என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெரினா"
- பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
- சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.
மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.
எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.
- பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.
- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க திட்டமிட்டு அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடை யும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.
பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.
சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட் டப்பட்டு உள்ளது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது.
இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற் கட்ட அனுமதி வழங்கிவிட்டனர்.
இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பி இருந்தது.
தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித் துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர்.
அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத் துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்தி ருந்தனர்.
இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித் துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னை :
காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந் தேதி (இன்று) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்பட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள்.
எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரைகள், இணை கமிஷனர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
போலீசாருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும் குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆண்டு மெரினா கடற்கரை மணற்பரப்பில் திறக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.
கடற்கரையையொட்டிய பகுதிகளில் தமிழ்நாடு போலீஸ்துறை கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதி குழந்தைகள் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட 2 பெரிய டிரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீசாரின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர்.
- காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.
தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை, மறுநாள் தைப்பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 4-ம் நாள் காணும்பொங்கல் கொண்டாடப்படும்.
சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் முக்கிய பண்டிகை பொங்கல் ஆகும்.அதன் பின்காணும் பொங்கல் தினத்தில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதலாகும்.வீட்டில் மூத்தவர்களின் ஆசி பெற்று அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு விளையாட்டுப் போட்டி, உறிஅடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீர சாகசபோட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர் கள் பங்கேற்பார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.பல ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதே காணும் பொங்கலின் சிறப்பு ஆகும்.
காணும் பொங்கலில் உறவுகள், நட்புகள், அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தினர், விரும்பாதவர்களையும் தேடி சென்று சிரித்து,ஆனந்தம் கொள்ள வேண்டும்.
17-ந்தேதி தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட மக்கள் திட்டமிட்டு உள்ளனர்.
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பல ஆயிரம் மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடுவார்கள். கார், வேன்களில் மெரினா கடற்கரைக்கு படையெடுத்து வர உள்ளனர்.மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தோட உள்ளது.
கடற்கரையில் சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாடுவார்கள். கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர். கண்ணாமூச்சி விளையாட்டும் களைகட்டும். வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் சாப்பிடுவார்கள்.
- சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது
- கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.
இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உதவி மையம் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
காணும் பொங்கலை முன்னிட்டு (17-ந் தேதி) மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன டிரோன்கள் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். மேலும் அவர், கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார்.
கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்