என் மலர்
நீங்கள் தேடியது "புதுக்கோட்டை"
- மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
- கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.
இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
- கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து
ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.
பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.
மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.
இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.
ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
- புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது.
- அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது.
தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.
பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.
தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.
- டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
- கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
- புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
- காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு
- புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:
மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர். வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.
குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும்.
இக்கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சியில் உள்ள முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன் அவர்களின் இயற்கை விவசாய பண்ணையில் இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது40). வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரை கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த முகமது சுகைல் (32) என்பவர், தான் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
இந்த தொழிலில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய முகமது சுகைல் முதல் கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்சமும் கொடுத்துள்ளார். இதில் அவர் கொடுத்த தொகைக்கு வட்டியாக ரூ.19 லட்சத்தை முகமது சுகைல் வழங்கி உள்ளார்.
அதிக வட்டி தருவதாக கூறி அதில் இருந்தும் ரூ.10 லட்சத்தை கூடுதல் முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
நாளடைவில் முகமது சுகைல் வட்டியும் கொடுக்க வில்லை. பணமும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. அப்போது, ரூ.5 கோடிக்கு ஏலச்சீட்டு போட்டுள்ளதாகவும். அதற்கு தவணை தொகை செலுத்த ரூ.50 லட்சம் கிடைத்தால் அந்த சீட்டை எடுத்து, கடன்களை அடைத்துவிடுவதாக முகமது சுகைல் கூறியுள்ளார். இதையும் நம்பி ரூ.௫௦ லட்சத்தை முகமது பயாஸ் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு கொடுத்த பணம் ரூ.1.35 கோடியை திரும்பிக்கேட்ட முகமது பயாஸுக்கு, முகமது சுகைல் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் எஸ்பி அலுவல கத்தில் முகமது பயாஸ் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த போது, தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக எஸ்பி அலுவலகத்தில் முகமது பயாஸ் மீண்டும் ஒரு புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முகமது சுகைலையை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வாங்கிய தொகைகளை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
- இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்?
- இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்றவேண்டும் என்றும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டை குவளை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது என்றும் சில தனியார் திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம கலக்கப்படவில்லை எனவும் அதில் பாசி தான் கலந்துள்ளது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போல இரட்டை குவளை முறை போன்ற பாகுபாடுகள் அங்கு இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், "இரட்டை குவளை முறை நடைமுறையில் இல்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.
சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
பின்பு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும், மாட்டுச்சாணம் கலப்பு வழக்கின் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
- நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலம்.
- அனந்த சயன மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டியில் உள்ளது, கண்ணிறைந்த பெருமாள் திருக்கோவில். நவக்கிரகங்களில் சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.
திருமயம் குடை வரைக் கோவிலைப் போலவே சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இயற்கைச் சூழலில் அருகருகே ஒரே குன்றின் மீது எழுப்பப்பட்டுள்ள குகைக் கோவில்தான் மலையடிப்பட்டி கோவில். ஆலயக் கல்வெட்டுகளில் இவ்வூர் 'திருவாலத்தூர் மலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு வீற்றிருக்கும் ஆலயம், திருப்பதி ஆலயத்திற்கு நிகராக போற்றப்படுகிறது.
இங்குள்ள சிவன் கோவில், திருமால் கோவிலைவிட காலத்தால் முற்பட்டதாக இருக்கிறது. மலையடிப்பட்டி குகைக் கோவில் களுக்கு மிக அருகில் களியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்கால குகைக் கோவில்களும் காணப்படுகின்றன. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இவை அனைத்தும் உள்ளன.
மலையடிப்பட்டி கோவிலில், நந்திவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டு (கி.பி 775-826) இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் 16-வது நூற்றாண்டில், குறிப்பாக கி.பி. 730-ல் குவாவன் சாத்தன் என்பவரால் மலையைக் குடைந்து சிவனுக்குக் கோவில் எழுப்பட்டதாகவும், அந்த இறைவனுக்கு 'வாகீஸ்வரர்' எனப் பெயரிட்டதாகவும் செய்தி காணப்படுகிறது.
மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகி இருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.
வாகீஸ்வரர் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. அந்த மண்டபச் சுவரில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.
எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் அன்னை பராசக்தி சிங்கத்தின் மீது அமர்ந்து போரிட்டு வீழ்த்தும் காட்சியும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குகையை ஒட்டியுள்ள முன்மண்டபம், விஜயநகர கால கலைப்பணியை சார்ந்தது.

சிவன் குகையின் மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை காணப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில், பள்ளிகொண்ட பெருமாள் அருள்கிறார். சயன கோலத்தில் இருக்கும் இறைவன் 'பள்ளிகொண்ட பெருமாள்' என்றும், 'கண்ணிறைந்த பெருமாள்' என்றும், தாயார் 'கமலவல்லி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
விஷ்ணு குகைக் கோவிலானது கருவறையையும், அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டது. இங்குள்ள தூண்கள் சிவன் கோவிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காணலாம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.
மண்டபத்தின் சுவற்றில் வலதுபுறம் மகாலட்சுமியுடன் நரசிம்மரும், அமர்ந்த கோலத்தில் வைகுண்டப் பெருமாளும் உள்ளனர். இடதுபுறம் ஹயக்ரீவர் மற்றும் பெருமாள், விஷ்ணுவின் நிற்கும் தோரணையும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரே இடத்தில், ஒரே அறையில் விஷ்ணுவின் நின்ற, இருந்த, கிடந்த (நின்று, உட்கார்ந்து, உறங்கும்) கோலங்களைக் கொண்ட மிகச் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
சயன பெருமாளை சுற்றிலும் 5 தலை கொண்ட ஆதிசேஷன், நாரதர், தும்புரு, பிரம்மா, ஜாம்பவான், தேவர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் கையில் தாமரையை வைத்திருக்கிறார்கள். தாயாரின் சன்னிதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.
மேலும் இந்தக் குகைக் கோவிலில், ஆந்திரா மாநிலம் லேபாட்சியில் உள்ள ஓவியங்களின் சாயலைக் காணமுடியும். முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கையின் ஐந்து விரல்களை வைத்து, இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு, ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாசல்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம், ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்கும் என்கின்றனர்.
கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் இத்தல பெருமாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் குடைவரைக் கோவிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றை சுற்றி சில கல்வெட்டுகளும் உள்ளன.
கண்ணிறைந்த பெருமாள் கோவில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கூரை ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவை.
கோவிலுக்கு எதிரில் சக்தி வாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள் படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
இங்குள்ள அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு, அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத் தடை நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.
பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும், வேண்டுதல் நிறை வேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் இங்கு மரபாக உள்ளது. முன்னோர்களின் சாபம் நீங்க இப்பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம் ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயத்தில் வழிபட தீபாவளி, கார்த்திகை, ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடியில் இருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16 கிமீ தூரம் பயணம் செய்தும் மலையடிப்பட்டி குகைக் கோவிலை அடையலாம்.
- இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.
- மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை:
சிவகங்கை எம்.பி. கார்த்திசிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணி கணிசமான வாக்குகளை அந்த தொகுதியில் பெற்றுள்ளது.
ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தல் நடத்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருந்து அழுத்தம் அளித்து பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதால் தேர்தலை புறக்கணித்து உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது.
தமிழகத்தில் ஒத்தை சீட்டு கூட வாங்கலையா என்று கையை உயர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்டதாக நான் கருதுகிறேன். இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கு பெற்று வாதாடுவோம்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்து கோவில்களை அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பதவி ஏற்று உள்ளவர்கள் அறியாமையில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்து கோவில்கள், அறநிலையத்துறை அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும் . நீட் தேர்வில் வெளிப்படை தன்மை என்பது கிடையாது. தேர்வு நடந்த முறையில் வைத்து நான் சொல்கிறேன். எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்
மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தேவையில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுமூகமாகத்தான் உள்ளது. கோயம்புத்தூரில் கூட நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் இருவரும் பரஸ்பரமாக தான் உள்ளோம். எந்தவிதமான பனிப் போரும் கிடையாது. வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
- பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு - மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பயிற்சி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று புதுக்கோட்டையில் நடைப்பெற்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த விவசாயிகளையும் இவ்விழா ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற இவ்விழாவை ராஜ்யசபா உறுப்பினர் அப்துல்லா அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ஏற்பாடு செய்ப்பட்டு இருந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்து நூற்றுக்கணக்கான முக்கனி ரகங்களை கண்டு விவசாயிகளும், பொது மக்களும் அசந்துப் போயினர்.

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் முக்கனிகள் சார்ந்து உணவுக்காடு உற்பத்தி செய்வது குறித்து இவ்விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவின் நோக்கம் குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "தற்சமயம் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். குறிப்பாக இந்த ஆண்டு மாம்பழத்தில் வெறும் 30% மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. பலாவின் காய்ப்பு பாதியாக குறைந்து விட்டது, கணிக்க முடியாத சூறாவளிக் காற்று வீசினால் வாழை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அனைத்திற்கும் தீர்வாக நம் பாரம்பரியத்தில் இருக்கும் பலப் பயிர், பல அடுக்கு முறையை பின்பற்ற வேண்டும். எனவே உணவுக்காடு வளர்ப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவவும், மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கவும், ஆரோக்கியமான வாழ்வை பெறவும் முடியும். இதனை வலியுறுத்தும் விதமாகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது" எனப் பேசினார்.

இவ்விழாவை துவங்கி வைத்த அப்துல்லா பேசுகையில், "ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக இருக்கிறது. ஒருப்பயிர் சாகுபடியில் சென்றதால் தான் இந்நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்" எனப் பேசினார்.
மேலும் இவ்விழாவில் சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் 'நோய்க்கு தீர்வு நல்ல உணவுக்கான தேடலே' என்ற தலைப்பிலான காணொளி உரை திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூழலியலாளர் ஏங்கல்ஸ் ராஜா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன், பெங்களூர் IIHR -இன் முதன்மை விஞ்ஞானி ஜி. கருணாகரன், கேரளா மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CTCRI) முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப கழகத்தை (NIFTEM) சேர்ந்த முனைவர். வின்சென்ட் ஆகியோர் உணவுக்காடு குறித்த பல முக்கியத் தலைப்புகளில் பேசினர்.

மேலும் அக்ரி.பி. ஹரிதாஸ், இயற்கை மருத்துவர் கோ. சித்தர், கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர், குருபிரசாத் ஆகிய உணவுக்காடு முன்னோடி விவசாயிகளும், வல்லுநர்களும் முக்கனி விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழைப்பழ ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று குறிப்பிட்ட சில வகை மா மற்றும் பலா கன்றுகளை வாங்கிச் சென்றனர். கேரளாவை சேர்ந்த சக்கை கூட்டம் அமைப்பினரின் பலாவை கொண்டு செய்யப்படும் பல்வேறு உணவு பொருட்களின் கண்காட்சி மக்களை பெரிதும் ஈர்த்தது.
காவேரி கூக்குரல் இயக்கம் இவ்விழாவை இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.