search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி"

    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் மது போதையில் கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள், தெரு மின்விளக்குக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களையும் தூக்கி எறிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை கிழித்து வெளியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (மார்ச் 04) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர். மாலை 4.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்றடைந்தது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மேள, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு அங்கேயே தங்குகிறார்.

    நாளை காலை அங்கிருந்து மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாளை பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    • பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
    • மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

    • குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் மன்ற பொருட்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ராமு (தி.மு.க.):- கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் இருந்து உள்ள கழிவுநீர் கால்வாய் 20 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் மண்தூர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    நாகரத்தினம் செந்தில் (அ.தி.மு.க.):- பால சுப்ரமணியன் நகர் பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும், சாலை அமைத்து தர வேண்டும்.பாஸ்கரன்:- குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி பாபு:- 14-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். முபாரக் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி மூலம் 24 வார்டுகளுக்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில், அங்கு குடிநீர் மோட்டார் பழுதால் கடந்த சில மாதங்களாக நகராட்சி வளாகத்திலேயே ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா ராஜசேகரன் (தி.மு.க.) பேசுகையில்:-

    9-வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு குளம் என பெயர் வைக்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்

    எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.

    • அச்சம் அடைந்த செல்வமணி பாம்பு பிடிப்பவருக்கு தகவல் அளித்தனர்.
    • பிடிப்பட்ட நாகப்பாம்பு வன பகுதியில் விடப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருத்தாளமுடையார் கோவில் தெருவை சேந்தவர் செல்வமணி. இவரது வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்தியது. இதனால் அச்சம் அடைந்த செல்வமணி குடும்பத்தினர் சீர்காழி சேர்ந்த பாம்பு பிடிக்கும் பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பாண்டியன் விரைந்து சென்று செல்வமணி வீட்டில் புகுந்த சுமார் 6 அடி நீள நாக பாம்பினை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிப்பட்ட நாகப்பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

    • ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.
    • கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.

    சீர்காழி:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்களில், விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதனை ஏற்று குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் விரைவு ரெயில்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந் தேதி முதல் விரைவு ரெயில்கள் நிற்கும் நிலையங்கள் விவரம் வருமாறு: -

    சென்னை எழும்பூர்-மதுரை ( வண்டி எண்-12637) விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்-12694) ரெயில் அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்-16752) ரெயில் சீர்காழி, கடலூர் துறைமுகத்திலும் நின்று செல்லும்.

    இதேப்போல் சென்னை எழும்பூர்-காரைக்கால் (வண்டி எண்-16175) விரைவு ரெயில் சீர்காழி, பேரளத்திலும், சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்-16865) விரைவு ரெயில் சீர்காழியிலும் நின்று செல்லும்.

    வருகிற 20-ந் தேதி முதல் ராமேசுவரம்-திருப்பதி (வண்டி எண்-16780) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரில் நின்று செல்லும்.

    வருகிற 22-ந் தேதி முதல் மயிலாடுதுறை-மைசூர்-மயிலாடுதுறை (வண்டி எண்-16231/16232) ரெயில் பாபநாசத்திலும், 24-ந் தேதி முதல் முதல் கன்னியாகுமரி-புதுச்சேரி (வண்டி எண்-16862) விரைவு ரெயில் சீர்காழி, திருப்பாதிரி புலியூரிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை
    • நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகரமைப்பு ஆய்வர் மரகதம், கணக்கர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-

    ரமாமணி (அ.தி.மு.க)- மாதம் தோறும் நகர் மன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொறை வாய்க்கால் பகுதியில் மின்விளக்குகள் ஏற்படுத்திட வேண்டும் . ராஜசேகர் (தே.மு.தி.க)- நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப்படும் சாலைகளுக்கு அந்தந்த பகுதியில் மதிப்பீட்டு, வேலையின் விபரம் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

    ரேணுகா ( தி.மு.க)- எனது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாஜி தெருவில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நித்யாதேவி:- மாரியம்மன் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். பாலமுருகன்:- கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளி (தி.மு.க)- மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

    சாமிநாதன் (தி.மு.க)- குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு, நகராட்சி சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பதை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசும்போது :- நகராட்சி பகுதியில் 88 இடங்களுக்கு மின் கம்பி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது வரவேண்டிய 123 புதிய மின்விளக்கு பிட்டிங்கில், 64 வந்துள்ளது. இதில் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து அமைக்கப்படும். நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்து வார்டு தேவைகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என்றார்.

    • சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

    • திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
    • வருகிற மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

    இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

    சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தா–ளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.
    • வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களு க்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.

    சீர்காழி குடிமை ப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் இந்துமதி, சாந்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி தையல் எந்திரம், ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டார். இதில் டாக்டர் அருண்ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர்கள் சங்கர், சுமதி கலந்து கொண்டனர்.

    • கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது.
    • இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்

    சீர்காழி:

    ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை, கப்பல் படை பிரிவு மற்றும் 1 புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல் சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காலை புதுவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்க நடைபெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து இந்த கடல் சாகச பயணத்தைத் பூம்புகாரில் தொடங்கி வைத்தார்.

    இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர் இப்பய ணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப்பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக டி.பி.எம்.எல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர்.

    ×