search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூரில் உள்ள சகாயமாதா முதியோர் இல்லத்தில் நகர திமுக சார்பில் கழக செயலாளர் ராமசாமி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜாகிர், குமரேசன், தி.மு.க. பிரமுகரும், சமூகசேவகருமான கோவர்தணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,
    • மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் (வாகன பிரிவு) தலைவர் சுப்பிரமணி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி மணி. இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் யோகராஜ், இந்திய பொதுவுடமை மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், இணைச் செயலாளர் வெங்கட், பொருளாளர் ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜனதா எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,

    மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.

    • புகைப்படம் எடுத்தவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், கோவைக்கு 3-வது போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கெத்தை வழியாக கோவைக்கு சென்று வருகின்றன. கோவையில் இருந்தும் தினசரி 4 தடவைகள் மஞ்சூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார்-சுற்றுலா வாகனங்களும் சென்று வருகிறது.

    மஞ்சூர் போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள கெத்தை, அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு பழ மரங்கள் அதிகம் உண்டு. எனவே இங்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வன விலங்குளை பார்க்க முடியும். அந்த நேரங்களில் சாலையோரமாக திரியும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒருசிலர் வனவிலங்குகளை நேரில் கண்ட பிரமிப்பில், அச்சத்துடன் கூச்சலிடுகின்றனர்.

    இது விலங்குகளுக்கு தொந்தரவு தருகிறது. எனவே முள்ளி வழியாக, சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் காரமடை மேட்டுப்பாளையம், காட்டேரி வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்படுகிறது.

    எனவே குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் தற்போது 6 காட்டு யானைகள் கெத்தை பகுதியில் சாலையோரம் முகாமிட்டு உள்ளன. எனவே அவற்றை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

    எனவே அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் சாலையை கவனமாக பயன்படுத்தி, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை விடுத்து வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும்.
    • மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இங்கு தூய்மைப்பணியாளர்கள் அதிகாலை, இரவு நேரங்களில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    அங்கு பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்ட மக்காத குப்பைகள், மருந்து மாத்திரைகள், ஊசி, சானிட்டரி நாப்கின் போன்ற தீங்கு விளைவிக்கும் குப்பைகள் ஆகியவை 3 வகைளில் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

    ஊட்டியில் தினமும் சராசரியாக சுமார் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. கோடை சீசனில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தினமும் 24 லட்சம் கிலோ குப்பைகள் வீதம் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ ஆகும். இந்த நிலையில் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளில் ஒருசிலர் சமூக பொறுப்பின்றி குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். எனவே அவற்றை தரம் பிரித்து சேகரிக்க அதிக நேரம் ஆகிறது.

    எனவே தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை சேகரிக்க கால தாமதம் ஆகிறது அதிலும் குறிப்பாக ஊட்டியின் முக்கிய வர்த்தக பகுதிகளான மெயின்பஜார் அப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் பிரிக்கப்படாத குப்பைகள் குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.

    எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    • சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்தது.
    • ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெரும்பாலான பகுதிகள், காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டம் வரை பரந்து விரிந்து உள்ளது.

    இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டெருமை, கரடி ஆகியவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

    கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒரு சிறுத்தை இரைதேடி முகாமிட்டு உள்ள சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுபோன்று வன விலங்குகளும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது குடியிருப்பு வாசிகளை கலக்கமடைய செய்துள்ளது. இதில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள்ளே உணவு தேடி சுற்றிவந்துள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    • நீலகிரியில் 60 சதவீத சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.
    • தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உப்பாசி கூட்டரங்கில் தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    இதில் அதிகாரிகள் தரப்பில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித், இண்கோ சர்வ் முதன்மை செயல் அதிகாரி மோனிக்காராணா, நீலகிரி தேயிலை சங்கங்கள் சார்பில் நெலிகொலு சிறுவிவசாயிகள் மேம்பாட்டு சங்கம், மலை மாவட்ட விவசாயிகள் சங்கம், சிறுதேயிலை விவசாயிகள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம், நீலகிரி வயநாடு சங்கம், தேயிலை தரகர்- ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே சிறுதேயிலை விவசாயிகள் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 60 சதவீதம் சிறுதேயிலை விவசாயிகள் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தேயிலை விற்பனை சந்தையில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த தரத்துடன் அதிக லாபம் பெற முடியும். நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா, தேயிலை ஆகிய இரண்டும் கண்கள் ஆகும்.

    எனவே அங்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.150 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரும். நீலகிரியில் கலப்பட தேயிலைத்தூள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு நடத்தி உள்ளனர். இந்த வகையில் 11 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 6 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.1.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர தரம் குறைந்த தேயிலை, தவறான குறியீடு உள்பட 32 வழக்குகள் பதிவாகி, அதில் 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.52,500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சாரிபில் தேயிலை வியாபா ரிகளின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    கோத்தகிரியில் வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவரங்களும் நன்றாக வளருவதற்கு உகந்த குளுகுளு காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள பாண்டியன் பார்க் பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கும் மலர்கள், காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அமைந்து உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் சூரியகாந்தி மலர்களுக்கு மத்தியில் நின்று, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    • கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
    • சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று சிகிச்சைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    இதனால், கெங்கரை ஊராட்சி மற்றும் சமூக நல கூட்டமைப்பின் மூலம் சுகப்பிரசவத்தை முன்னெடுக்கும் விதமாக பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான. நிகழ்ச்சி சோலூர் மட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், தனியார் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் பொன்னுசாமி, கீழ் கோத்தகிரி ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகி முகம்மது பாருக் மக்களுக்கு சுகப்பிரசவம் குறித்து விளக்கிப் பேசினார். கனடா நாட்டிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர் இக்பால் அலி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் இணைந்து இ.சி.ஜி எந்திரம், சக்கர நாற்காலி உள்பட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை டாக்டர் ரம்யாதேவியிடம் வழங்கினர்.

    தொடர்ந்து சிக்கிள் செல் அனீமியா நோயைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்கள் 50 பேருக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாபு, விவேக், ஆசிரியர் தர்மராஜ், நம் சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சண்முகநாதன் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.
    • முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராமச்சந்த் பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் நடத்தி வருகிறது. இங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், உடல்நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர்கள் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மரம் ஏற்றி வந்த ஒரு லாரி இன்று காலை முதியோர் இல்லம் அருகே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. எனவே லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.

    எனவே இல்லத்தில் இருந்த முதியோர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி பிழைத்தனர்.

    இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், முதியோர் இல்லத்தின் முன்பு உள்ள போக்குவரத்து சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறுகலாக இருந்தது. எனவே நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் விரிவுபடுத்தியது.

    அதன்பிறகு அங்கு கனரக வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஒருசிலர் பாரம் ஏற்றிய லாரிகளை கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் அங்கு ஒருசிலர் உட்கார்ந்து மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    ஒரு மணி நேரத்துக்கு முன்பு முதியவர்கள் நடைப்பயிற்சி சென்றனர். அந்த நேரத்தில் லாரி கவிழ்ந்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். முதியோர் இல்லம் அருகே இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தீயணைப்பு படை போலீசார் அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் அருகில் ஒரு ராட்சத மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    இதற்கிடையே கோடநாடு சாலை புதூர் அருகே, ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்தது இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவே தீயணைப்பு படை போலீசார் உரிய குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    • நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி ரமேஷ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-

    தற்போது கடந்த சில மாதங்களாக தேயிலை விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் பெயரளவில் மட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

    இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கந்துவட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பச்சை தேயிலைக்கு நிரந்தர விலை வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    ஆனால் அரசியல் கட்சிகள் தேயிலைக்கு உரிய விலை வாங்கி தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இந்நிலையில்

    அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேகர் நன்றி கூறினார்.

    • இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.
    • மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம் செய்யப்பட்டிருந்தன.

    ஊட்டி,

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம், 80 ஆயிரம் மலர்களான ஊட்டி 200 வடிவம், 125வது மலர் கண்காட்சி வடிவம் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    இது தவிர நுழைவு வாயிலில் 10 அலங்கார வளைவுகள், செல்பி ஸ்பாட்டுகள், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு வாரமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

    அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு வில்லியம், மேரி கோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையாமல் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வாரம் இறுதி வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

    ×