search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென ஆய்வு.
    • உடனடியாக படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

    இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது எழிலரசன் எம்.எல்.ஏ. கூறும்போது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்து புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை.

    காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மருத்துவக் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு பயன்று வந்த மாணவி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
    • திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.

    இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில் வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம்.

    மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபர்யும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியை தன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார்.

    பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3-வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில் அழுத்தினார். மேற்கண்ட திருக்கோலத்தில் உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.

    பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.


    தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி, தனது இரண்டு அடிகளால் மண்ணையும், விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி, வலது கரத்தில் மீதம் உள்ள ஓரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடிமீது வலத் திருவடியை சாத்தியும், இடத் திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்கு மாய் அளந்து விட்டது கோல் உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக, உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

    இத்திருக்கோவிலில் உள்ள உலகளந்த பெருமாளின் பேருருவை கொண்டு திரிவிக்கிரம அவதார உலகளந்த பெருமாளின் திருமுக மண்டலம் சேவை செய்விக்கப்படுகிறது.

    இத்திருக்கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது.

    திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம்

    நன்றிருந்து யோகந்தி நண்ணுவார்கள் சிந்தையுள்

    சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே

    குன்றிருந்த மாடநீடு பாடகத்தும் ஊரகத்தும்

    நின்றிருந்து வெஃகணைக் கிடந்து என்ன நீர்மையே?

    நின்றதெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து

    அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்

    அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்

    நின்றதுமிருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.

    - திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்

    • கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

    கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார்.

    கஸ்தூரி தான் குடியிருக்கும் காலண்டர் தெரு வீட்டை விற்பதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கஸ்தூரியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கஸ்தூரியின் வீட்டை போலீசார் திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே கஸ்தூரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கஸ்தூரி கொலை வழக்கில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் சென்ற வளையாபதியை காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    போலீஸ் விசாரணையில் வளையாபதி தனது நண்பரான பிரபு (52) என்பவருடன் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதைதொடர்ந்து போலீசார் வளையாபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என 4 திவ்ய தேச சன்னதிகள் அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்தது.

    இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரணவல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

    இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 6 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்கா வலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, பேரகத்தி பட்டர் ரகுராம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

    • கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
    • தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தல், சட்மன்ற கூட்டத் தொடர், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாதந்தோறும் எனது தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த 'குறைகேட்பு கூட்டம்' கடந்த சில மாதங்களாக நடை பெறாமல் உள்ளது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த குறை கேட்பு கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்திலும், அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்று மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.

    இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். 

    • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்தும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வன அலுவலர் ரவி மீனா,வேளாண்மை இணை இயக்குநர் (பொ)ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
    • பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ள அய்யம்பேட்டை, நடுத்தெருவை சேர்ந்தவர் ருத்திரகோட்டி. இவரது மனைவி மோகன பிரியா. நெசவு தொழில் செய்து வருகிறார்கள்.

    பட்டு ஜரிகை அடகு கடையும் வைத்து உள்ளனர். இவர்களது மகன் தனுஷ் (வயது21). பி.எஸ்.சி கணிதம் படித்து உள்ள அவர் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு அரசு பணிக்கான தேர்வும் எழுதி இருந்தார்.

    கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். அப்போது வெளியே சென்ற தனுஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். மேலும் தனுஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தனுசின் நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் வலது கால் ஒன்று தனியாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த காலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பாலாற்று பகுதி முழுவதும் கால் துண்டிக்கப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அப்போது பாலாற்றில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தை தோண்டிய போது அழுகிய நிலையில் தனுசின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தனுஷ் மாயமான அன்று கார் ஒன்று அவ்வழியே செல்வது பதிவாகி இருந்தது. அது அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கொலையுண்ட தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது நண்பரான சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுசை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து விஷ்வா, சுந்தர் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    விஷ்வா புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கவும் வீட்டை பழுது பார்க்கவும் சிறுக, சிறுக தனுஷின் பெற்றோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று இருக்கிறார். இந்த பணத்தை விஷ்வா திருப்பி கொடுக்கவில்லை. மேலும் பணத்திற்கான வட்டியும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தனுஷ் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி நெருக்கடி கொடுத்து இருக்கிறார்.

    இதனால் கோபம் அடைந்த விஷ்வா நண்பரான தனுசை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனுசை காரில் அழைத்து சென்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தார். இதற்கு உடந்தையாக மற்றொரு நண்பர் சுந்தர் இருந்தார்.

    பின்னர் தனுசின் உடலை பாலாற்றில் மணலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிச்சென்று உள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் அந்த பகுதியில் இருந்த மணல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றிய நாய்கள் புதைக்கப்பட்ட தனுசின் காலை கடித்து துண்டாக்கி தனியாக இழுத்து வந்து உள்ளன.

    இதன்பின்னரே தனுஷ் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் வாலாஜாபாத் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
    • நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.

    காஞ்சிபுரம்:

    விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

    ×