search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
    • வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.

    இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை 461 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த மாதமும் பெய்யும் என்பதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் என்றும், இன்னும் 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. மேலும் தற்போது குளிர்காலமும் தொடங்கி விட்டது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தினமும் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் 2 வாரங்கள் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, டைபாய்டு, வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.

    மேலும் குழந்தைகள் தட்டம்மை போன்ற அறிகுறிகளுடனும், காய்ச்சலுடனும் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். சுவாச பிரச்சனைகள் மற்றும் நிமோனியா காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். நன்கு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும். வேக வைக்காத பச்சையான உணவுகளையோ அல்லது வெளியில் சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

    குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

    அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.
    • குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் அட்டை பெட்டியில் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

    பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார்.

    புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே வேளையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. அதன்பின், குழந்தையின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குழந்தையின் தந்தை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியதன் அடிப்படையில் குழந்தை உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெர்னட். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் அக்சரன் என்ற மகன் உள்ளார். அக்சரன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தான்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அக்சரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவனை பெர்னட் கூடங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அக்சரனுக்கு காய்ச்சல் குணமாகாமல் இருந்துள்ளது.

    நேற்று காலை சிறுவன் அக்சரனின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கூடங்குளம் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவனை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அக்சரனை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 10 மாத குழந்தை இறந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்குநேரி பரப்பாடி பகுதியில் 6 வயது சிறுமி இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று சிறுவன் அக்சரன் இறந்துள்ளான். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் சுகாதராத்துறையினர் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மழை காரணமாக டெங்கு பாதிப்பு மெல்ல தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதனால் நன்னீரில் வளரக்கூடிய லார்வா, கொசு ஓழிப்பு பணியில் வேகம் காட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாலுகா அளவில் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில எல்லையில் கேரளா மாநிலத்தில் இருந்து வருவோர் உடல் நலம் பரிசோதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல் வருமாறு:-

    அவ்வப்போது மழை பெய்வதால் வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஓழிப்பு பணியை வேகப்படுத்த வேண்டும். கொசு இனப்பெருக்கம் அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து காலை, மாலை இருவேளையும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

    டெங்கு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறப்பு என்பது கூடவே கூடாது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை ஏற்று கடந்த, 15-ந்தேதி டெங்கு சிறப்பு வார்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 9பேர் டெங்கு வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

    அனைவரும் ஆரோக்கியமுடன் மருந்து, மாத்திரை எடுத்து வருகின்றனர். ஓரிரு நாளில் உடல் நலம் தேறி வீடு திரும்புவர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
    • நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.

    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் ஆராய வேண்டும்.

    சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

    பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு வழிகாட்டுதல் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    • பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
    • கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது.

    திருவனந்தபுரம்:

    கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகிய ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சில மாவட்டங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.

    பின்பு கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத்தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்த பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.

    கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.
    • பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    அதிகரிக்கும் வெப்பத்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம். நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க அதிக தண்ணீரை அடிக்கடி அருந்த வேண்டும்.பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உப்பு, சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவும். பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் நல்லது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலில் செருப்பு அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.
    • டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழையளவு பதிவாகி வருகிறது. மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பாக வீட்டில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை மூடி போட்டு பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்துகொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் குடியிருப்புகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து அங்கு நீர் தேங்க வழிவகை செய்யும் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.வீடுகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க அதற்கான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியாக வழிவகை செய்யும் வீடு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    ×