என் மலர்
நீங்கள் தேடியது "மயிலாடுதுறை"
- அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.
- கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும்.
இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேதபாராயணம் செய்வதற்கு உரிய அந்தணர்களைக் கொண்டு வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து வாசிக்கப்படும்.அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தணர்கள் ஒன்பது பெயர் வேதங்களை பாராயணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பெங்களூர் ரவிகுமார் கலந்து கொண்டார். கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மழையால் பாதிக்க ப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் கடந்த 14ஆம் தேதி நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்அமைச்சர் மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர்.
இதுவே மிகப்பெரிய பாதிப்புக்கு அடையாளம் இரண்டு லட்சம் மக்கள் கையேந்துகிற நிலைமை ஏற்பட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது.
பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் அறிவித்த ரூபாய் ஆயிரம போதாது கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ 30000 வழங்க வேண்டும். பெற்ற குழந்தை தாய்யை பறிகொடுத்தது போல் சம்பா சாகுபடிவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிரை பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற்படும் விவசாயிகள் ஒரு ஆண்டுகளுக்கான வருமானத்தை முற்றிலும் இழுந்துவிட்டனர்.
மேலும் விவசாயிகளின் மாடி வீடுகள், தொகுப்பு வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது தனை உயர்த்தி வங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாகை எம்பி செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சிவராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
- வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் வி.சி.க.வினர் மற்றும் ஒரு சமூகத்தினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு அதே இடத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் தங்களது புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர்.
இதுதொடர்பாக மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் நேற்று இரவு (5.12.22) 10 மணி முதல் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அப்பகுதியில் இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை செய்யப்படுவதாகவும் புதிதாக படத்திற்கு யாரும் மாலை மரியாதை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பட்டவர்த்தி மதகடி பகுதியில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். 21 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேன்கள் மூலம் பள்ளி செல்வதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டவர்த்தியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
காலை முதலே வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம் ஆகியவை மதகடி பகுதியில் வரவழைக்கப்பட்டு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.
- மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 2-ம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். பின்னர் சிறிதளவு பணத்தை அங்கேயே விட்டு, விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, வீரசோழன், மஞ்சளாறு, மகிமலையாறு, விக்ரமண் ஆறு, அய்யாவையானாறு, பழவாறு, மண்ணியாறு, தெற்குராஜன் ஆகிய ஆறுகளிலிருந்து பிரியும் பிரிவு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரிட விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் நடப்பாண்டு 2023-24, 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 749.74 கி.மீ நீளத்திற்கு தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரபடவுள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களை சேர்ந்த 71ஆயிரத்து 811.69 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தங்குதடையின்றி கடைமடை வரை சென்றடையும்.
மேலும் மழை வெள்ளக்காலங்களின் பாசன நிலங்களில் தேங்கும் வெள்ள நீர் விரைவாக வடியவும் உறுதி செய்யப்படும்.அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி 25.04 கி.மீ தூரத்திற்கு ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. மேற்கண்ட வாய்க்கால் தூர்வாருவதால் தரங்கம்பாடி வட்டத்தை சார்ந்த மேமாத்தூர், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 657 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், செம்பனார்கோயில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், ஜெயராமன், சீனிவாசன், சண்முகம், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், வீரப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்ஸ்ரீதர், ஒப்பந்தக்காரர் வேல்முருகன்,தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, செம்பனார்கோயில் ஒன்றிய ஆணையர் மீனா, மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
- இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.
ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.
ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.
இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 மாநிலங்களை சேர்ந்த 270 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள் நடைபெறும் இக்கலை நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஷிதலாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் படாய் நாட்டுப்புற நடனம், சத்தீஸ்கர் மாநிலத்தின் சத்னாமி சமூகத்தினர் மகி பூர்ணிமாவில் நிகழ்த்தும் பந்தி நாட்டுபுற நடனம், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த குஜராத் பழங்குடியினர் வேட்டையாடிய பின்னர் ஏற்படும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக ஆடும் சித்தி டமால் நடனம், உத்தர பிரதேச மாநிலம் பிரஜ் பகுதியை சேர்ந்த மக்கள் ராதா மற்றும் கிருஷ்ணர் இடையேயான காதல் அத்தியாயத்தில் இருந்து உருவாக்கப்பட்டு, ஆடும் மயூர் ஹோலி நடனம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், வட்டார தலைவர் ஜம்பு கென்னடி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் சௌ.சர்வோதயன் மற்றும் திரளான ரசிகர்கள் பங்கேற்று கண்டு ரசித்தனர்.
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
- மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயிலாடுதுறையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சேலம் சென்றடைகிறது.
- மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து மதியம் புறப்பட்டு இரவு மயிலாடுதுறை வந்தடைகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம் , ரயில்வே துறை முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு மயிலாடுதுறை முதல் சேலம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து, புது தில்லி முதன்மை செயல் இயக்குனர் தேவேந்திர குமாருக்கு, கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மயிலாடுதுறை எம் பி ராமலிங்கம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, 13.5.2022, 29.11.2022 தேதிகளில் எனது கடிதத்தில் கீழ்கண்டவாறு வலியுறுத்தி இருந்தேன்.
எனது மயிலாடுதுறை தொகுதி பயணிகள், நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவையை கோரி வருகின்றனர்.
இந்த சேவையை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ்,திருச்சி-கரூர் எக்ஸ்பிரஸ் கரூர்-சேலம் எக்ஸ்பிரஸ் இணைக்கப்பட வேண்டும் எனவும், இதே கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நாமக்கல் ஏ.கே.பி சின்ராஜ் ஆகியோரும் வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கடந்த மாதம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அந்த ரயில்களை இணைக்கும் திட்டத்தை அனுப்பியுள்ளது.
பயணிக்கும் பொதுமக்க ளின் நலன் கருதி உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது சம்பந்தமாக உங்கள் முன்கூட்டிய சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு, மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் தனது கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து, கோரிக்கை ஏற்கப்பட்டு, தெற்கு ரயில்வே வெளியிட்டு ள்ள அட்டவணையில் தெரிவித்திருப்பதாவது:
மயிலாடுதுறையில் காலை 6:20 க்கு புறப்பட்டு குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெரு மாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, அய்ய ம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை தஞ்சாவூர், ஆலக்குடி, பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று, மதியம்1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதேபோல் மறு மார்க்கமாக, சேலத்தில் மதியம் 2.05மணிக்கு, புறப்பட்டு இரவு 9.40மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது.இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்டு ள்ள அட்ட வணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து சேலத்திற்கு, நாமக்கல் வழியாக நேரடியாக இயக்கப்படும் விரைவு ரயிலை இயக்குவதற்கு ஒப்புதல் அளித்த ரயில்வே துறைக்கு நன்றியையும், விரைவு ரயில் இயக்கத்திற்கு வரவேற்பையும் எம். பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
- 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்.
- புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
மிருகங்கள் இறைவனை பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன. அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதி உள்ளது.
அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.
கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.
அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள். வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.
ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தை போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.
அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாக பரவியிருந்தது.
திடீரென்று ஒருநாள் அந்த புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. "இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்" என அந்தப்பூனை நினைத்தது. யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.
நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்த பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது.
இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்த புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.
'இவரே புனுகீசர்' என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.
இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு: சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.
ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.
நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.
- மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
- இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும்.
ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும். வைணவ தலங்களில் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்கப்பட்டினம் (மைசூர்), திருவரங்கம், கோவிலடி (திருக்காட்டுப்பள்ளி), கும்பகோணம் சாரங்கபாணி, திருஇந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியவையாகும்.
இதில் திருஇந்தளுர் பரிமளநாதர் கோவில் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால், ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு விரதம் இருந்தால் விரும்பியது நிறைவேறும் என்பது ஐதீகம். பிரம்மா, எமன், கங்கை, காவிரி, சூரியன், சந்திரன், அம்பரீசன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
பிரம்மதேவனால் வெளிப்பட்ட வேதங்களை, மது - கைடபர் என்னும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். இதனால் மிகவும் வருந்திய பிரம்மா, பெருமாளை வேண்டினார். அந்த வேதங்களை அரக்கர்களிடம் இருந்து பெருமாள் மீட்டு வந்து வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்ததால், இத்தல இறைவன் `பரிமள ரங்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தாயார் பெயர், பரிமள ரங்கநாயகி. இத்தல தீர்த்தம் `இந்து புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஒரு சமயம் தட்சனால், சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தில் இருந்து விடுபட சந்திரன், இத்தலத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாளை வழிபட்டார். சந்திரனின் வேண்டுதலுக்கு இறங்கிய பெருமாள், அவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் `இத்தலம் எனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும்' என்று சந்திரன், பெருமாளிடம் கோரிக்கை வைத்தார்.
அதன்படியே பெருமாள் வரமளித்தார். அதன் காரணமாகவே இத்தலம் `இந்தளூர்' என்று அழைக்கப்படுகிறது. `இந்து' என்பதற்கு `சந்திரன்' என்று பொருள். `இந்து ஊர்' என்பதே 'இந்தளூர்' என்று மருவியதாக சொல்லப்படுகிறது.
தல வரலாறு
ஒருகாலத்தில் இந்த பகுதியை அம்பரீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். அவன் நூறாவது ஏகாதசி விரதத்தை மேற்கொண்டபோது, அது தேவர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. குறிப்பாக தேவேந்திரனுக்கு. இந்த விரதத்தை அம்பரீசன் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவனுக்கு தேவலோக பதவி கிடைத்துவிடும் என்பதே அவர்களின் கவலைக்கு காரணம்.
எனவே அவன் விரதத்தை முடிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதற்காக துர்வாச முனிவரிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தை தடுக்கும் பொருட்டு இங்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து விட்டான். துவாதசி நேரத்தில் மன்னன் உணவு அருந்தியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் பலன் முழுமையாக மன்னனுக்குக் கிடைக்கும்.
அம்பரீசன் உணவு உண்ண தயாராக இருந்த நேரத்தில் துர்வாச முனிவர் உள்ளே நுழைகிறார். அவரை வரவேற்ற மன்னன் உணவு உண்ண வரும்படி அழைத்தான். துர்வாச முனிவரும் அதற்கு சம்மதித்து நதியில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.
ஆனால் துவாதசி நேரம் முடியும் வரை துர்வாச முனிவர் மன்னனின் இருப்பிடம் செல்லக்கூடாது என்று நினைத்தார். முனிவர் வருவதற்குள் உணவருந்தினால் மன்னனுக்கு சாபம் ஏற்படும் என்பதால் அவன், உணவருந்த மாட்டான் என்று நினைத்தார் துர்வாச முனிவர்.
துவாதசி நேரம் முடிவதற்குள் உணவு அருந்தியாக வேண்டும். ஆனால் முனிவர் வர தாமதமாகிறதே என்று நினைத்த மன்னன், வேதியர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். துவாதசி விரதம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை எடுத்து, அதை மூன்று முறை அருந்தினான். இந்த வகையில் அவன் ஏகாதசி விரதத்தை முழுமையாக நிறைவு செய்தான்.
இதை அறிந்த துர்வாச முனிவர் கோபத்துடன் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனைக் கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன், பரிமள ரங்கநாதரை சரணடைந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையடுத்து துர்வாச முனிவர், பெருமாளை பணிந்து மன்னித்து அருள வேண்டினார்.
பெருமாளும் அவரை மன்னித்தார். நூறு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீசனிடம், `பிடித்ததைக் கேள்' என்று பெருமாள் சொன்னார். அதற்கு அம்பரீசன், `தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினான். அதன்படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
கங்கையை விட காவிரி இந்த இடத்தில் புனிதத் தன்மையை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. பரிமள ரங்கநாதர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சந்திரன் இக்கோவில் தாயாரான புண்டரிக வல்லியிடம் தன் பாவத்தை போக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரனின் மனக்குறையைப் போக்கியதாக சொல்கிறார்கள்.
இதனால் இத்தலத்தில் உள்ள தாயாருக்கு `சந்திர பாப விமோசன வல்லி' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் இத்தலத்தில் வழிபட்டு விலக்கிக் கொள்ள முடியும் என்று தல புராணம் சொல்கிறது.
கோவில் வாசலில் சந்திர புஷ்கரணி உள்ளது. சந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றாராம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். இத்தலப் பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக வரலாறு. நாபியில் பிரம்மாவும், பெருமாளின் தலை அருகே காவிரியும், திருவடி அருகே கங்கையும் வழிபடுகின்றனர். எமனும், அம்பரீசனும் பெருமாள் திருவடிகளை பூஜை செய்கின்றனர்.
இத்தலம் வந்து ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுவதால், ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
தனி சன்னிதியில் பரிமள ரங்கநாயகி அருள்புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கொடிமரத்தை வணங்கி, ராமர் சன்னிதி, ஆஞ்சநேயர், கருடன், துவாரபாலகர், ஆழ்வார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்க வேண்டும். பின்னர் பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமானத்தை தரிசித்த பின்னர், பரிமள ரங்கநாயகியை வணங்கவேண்டும்.
அதன்பிறகு உட்பிரகாரம் சென்று ஆண்டாள் உள்ளிட்ட பிற சன்னிதிகளை தரிசனம் செய்த பின்னரே, பரிமள ரங்கநாதரை வணங்க வேண்டும். இவ்வாலயத்தில் மூலவரான பரிமள ரங்கநாதர் 4 திருகரங்களுடன் வீர சயன கோலத்தில், பச்சை நிற திருமேனியுடன் காட்சி தருகிறார். மாதந்தோறும் உத்தரத்தன்று மூலவரின் திருமேனிக்கு சந்தனாதி தைலமும், திருமுகத்துக்கு புனுகு சவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது.
தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த சந்திரன், பங்குனி மாதம் பெருமாளுக்கு பிரமோற்சவம் செய்தார். அதை நினைவுகூரும் பொருட்டு, இன்றும் பங்குனி மாதம்10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
பெருமாளுக்கு உகந்த துலாம் மாதத்தில் (ஐப்பசி) காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிக புண்ணியம் கிடைப்பதாக கூறப்படுவதால், துலா பிரமோற்சவம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே கண்கொள்ளா காட்சியாக நடைபெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தளூருக்கு, மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.