என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதானி"

    • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பங்கேற்றனர்.
    • ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் ஒரு மகத்தான மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார்.

    ஹைஃபா:

    இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

    அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த விவாகரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின. இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன.
    • எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது.

    இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் அதானியின் சொத்து மதிப்பும், ரூ.3.28 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 50 சதவீதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அறியும் வரை தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட இருந்தது.

    முதலீட்டாளர்களும், பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தியிருந்தனர். இந்நிலையில் பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் புதிய பங்கு விற்பனையை ரத்து செய்வதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும், அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக அதானி என்டர்பிரைசஸ் தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு சந்தை முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது.

    நாளடைவில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் அசாதாரண சூழ்நிலை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனது முதலீட்டாளர்கள் நலன் மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்தும் 2-ம் பட்சம்தான்.

    எனவே எந்த ஒரு சாத்தியமான நிதி இழப்புகளில் இருந்தும், அவர்களை பாதுகாக்க எப்.பி.ஓ.(பாலோ ஆன் பப்ளிக் ஆபர்) உடன் செல்ல வேண்டாம் என்று அதானி வாரியம் முடிவு செய்துள்ளது என கூறப் பட்டுள்ளது.

    மேலும் அதானி வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ அறிக்கையில், ஒரு தொழிலதிபராக எனது பயணத்தில், அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்கள் சமூகத்தின் அமோக ஆதரவை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை:

    அதானி குழும முறைகேடு தொடர்பாகவும் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே ஜி.பி.சாலையில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில செயலாளர்கள் எஸ்.ரஞ்சித் குமார், அயனாவரம் சரவணன் மற்றும் எஸ்.சி.துறை மாநில துணைத் தலைவர் புரசை வின்சென்ட், பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், சூளை ராஜேந்திரன் பங்கேற்றனர்.

    தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையாறு டி.துரை தலைமையில், அடையாறு சாஸ்திாி நகர், எஸ்.பி.ஐ வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மாநில துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சுபாஷினி, அமிர்தவர்ஷினி, மாநில செயலாளர் அனுசுயா, மாவட்ட துணைத் தலைவர்கள் திருவான்மியூர் பி.எல்.கதிரேசன், தரமணி மணி, தசரதன், விஷ்ணுகுமார், மாணிக்கவாசகம், அனுகிரகாகண்ணன், பக்திசிங், ஸ்டீபன் பங்கேற்றனர்.

    வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை சிக்னல் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பொதுச்செயலாளர் எஸ்.கே.வாசு, மாநில செயலாளர் மணிப்பால் மற்றும் ஆர்.கே.நகர் சையத், சக்தி, நாகேந்திரன், நஜ்மா ஷெரீப், வீரா செட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில், போரூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், பிரபாகரன், இலக்கியப் பிரிவு துணைத் தலைவர் ஆர்.பூங்கொடி, சாய்ராம், சுரேஷ், முரளி, பீர் முகமது, அம்பத்தூர் பிரகாஷ், கராத்தே ரவி, காமராஜ், மணி, ஆறுமுகம், மேஸ்திரி, மோகன் குரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமையில், வியாசர்பாடி அம்பேத்கர் சட்டக் கல்லூரி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, இமயா கக்கன் உள்ளிட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • நாடு முழுவதும் 'அதானி', 'அதானி', 'அதானி' தான்... அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
    • பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. பாஜக மக்களவை உறுப்பினர் சி.பி.ஜோஷி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தார். முன்னதாக, துருக்கி - சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சி.பி.ஜோஷி வாசித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மையத்திற்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மதியம் 1.30 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

    இதனையடுத்து தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "இந்திய ஒற்றுமை யாத்திரையின் (பாரத் ஜோடோ யாத்ரா) போது நாங்கள் நாடெங்கிலும் உள்ள மக்களின் குரல்களைக் கேட்டோம், யாத்திரையில் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் யாத்திரையின் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்களிடம் அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம். ஒற்றுமை யாத்திரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். அவர்கள் வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது, பழங்குடியினர் மசோதா பற்றி கேள்வி எழுப்பினர். அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். வேலையில் இருந்து பலர் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வேலை கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டி இருந்தது. மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பின்னர் மீண்டும் சமூகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மக்கள் அக்னிவீர் திட்டத்தைப் பற்றியும் பேசினர், ஆனால் இந்திய இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை வெளியேறச் சொன்னதைப் பற்றி எங்களிடம் கூறினார். அக்னிவீர் யோஜனா ஆர்.எஸ்.எஸ்., உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்தது என்றும் ராணுவத்தில் இருந்து அல்ல என்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் (ஓய்வு பெற்ற அதிகாரிகள்) தங்கள் மனதில் அக்னிவீர் திட்டம் ராணுவத்தில் இருந்து வரவில்லை என்றும், என்எஸ்ஏ அஜித் தோவல் அந்த திட்டத்தை ராணுவத்தின் மீது வற்புறுத்தினார் என்றும் கூறுகின்றனர். ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை. தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கும் 'அதானி' என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் 'அதானி', 'அதானி', 'அதானி' தான்... அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பிரதமருக்கும் அதானிக்கு என்ன தொடர்ப்பு..? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார். அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர். பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    • அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
    • அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும்போது இந்த பிரச்சினையை எழுப்பிய அவர், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளையும் அடுக்கினார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார்.

    ஆனால் பிரதமரின் இந்த உரையில், தனது கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    பிரதமர் அதிர்ச்சியில் இருந்தார், பதில் இல்லை. நான் எந்த சிக்கலான கேள்வியும் கேட்கவில்லை. அவர் (அதானி) உங்களுடன் எத்தனை முறை சென்றிருக்கிறார் என்றுதான் கேட்டேன். அவர் உங்களை எத்தனை முறை சந்தித்தார் என்பன போன்ற எளிய கேள்விகளைத்தான் முன்வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை

    அதேநேரம் அவர் ஆற்றிய உரை எனக்கு திருப்தி அளிக்கவில்லை, ஆனால் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதாவது அதானி விவகாரத்தில் விசாரணை குறித்து எந்த பதிலும் இல்லை.

    பிரதமர் மோடிக்கு, அதானி நண்பர் இல்லை என்றால், அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு துறையில் போலி நிறுவனங்கள், பினாமி பணம் கைமாறியது குறித்து விசாரணை இல்லை. இது குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை.

    இதன் மூலம் பிரதமர் மோடி, அதானியை பாதுகாத்து வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையில் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும்.

    இது ஒரு மிகப்பெரிய ஊழல். ஆனால் மோசடி என்று கூட பிரதமர் மோடி சொல்லவில்லை. அவர் நிச்சயமாக அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறார். அதை நான் புரிந்து கொண்டேன். அதன் பின்னால் காரணங்களும் உள்ளன.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இதற்கிடையே மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதானி, அம்பானி ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாடு வளர வேண்டும், அதிக தொழிலதிபர்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அதைப்போல அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிக்கொள்கிறேன்' என்று கூறினார்.

    • அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.
    • ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்" என கூறப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய ஆரம்பித்தன.

    இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

    அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.

    ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என எம்.எல்.ஷர்மா வாதிட்டார்.
    • இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், "அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் பணம் வீணானது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கில், மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகள் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

    இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்பு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வாதிட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இது தொடர்பான அக்கறையை நாம் காட்டவேண்டி உள்ளது. எனவே, முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என்ற விவரத்தை செபியிடம் கேட்டு, ஆலோசனை பெற்று திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

    'நாங்கள் இதில் தலையிட்டு, இது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு வழிமுறை இருக்கிறதா? கொள்கை விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது அரசாங்கம் தொடர்புடையது. இந்த நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு ஆர்வமாக இருந்தால், ஒட்டுமொத்த நிலைமை மற்றும் ஆய்வு மேற்கொள்ள நீதிபதி உள்பட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம்' என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

    • காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அளித்தார்.
    • வழக்கு மீதான விசாரணை வருகிற 17ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

    அதானி குழும மோசடி விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற கூட்டுக் குழு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கின.

    இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், செபிக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    நேற்று உச்ச நீதிமன்றத்தில் செபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதானி குழும மோசடி புகார் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது.

    உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வை விசாரணை நடத்த கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அளித்தார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 17ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

    • சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க நீதிபதிகள் ஏற்க மறுப்பு
    • இந்த விவகாரத்தில் விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து

    புதுடெல்லி:

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் அதானி குழும முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்கக் கோரி எம்.எல்.சர்மா, பிரசாந்த் பூஷன், காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர், வழக்கறிஞர் விஷால் திவாரி உள்ளிட்டோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில், இந்த விவகாரத்தை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், முதலீட்டாளர்களின் நலனை கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இதனை நீதிபதிகள் நிராகரித்ததுடன், மனுதாரர்களின் யோசனையை கேட்டது. இந்த விவகாரத்தில், குறிப்பாக இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் விஷால் திவாரி தெரிவித்ததையும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் மீதான அறிக்கை குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.

    9 மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு எவ்வித குழுவையும் அமைக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். மேலும், ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறினர்.

    இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த தன்மை இருக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீலிட்ட உறையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையை ஏற்க மாட்டோம். குழுவை நாங்களே ஏற்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது, என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
    • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

    இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

    அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

    • சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும்.
    • அதானி பிரச்சினையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளைப் பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும் வட இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்குமான முயற்சியாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பாஜக தான் காரணம். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதானி பிரச்னையை திசை திருப்பவே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது.
    • முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கேரள காங்கிரஸ், தேசிய மாநாடு, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ம.தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம், மத்திய அரசு என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பும் போது 16 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டம் நடப்பதற்கு முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.

    ×