என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் செய்வதாக நெல்லை இருட்டுக் கடை ஓனர் கவிதா கூறியுள்ளார்.
    • இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.

    நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா விளங்கி வருகிறது. இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் நெல்லையில் வைத்து பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.

    இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா கூறியதாவது;-

    எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.

    இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன். பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும். இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.

    எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

    அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

    மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    • சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது.
    • அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் வள்ளியை முருகப்பெருமான் திருணம் செய்தார் என்பதால் பக்தர்கள் 3 மாவட்டங்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபடுவார்கள். இதையடுத்து இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.

    தென் மாவட்டங்களில் குலதெய்வமாக வணங்கப்படும் சாஸ்தா அவதரித்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இதனால், இந்த நாளில் பக்தர்கள் தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து சாஸ்தா கேவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மகாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்க சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதனால் நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து தங்கினர். குழுவாக இருந்து கோவில் வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது நேர்த்திக்கடனாக பலரும் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேமிதமாக ஆடுகளையும் பலியிட்டனர்.

    பெரும்பாலான பக்தர்கள் இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் காலை 7 மணி முதலே முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கை கொண்டார் சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூரண பெருமாள் சாஸ்தா, களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா மற்றும் அய்யனார் கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    கடையம் தோரணமலை முருகன் கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண திருவிழா இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அருஞ்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், பூலுடையார் சாஸ்தா, இலங்குடி சாஸ்தா ஆகிய கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டி ருந்தது.

    விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் பொங்கலிட்டும், சைவ படையலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இரவு 12 மணிக்கு பிறகு, கருப்பசாமி மற்றும் பிற பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு, கிடா வெட்டி அசைவ படையல் போட்டு பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி யில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சாஸ்தா கோவில்களுக்கு சென்றனர். மேலும் வாடகை ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றிலும் குடும்பம் குடும்பமாக சென்றனர்.

    இந்த திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பங்குனி உத்திர திருவிழாவால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பூட்டிக்கிடந்த கோவில்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரத்தில் பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    • நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம் சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெருவில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன் கோவில் விலக்கு பகுதி உள்ளது. நேற்று இரவு இந்த பகுதியில் கண்டியப்பேரி விலக்கு அருகே சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி கமிஷனர் அஜிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் கடையில் சென்று விசாரணை நடத்தியபோது, 3 வாலிபர்கள் போதையில் சண்டையிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதனிடையே நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் குருநாதன் கோவில் அருகே சுடுகாட்டு பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, தலைமையிடத்து துணை கமிஷனர் வினோத் சாந்தாரம் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவர் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுடலை என்ற சிவா(21) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வாலிபரை கொன்று புதைத்த இடத்தை காட்டினார்.

    உடனே போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்த போது டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகனான ஆறுமுகம்(வயது 20) என்ற அல்லு ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து சிவாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம், 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதாகவும், இவர்களது காதல் சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனது தங்கையுடன் பழகுவதை விட்டுவிடுமாறு தனது நண்பரான ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறுமி வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் தனது தங்கையுடன் பழகிய ஆறுமுகத்தை தீர்த்துக்கட்டுவதற்கு சிறுவன் திட்டம் தீட்டியுள்ளான். அதன் அடிப்படையில் தனது நண்பர்களான சிவா மற்றும் 2 சிறுவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். அவர்களும் சிறுவனுடன் சேர்ந்து ஆறுமுகத்தை தீர்த்துக்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஆறுமுகத்தை நேற்று டவுன் குருநாதன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துள்ளனர். அங்கு மதுவாங்கி கொண்டு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து 5 பேரும் மது குடித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் ஆறுமுகம் மதுபோதையின் உச்சத்தை அடைந்துள்ளார். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 பேர் கும்பல் அவரை கத்தியால் கழுத்து அறுத்துக்கொலை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு குழியை தோண்டி அங்கேயே புதைத்து வைத்துவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவா மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அதேநேரம் கொலையாளிகளை இரவோடு இரவாக கைது செய்த போலீசாரை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பாராட்டினார்.

    • களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.

    நெல்லை மாநகரில் டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் கனமழை கொட்டியது. இரவிலும் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாளை சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மாவட்டத்திலும் களக்காடு, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வள்ளியூரில் யாதவர் தெருவில் மழை பெய்தபோது அங்குள்ள மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், அந்தநேரம் அவ்வழியாக சென்ற மாடு ஒன்று அதில் உரசியதால் மின்சாரம பாய்ந்து மாடு உயிரிழந்தது.

    சில இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ராதாபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம்போல் தேங்கி கிடந்தது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 8 சென்டிமீட்டரும், ராதாபுரத்தில் 6 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் மாலையில் இதமான காற்று வீசிய நிலையில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மக்களை குளிர்வித்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 99.54 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து எஸ்டேட்டில் 16 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 12 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி சுற்றுவட்டாரங்களில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் சாரல் மழை பெய்தது.

    ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் மாலையில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 63 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 53 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 26 மில்லிமீட்டரும், கடனா அணையில் 12 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி மாவட்டத்தை குளிர்வித்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் மேக கூட்டங்கள் திரண்டன. மாநகரின் எல்லை பகுதிகளில் பேட்டை, பழையபேட்டை, ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பேட்டை பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டியது. பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி பகுதிகளில் கனமழையால் நான்கு வழிச்சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 13.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் அங்கு கனமழை பெய்தது. அதிகபட்ச மாக ஊத்து எஸ்டேட்டில் 45 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டிய நிலையில் பாவூர்சத்தி ரம், புளியங்குடி, தென்காசி சுற்றுவட்டாரங்களில் மாலையில் பரவலாக மழை பெய்தது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    அங்கு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராயகிரி, உள்ளார், தளவாய்புரம், விஸ்வநாதபேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சிவகிரியில் 11 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 32 மில்லிமீட்டரும், அடவி நயினார் அணையில் 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் கனமழையும், வைப்பார், சூரன்குடி, மணியாச்சி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம், கடம்பூர், எட்டயபுரம் பகுதி களில் சாரல் மழை பெய்தது.

    • அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.

    • ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
    • இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை பிடித்தது.

    நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    • ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
    • இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை தொடர்பாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    • ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.

    ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.

    போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.

    ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.
    • காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். கழிவறை சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி இருந்துள்ளது.

    இந்த நிலையில் புனரமைப்பு பணிக்காக அந்த மீட்டரின் கீழ் பகுதியில் உள்ள பொருட்களை கஜேந்திரன் மகன் வேலாயுதம்(வயது 30) என்பவர் எடுக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மீட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வேலாயுதம் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் வேலாயுதம் அலறி துடித்தார்.

    வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது மாரியப்பன் என்ற தொழிலாளியை மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட கஜேந்திரன் வீட்டில் கால்நடை பராமரிப்பாளராக வேலை பார்க்கும் ரவி என்பவர் அங்கு ஓடி வந்து வேலாயுதத்தை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் மின் வயர்களை அறுத்து விட்டனர். தொடர்ந்து, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த வேலாயுதம் மற்றும் ரவியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.

    காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வேலாயுதம் ஆக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    உயிரிழந்த மற்றொரு நபரான ரவிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். ரவியின் கடைசி மகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு இன்று பள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×