search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி"

    • பத்திரிகையாளருக்கும், ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம்.
    • சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    தேனி:

    தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர்.

    ஆனால் அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

    ஆனால் அவர் அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார். இருந்த போதும் தொடர்ந்து கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள் என கோபமாக கத்தினார்.

    இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மூலிகை சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்க போலீசார் சென்றபோது பல நோயாளிகள் அங்கு காத்திருந்தனர்.

    திண்டுக்கல்:

    தேனி அருகில் உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது49). இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக மூலிகை சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பெரியகுளத்தை சேர்ந்த வங்கி ஊழியரின் மனைவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்து விட்டதாக வங்கி ஊழியர் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    சிகிச்சை மையம் நடத்திய ராமசாமியின் மருத்துவ படிப்பு தொடர்பான சான்றிதழ்களை சோதனை செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராமசாமியை கைது செய்தார்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மூலிகை சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்க போலீசார் சென்றபோது பல நோயாளிகள் அங்கு காத்திருந்தனர். அவர்களிடம் உரிய விபரத்தை எடுத்து கூறி வேறு இடத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வைத்து பல இடங்களில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் கிராம காவல் தலைவருக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கு யாரேனும் உள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர். இருந்தபோதும் துரத்திச் சென்று போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்டவர் பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 30 ) என்பதும், தப்பி ஓடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 36) என்பதும் தெரியவந்தது.


     வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 29 நாட்டு வெடிகுண்டுகளையும் செயலிழக்க வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் இவர்கள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
    • மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 35). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அஜித்தா (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது பிரத்விகா (5) என்ற மகள் உள்ளார். இந்த குழந்தை தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

    காதல் திருமணம் செய்த இவர்களை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் சதீஸ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தனர். சதீஸ்குமார் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    மேலும் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் பைனான்ஸ் தொழில் செய்தும் வந்துள்ளார். தற்போது இவரது மனைவி அஜித்தா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

    அஜித்தா தனது தேவைகளை ஒரு பேப்பரில் எழுதி தனது மகளிடம் கொடுத்து விடுவார். அதனை பார்த்து சதீஸ்குமார் என்ன வேண்டுமோ அதனை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் இரவு வரை பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பல முறை தொடர்பு கொண்டும் இணைப்பு கிடைக்காததால் சந்தேகமடைந்தனர்.

    இதனையடுத்து அஜித்தாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் என்ன பிரச்சனை என்று விசாரிக்குமாறு பைனான்ஸ் கம்பெனியில் இருந்து தெரிவித்தனர்.

    அஜித்தாவின் தந்தை மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு வந்த போது உட்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அஜித்தா மற்றும் அவரது மகள் கத்திக் குத்து காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்தனர். கணவர் சதீஸ்குமார் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வீட்டில் சோதனை செய்த போது சதீஸ்குமார் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர் எழுதியிருந்தார். காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழலாம் என நினைத்தோம். ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அதனை தீர்த்து வைக்க யாரும் வரவில்லை. இதனால் என் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. நான் இல்லாத உலகத்தில் அவர்கள் இருக்க கூடாது என்பதாலும் அவர்கள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பாத காரணத்தாலும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளேன். என்னை அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு சதீஸ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    காதல் திருமணம் செய்த மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
    • வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லேசான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

    • வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.

    இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.

    இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • வனத்துறையினர் அருவியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.

    அதன் காரணமாக கடந்த வாரம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

    இதனால் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது. அதனால் அருவியில் நீர்வரத்து சீரானது.

    இதையடுத்து நேற்று முதல் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல மேகமலை வனத்துறையினரும் அருவியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது.
    • அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் நுற்றாண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக கொட்டக்குடி ஆற்றில் இருந்து அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோவிலுக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் உடலின் மீது கத்தி போட்டு சென்றனர்.

    அதன்பின் அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித நீர்த்தங்களை ஊற்றி நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது. இதனை பக்தர்கள் மெர்சிலிர்க்க கண்டு ரசித்தனர்.

    இந்த திருவிழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே.நகரில் செல்வ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

    மேலும் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கேட்டு மாரிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து கொண்டு இருந்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஏதோ ஒரு பொருளை வீசுவது போன்றும், தீ வைப்பது போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர்.
    • நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நந்த கோபாலன் கோவில் சித்திரை திருவிழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என மக்கள் கூறுகின்றனர். நான் எந்த வித கருத்து கணிப்பும் நடத்தவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011ம் ஆண்டு நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.

    2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கோஷ்டியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப் பார்த்து டோக்கன் கொடுத்த விவகாரம் தெரியவரவே அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து நான் வெற்றிபெற வில்லை.

    தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் கொடுத்தது யார்? என்று உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.வுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனால்தான் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. என் கைக்கு வரும் என்று பேசினார். அவர் படித்தவர். 3 ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்.

    நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பிய போது, கோவில் விழாவுக்கு வந்துள்ளேன். எனவே அவரைப்பற்றி பேசி டென்சனாக்கி விடாதீர்கள் என கூறினார்.

    விழாவுக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தினகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

    • பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை.
    • புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய காலத்தில் வருசநாடு பகுதிக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான இடத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வருசநாட்டில் இருந்து நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பஸ் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை. அதேபோல வருசநாடு கிராமத்தில் புதிய அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இடங்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் சின்னமனூரைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தாமாக முன்வந்து வருசநாடு கிராமத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக ஆளுநர் பெயருக்கு பத்திரம் பதிவு செய்து வழங்கினார். அதற்கான ஆவணங்களை வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவிடம் வழங்கினார். பஸ் நிலையம் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலைக்கண்டு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

    ×