார்.

    அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று ஐ.ஜி.ஸ்ரீதர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதமடைந்த கம்மியம் பேட்டை, பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கடைகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்ட அரசு பஸ் சையும் ஐ.ஜி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதையடுத்து பணிக்கன் குப்பம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று இரவு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரங்கநாதன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி பண்ருட்டியில் 2 பஸ்களின் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சதித்திட்டம் தீட்டியதாக கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று புதுவைக்கு சென்று கொண்டிருந்தது.

    திருவதிகை அருகே சென்ற போது மர்ம மனிதர் ஒருவர் அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவதிகையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் வார்டு செயலாளர் சக்தி என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி மணிநகரை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாபு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    பண்ருட்டி அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தின் காலனி சுடுகாடு அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த உடல் அரை நிர்வாணமாக இருந்தது.

    அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை யாரேனும் கொலை செய்து இங்கு உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காலனிசுடுகாடு அருகே கெடிலம் ஆற்றங்கரையோரம் 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில், அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடந்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசுக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் குமரய்யா, தாசில்தார் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.

    பிணமாக கிடந்த வாலிபரின் தலை நசுக்கப்பட்டிருந்தது. கையில் அரிவாள் வெட்டு இருந்தது. வலது கையில் ஸ்வஸ் த்திக் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது உடல் முழுவதும் என்ஜீன் ஆயில் ஊற்றப்பட்டிருந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    போலீஸ்சூப்பிரண்டு விஜயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தலையில் கல்லைபோட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலையை மறைப்பதற்காக உடலில் என்ஜின் ஆயில் ஊற்றி எரிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

    செம்மேடு சுடுகாடு அருகே இதற்கு முன் ஏற்கனவே வெளியூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்து இங்கு வந்து போட்டுவிட்டு தப்பிய சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போதும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த நபரை யாரேனும் கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவரா? அல்லது உள்ளூரை சேர்ந்தவரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம்மேடு பகுதியில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் யாரேனும் வாலிபரை கொலை செய்தனரா? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    இந்த கொலை தொடர்பாக செம்மேடு மற்றும் ஏரிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 24). இவருக்கும் கடலூரை சேர்ந்த அழகேசன் (28) என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை காலை கடலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சிதம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரஞ்சிதத்தின் அண்ணன் காசிமுத்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாயமான ரஞ்சிதத்தை தேடி வருகிறார்.

    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக இன்று நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.

    நடிகர் நெப்போலியனுடன் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உடன் வந்திருந்தார். #Tamilnews
    பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஓருவர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் காலனியை சேர்ந்தவர் கண்ணனன் (வயது 47). இவரது மனைவி அஞ்சலை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசன் என்பவரது மனைவி நாவம்மாள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அரசன் மற்றும் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலை மற்றும் இவரது கணவர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    காயமடைந்த கண்ணன், அஞ்சலை ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள்.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, அரசன் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், செண்பகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நாவம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×