என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்துகள்"

    • ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
    • ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.
    • திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

    அதன்படி கடந்த 12-ந் தேதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 13-ந்தேதி பயணம் செய்ய 10 ஆயிரம் பேரும், 12-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும், 14-ந்தேதிக்கு 1000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 800 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து புறப்படும் 300 பஸ்களில் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

    திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடந்துள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ள விரைவு பஸ்கள் நிரம்பியவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்படும்.

    தீபாவளியை போல பொங்கலுக்கு பஸ் பயணம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுங்கள்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்துக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர் கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தடையும் பஸ்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்துக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர் கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

    மேலும் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    சென்னை:

    போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர் சிங் மூலம் (காண்டிராக்ட்) டிரைவர், கண்டக்டர்களை வேலைக்கு பணியமர்த்துவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.22 ஆயிரம் சம்பளத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்தில் தினசரி 813 ரூபாய்க்கு பதில் 553 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற டிரைவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்த்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஏப்ரல் 18 அன்று ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இதன் மீது தற்போது 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டது. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை இணை கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் அனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சம்மேளன இணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதி.
    • சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில், தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதால், மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம்.

    தற்போது, சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    அடுத்த கட்டமாக, 250 விரைவு பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில், இதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

    இதன் வாயிலாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன.

    மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், ‘பீக் ஹவர்களில்’ கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    பொது பயணியரோடு, மாணவர்களும் பயணிப்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். எனவே, தேவைக்கு ஏற்றார் போல், கூடுதல் பஸ்களை இயக்க, கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக இயக்கப்படும், 2,700 மாநகர பஸ்களோடு, மேலும், 150 பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயக்க, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், 'பீக் ஹவர்களில்' கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
    • சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சொகுசு, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 1,078 பஸ்கள் உள்ளன.

    இந்த பஸ்கள் 300 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூரப் பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவு பஸ்களில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச் சலுகை திட்டங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணைய வழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 5 முறை பயணம் செய்வோருக்கு அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 10 சதவீத கட்டணச் சலுகையும், கடந்த மே 1-ந்தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகையும் அமலில் உள்ளது.

    தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்துள்ளனர். இதேபோல் 10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,353 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாக பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகி உள்ளது.

    இந்த சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. இவ்வாறான திட்டங்கள் மற்றும் சேவைகள் காரணமாக விரைவு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சேவையை மேம்படுத்துவது மற்றும் நவீனவசதி கொண்ட பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    சனி, ஞாயிறு என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் பஸ்களில் பலர் வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் உறவினர் வீடுகளுக்கு செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்றவை வார இறுதி நாட்களில் தான்.

    இதனால் அந்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.

    அதன் அடிப்படையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

    இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் வசதிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போல திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இயக்கப்படுகின்றன.

    இதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், மற்ற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
    • கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    சென்னை:

    மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.

    அரசு விரைவு பஸ்கள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். நேற்று மாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    நள்ளிரவு 1 மணி வரை வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை ஏற்பாடு செய்தனர். முன் பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் சென்றுள்ளனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    மேலும் வருகிற சனி, ஞாயிறு, திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் இல்லாததால் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தேவையான அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. நாளை பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நாளைய பயணத்திற்கு நிரம்பிவிட்டன.

    ×