search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை"

    • நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
    • என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.

    அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.

    அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

    மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-

    பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.

    திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.

    • மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.
    • மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.

    ஸ்ரீபைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது.

    கும்பகோணம் மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த ஸ்ரீகால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.

    வடக்கே உள்ள காசி தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடிய பலனை இங்குள்ள ஐந்து தீர்த்தங்களிலும் மூழ்கி ஒரே நாளில் அடையலாம் என்பது ஐதீகம். அதனால் இந்த ஷேத்ரபாலபுரத்தை காசிக்கும் வீசமதிகமான சிறப்பு பொருந்திய தலம் என்பர்.

    இந்த ஊரில் பிறந்தவர்களுக்கும், இந்த ஊரில் இறப்பவர்களுக்கும் ஸ்ரீகால பைரவர் வலது காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து யம வாதனையை நீக்குவதாக கூறப்படுகிறது.

    மேற்கு நோக்கிய கருவறையுடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது.

    மேலும் ஸ்ரீகால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை.

    காசியை வீட வீசமதிக பலன் தரும் என்பதால் காசிக்குச் சென்று ஸ்ரீகால பைரவரை வழிபட இயலாதவர்கள் இத்தல பைரவரை வழிபட்டும், காசி தீர்த்தமான கங்கையில் நீராட முடியாதவர்களும் இத்தலத்திற்கு வடக்கே ஓடும் காவிரியில் நீராடியும் காசிக்கு நிகரான புண்ணியத்தைப் பெறுகின்றனர்.

    தினசரி இத்தலத்தில் ஒரு கால பூஜையே பகல் 12 மணிளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12 மணிக்கு நடைபெறும். உச்சிக்கால பூஜை சிறப்புத் தரிசனமாகக் கூறப்படுகிறது.

    காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணியளவில் சூலத்தீர்த்தத்தில் நீராடி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்ரீகால பைரவரை தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒரு சேரக் கிடைக்கும்.

    அது தவிர, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ரோகம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

    • இறைவியின் திருநாமம், மருவார் குழலி.
    • தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்செம்பொன்பள்ளி என்னும் செம்பனார்கோவில் திருத்தலத்தில் இருக்கிறது மருவார்குழலி உடனாய சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களில், இது 42-வது திருத்தலமாகும். புராண காலத்தில் இந்த ஊர், லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    பிரம்மாவின் மானச புத்திரராக பிறந்தவர், தட்சன். இவருக்கு பார்வதிதேவியே, மகளாகக் கிடைத்திருந்தாள். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் மகள் விருப்பப்படியே அவளை, சிவ பெருமானுக்கு மணம் முடித்தார்.

    சில காலம் கழித்து தட்சன் ஒரு யாகத்தை நடத்தினான். அப்போது அகந்தையால், அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்க மறுத்தான். இதையறிந்த தாட்சாயிணி, தன் தந்தையை நல்வழிபடுத்தும் எண்ணத்தில் யாகம் நடந்த இடத்திற்கு வந்தாள்.

    ஈசனுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி மகள் கேட்டதில், தட்சன் கோபம் கொண்டான். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த அவன், தாட்சாயிணியையும், சிவனையும் கடும் வார்த்தைகளால் வசைபாடினான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபமிட்டாள்.

    பின்னர் சிவபெருமானிடம், தட்சனுக்கு தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டாள். சிவபெருமான் தன்னுடைய அம்சமாக வீரபத்திரரையும், அவருக்கு துணையாக பத்ரகாளியையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தட்சனின் யாகத்தை அழித்தனர்.

    இந்த நிலையில் சிவனை நிந்தித்த தட்சனுக்கு மகளாகப் பிறந்தது, தட்சனுக்கு சாபம் அளித்தது ஆகியவற்றை பாவமாக கருதிய தாட்சாயிணி, அந்த பாவம் நீங்க இத்தலத்தில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவில் அமர்ந்து தவம் புரிந்தாள்.

    சிவபெருமான், தாட்சாயிணிக்கு காட்சி கொடுத்து, பார்வதியாக தன்னுடன் சேர்த்துக்கொண்டார். மேலும் 'நீ இந்த தலத்தில் மருவார் குழலியம்மை என்ற திருநாமத்துடன் என்னருகில் இருந்து அருள் செய்வாய்' என்று கூறியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது.

    இவ்வாலயத்தின் அமைப்பு முறை மற்றும் இங்குள்ள ஜேஷ்டா தேவி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆலயம் கி.பி 879 முதல் கி.பி. 907 வரை ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    கோச்செங்கண் சோழனும் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருக்கிறான். இவ்வாலயத்தில் மூன்றாம் குலோதுங்கச் சோழன், ராஜராஜ சோழன், பிற்காலத்தில் தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

    தட்சனை மகனாகப் பெற பிரம்மாவும், திருமாலை கணவனாக அடைவதற்கு லட்சுமிதேவியும், லட்சுமியை மனைவியாக அடைந்ததற்கு திருமாலும், விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் வேண்டி இந்திரனும், தாருகாசுரனை வதம் செய்ய முருகனும் இவ்வாலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலய இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இவர்களைத் தவிர, குபேரன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோரும் இத்தல இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாசலுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ளது. பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னிதி உள்ளது.

    இறைவியின் திருநாமம், மருவார் குழலி. இவருக்கு புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி என்ற பெயர்களும் உண்டு. மகாமண்டபத்தில் சூரிய மகா கணபதி, சூரிய லிங்கம், சந்திர லிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    கருவறையில் மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், மேலும் கீழும் தலா 16 இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இவர் தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

    கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப் பழைமையானது. அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

    திருச்சுற்றில் மேற்கில் தலவிநாயகரான, `பிரகாசப் பிள்ளையார்' உள்ளார். தவிர வன துர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான் மழு ஏந்திய சிவபெருமான், ருத்ராட்ச மாலையும், சக்தி ஆயுதமும் தரித்த நான்கு கரங்களைக் கொண்ட பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் ஆகிய மூர்த்தங்களும், சேத்ரகால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் காணப்படுகின்றன.

    தென்மேற்கில் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி ஆகிய சப்த மாதர்களுடன் விநாயகர் மற்றும் சாஸ்தா உள்ளனர். கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தல தீர்த்தமான சூரிய தீர்த்தமும், காவிரியும் உள்ளன. இவ்வாலய தல விருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளன.

    இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு துர்க்கை வழிபாடும் மிகவும் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாலயத்தில் சித்திரை மாதம் 7-ம் நாளில் இருந்து 18-ம் நாள் வரை, பன்னிரண்டு நாட்கள் சூரிய பூஜை திருவிழா நடத்தப்படுகிறது.

    ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலையில் செம்பனார்கோயில் திருத்தலத்தின் வடக்கு பகுதியில் சுவர்ண புரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    • அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நள்ளிரவில் ஆய்வுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அந்த இடம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கணவர் செந்தில்குமார் என்பவருக்குரியது என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி இன்றி மண் எடுத்துள்ளதும் தெரிய வந்தது.



    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, செந்தில் குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வருகின்ற குடிநீரும் அழுக்காக நிறம் மாறி வந்தது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பெண்கள் கூறினர். தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
    • ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நந்திதேவர் சாபம் விலகிய தலம்.
    • திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலைத் துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம். வேதநாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
    • உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.

    நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.

    பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

    என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
    • தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சாமிகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி சிலர் பணம் கேட்டு ஆதீனத்தை மிரட்டினர்.

    இதுகுறித்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் வினோத், ஆதீனகர்த்தரின் முன்னாள் உதவியாளர் செந்தில், சீர்காழி பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவனங்களில் தாளாளர் குடியரசு, செம்பனார்கோ வில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செய்யூர் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பா.ஜனதா மாவட்ட செயலாளர் அகோரம், பந்தநல்லூர் சீனிவாஸ், திருச்சியை சேர்ந்த பிரபாகர் ஆகிய 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீனிவாஸ், அகோரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அதில் 4 பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு கோர்ட்டில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

    ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது செய்யப்படாததால் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வக்கீல் ராம.சேயோன் வாதாடினர்.

    இதைத்தொடர்ந்து, ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலின் முன்ஜாமீன் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில், உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்தனர். பின்னர், அவர் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்டார். செந்தில் கைதை தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    • வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நாங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது.

    இந்நிலையில் அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு அதன் அருகிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த வீட்டின் அருகில் உள்ள கழிவறை தொட்டி மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த தொட்டியானது மூடி கொண்டு மூடாமல் திறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது சிறுவன் ஒருவன் விளாசிய பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது. இதனால் பந்தை தேடி சிறுவர்கள் கேசவன் வீட்டின் அருகே வந்துள்ளனர். சுற்று முற்றி தேடி பார்த்தனர் ஆனால் பந்து கிடைக்கவில்லை. அப்போது அங்குள்ள கழிவறை தொட்டியின் உள்ளே பந்து கிடக்கிறதா? என சிறுவர்கள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், சிறுவர்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கிராமமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்த பாகசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகசாலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எலும்புக்கூட்டில் கிழிந்த நிலையில் சேலை துண்டுகள் கிடந்துள்ளது. இதனால் அது பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    அப்படியே இருந்தாலும் அவர் இறந்ததற்கு காரணம் என்ன? தொட்டியில் உள்ளே தவறி விழுந்து இறந்துள்ளாரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இதற்காக இன்று தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு பின்னரே எத்தனை நாட்களான எலும்புக்கூடு? என்பன உள்ளிட்ட முழு தகவல் தெரியவரும்.

    வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    • செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் சிறுத்தையை பற்றி தவறான தகவல்களை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×