என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் மாளிகை"

    • கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
    • மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    சென்னை:

    பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

    இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.

    ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
    • துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவை எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.

    அதனை தொடர்ந்து அடுத்த நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்துக்கு இதே போல் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இதேபோன்ற மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதே போல் கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மோப்பநாய் பிரிவினர் கவர்னர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தினர். அவை போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது.

    இந்த 4 மிரட்டல் மின்னஞ்சல்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாக கொண்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரி, பிரெஞ்சு துணைத்தூதரகம், மாவட்ட கலெக்டர் அலுவலங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

    கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேரடியாக மிரட்டுவதற்கு பதிலாக முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு மிரட்டலை அனுப்பியிருத்தனர்.

    ஆனால் இந்த 4 சம்பவங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் டார்க் நெட்டை பயன் படுத்தியதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்ட போலீசார் மத்திய அரசின் நிறுவனங்களில் தொடர்பில் உள்ளனர்.

    மேலும் விசாரணை விரிவானதாகவும் ஒருங்கிணைத்த முறையிலும் இருக்க வேண்டும் என்பதால் மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைத்த மையத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ளனர்.

    மர்ம நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு புதுச்சேரி காவல்துறை இ-மெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மின்னஞ்சலை அனுப்பியவர்கள் எல்லை தாண்டிய (வெளிநாடு) அதிகார வரம்பைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

    எனவே வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • 13-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
    • பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை தவிர்த்தும், மறைந்த தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் புறக்கணித்தும் கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

    அவருக்கு எதிராக போராட்ட அறிவிப்புகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. 13-ந்தேதி அன்று கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதே போன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக 25 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு- பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் மாளிகை நுழைவு வாயில் உள்பட அனைத்து வாயில்களும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் கவர்னரை மாற்றக்கோரி தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

    அது மட்டுமின்றி கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் பெருவிழாவின்போது அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றும் மத்திய அரசு பயன்படுத்தும் அசோக சின்னமும் இடம் பெற்றிருந்தது.

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு-தமிழகம் என்பதற்கான விரிவான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதன் வெளிப்பாடாக இப்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரித்து வருகிறார்.

    கிண்டி கவர்னர் மாளிகையில் வருகிற 26-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் குடியரசு தின வரவேற்பு விழாவுக்காக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்கள் என்றும் தமிழக அரசு இலட்சினையும் (முத்திரை) அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார்.

    சென்னை:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை காலையில் மனு அளிக்க உள்ளார்.

    இதற்காக சைதாப்பேட்டை சின்னமலை அருகே இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகை செல்கின்றனர்.

    அங்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கிறார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க உள்ளார்.

    கவர்னர் மாளிகை நோக்கி நாளை அ.தி.மு.க. பிரம்மாண்ட பேரணி நடத்த இருப்பதையொட்டி சென்னை மற்றும் புறநகரில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் அதில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதுமையை கொண்டு வர வேண்டும்.
    • நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகையில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 3-வது மாநாடு நேற்று நடந்தது.

    மாநாட்டில் பல்கலைக்கழக வேந்தரும் தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நல்ல பேராசிரியர்கள், திறமையான மாணவர்கள் இருந்தும் தரவரிசையில் மாநிலம் பின்தங்கி உள்ளது.

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கழிப்பறைகள், வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் விடுதி வசதிகள் போன்ற முறையான உள்கட்ட அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஜி-20 மற்றும் யூத்-20 மாநாடுகளில் மாணவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக வேண்டும்.

    மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதுமையை கொண்டு வர வேண்டும்.

    நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

    இனிமேல் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிறந்த நடைமுறைகள் கொண்டுவரப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி செயல்பாடுகளுக்கும் விருது வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர்களின் நலனுக்காக ஆன்லைனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

    • சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி நடக்க இருக்கிறது.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    முன்னதாக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்குள்ள தர்பார் அரங்கத்தின் பெயரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம் என்று பெயர் மாற்றம் செய்து, அதற்கான கல்வெட்டையும் திறந்து வைக்க இருக்கிறார்.

    • போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
    • வெளிநாட்டு பிரஜைகளும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கவர்னர் மாளிகையில், 'நவராத்திரி கொலு-2023' அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. கவர்னர் ஆர்.என். ரவி சென்னை கவர்னர் மாளிகையில் வருகிற 15 -ந்தேதி நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கவர்னர் மாளிகையில் அக்டோபர் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்படஅனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

    நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல், விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

    பார்வையாளர்கள், சென்னை கவர்னர் மாளிகையின் வாயில் எண். 2-ல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும்போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

    வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார்.

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் 4 பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தி.மு.க. அரசு, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது. அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

    கவர்னர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காவல்துறை தி.மு.க.வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

    சென்னை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகத்துக்கு வருகை தரும் நிலையில் அவர் தங்க உள்ள தமிழக கவர்னர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து குடியரசுத் தலைவர் வருகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையம், கிண்டி கவர்னர் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் முன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்.

    பாதுகாப்புப் பணியில் மொத்தம் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது.

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை இணை போலீஸ் கமிஷனர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் ஆர்.பொன் கார்த்திக் குமார் ஆகியோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கி கூறினர்.

    இந்த நிலையில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கவர்னர் மாளிகைக்கு இன்று காலை நேரில் சென்றார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

    இதேபோல மத்திய உளவுத்துறை (ஐ.பி.) அதிகாரிகள் கவர்னர் மாளிகைக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

    ×