என் மலர்
நீங்கள் தேடியது "சத்யபிரதா சாகு"
- வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
- மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும்.
சென்னை :
வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் இறந்தவர் பெயர்களை நீக்குவது, ஒரே பெயர் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை சரி செய்வது, போலி வாக்காளர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி இப்பணிகள் தொடங்கின.
இதற்காக வாக்காளர்கள் இணையதள மூலமாக ஆதார் விவரங்களை இணைக்க விண்ணப்பிக்கலாம். வீடு, வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பப்படிவத்தை பெற்று அதன் வாயிலாகவும் இணைக்கலாம் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்கள் முடிவடைகிறது. தமிழகத்தில் இதுவரை 58 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் நம்பரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தமுள்ள 6.18 கோடி வாக்காளர்களில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்காக 58.73 சதவீதம், அதாவது 3.62 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும் நிலையில், அதனுடன் சேர்த்து, ஆதார் விவரங்களும் பெறப்படுகின்றன. ஆதார் விவரங்கள், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 84.9 சதவீதமும், அரியலூரில் 84.3 சதவீதமும் பெறப்பட்டுள்ளன. சென்னை 22 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. 27 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். மார்ச் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். அதன்பின், ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்த விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடும். அதன் பின்னர் அவை இணைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே 15 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தொகுதி ரீதியாக வாக்காளர்கள் பெயர் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை பெற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் விவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
- இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அனுப்பிய கடிதம் இந்திய தேர்தல் கமிஷன் வழங்கிய முகவரியின் அடிப்படையில் தான் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. இரு அணியாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வை வழிநடத்துவதாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போதுவரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம், தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக 'ரிமோட்' வாக்குசாதனம் குறித்து விளக்குவதற்காக தேர்தல் கமிஷன் வரும் 16-ந்தேதி அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி உள்ளது. இதில் பங்கேற்கும் படி 2 பிரதிநிதிகளை அனுப்பும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கடிதத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.
இதுபற்றி தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததும் அந்த கடிதத்தை வாங்க வேண்டாம் என்றும் அதை மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கூறிவிட்டார். அதன்பேரில் தலைமை கழக நிர்வாகிகள் அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கருத்து கேட்டபோது, 'இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த முகவரியின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அரசியல் பின்னணி காரணமாக யாரையோ திருப்திபடுத்த இப்படி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்றும் இல்லாத பதவியை குறிப்பிட்டு கடிதம் வந்தால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அதை வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையை தமிழக தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து இருப்பது தெளிவாக உறுதியாகி இருக்கிறது.
இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார்கள்.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
- வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.
அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.
இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச் செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடி தங்கள் கொடுத்து இருக்கிறோம்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.
எனவே இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
எனவே வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தேர்தல் கமிஷனின் கடிதத்தை 2 முறை அ.தி.மு.க. நிராகரித்து திருப்பி அனுப்பிய விவரத்தை இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு விரிவாக தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதால் அதை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாங்க மறுத்து உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மின்னஞ்சல் மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம்.
- இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.
சென்னை :
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி: வாக்காளர் பட்டியலில் இனிமேலும் பெயர் சேர்க்க முடியுமா?
பதில்: தாராளமாக பெயர் சேர்க்கலாம். 17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். 18 வயது ஆனதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெறும்.
கேள்வி: வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்டு பெற முடியுமா?
பதில்: 100 ரூபாய் செலுத்தினால் பி.டி.எப். வடிவத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் போட்டோ இருக்காது.
கேள்வி: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்த படியே தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
பதில்: வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் பட்சத்தில் இங்கு வந்து தான் ஓட்டு போட வேண்டும்.
கேள்வி: புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை எப்போது கிடைக்கும்?
பதில்: 1 மாதத்தில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.
கேள்வி: தமிழகத்தில் வாக்குசாவடிகள் அதிகரிக்கப்படுமா?
பதில்: 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்கு சாவடி என்ற வகையில் இப்போது உள்ளது. கொரோனாவின் போது இந்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்தோம். ஆனால் இப்போது 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அளவில் உள்ளது.
கேள்வி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்த வாக்காளர்கள் ரிமோட் மூலம் வாக்களிப்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.முக.வுக்கு எத்தனை கடிதம் அனுப்பினீர்கள்?
பதில்: முதலில் ஆள் மூலம் கொடுத்து அனுப்பினோம். அதை வாங்க மறுத்ததால் ஸ்பீடு தபாலில் அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை திருப்பி அனுப்பிய தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு தபால் வந்தால் தான் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிறார்களே. எனவே அந்த பதவியை குறிப்பிட்டு மீண்டும் தபால் அனுப்பப்படுமா? இந்திய தேர்தல் கமிஷன் இதுபற்றி ஏதும் கூறி இருக்கிறதா?
பதில்: டெல்லியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கேள்வி: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து விட்டார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டீர்களா? அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும்?
பதில்: 1 தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டால் அங்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதியாகும். அந்த அடிப்படையில் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்துள்ளதால் இதுபற்றி தமிழக சட்டபேரவை செயலகத்தில் இருந்து இன்று எனக்கு தகவல் தருவார்கள். அதை இந்திய தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இடைத்தேர்தலின்போதும் பதட்டம் நிறைந்த பகுதிகளை வரையறுப்பது வழக்கமாகும், அதே போல் ஈரோடு தொகுதியில் பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளை கண்டறிய மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறேன்.
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தற்போது முதல் கட்ட அளவில் பதட்டம் நிறைந்த பகுதிகள் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறேன்.
தேர்தலுக்கான செலவினங்களுக்கு நிதித்துறையின் ஒப்புதல் பெற வேண்டும், இதற்காக, தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக முடிக்கப்படும். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.
அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் 2-ஆகப் பிரிக்கப்பட்டது. ஒரே வளாகத்தில் துணை வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு, ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்களும், மற்றொரு வாக்குச்சாவடியிலும் 600 வாக்காளர்களும் என்ற அளவில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பான நிலை திரும்பியுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
கொரோனா காலத்தில் இருந்ததைவிட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும், தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். அதன்படி தேர்தல் செலவும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
- வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும்.
சென்னை:
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும். பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளேயே ஒட்டப்படும்.
அடையாள அட்டையின் முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகளை உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
- பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னை :
தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.
அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.
புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.
- அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.
சென்னை:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்துக்கு சென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு வகையான குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைந்து, குறுக்கு வழியில் வெற்றிகளை ஈட்டலாம் என எண்ணி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது தேர்தல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறது.
அதில் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் தினமும் விற்பனையாகும் பணம் அந்த துறையின் அமைச்சர் சொல்லும் நபரிடம் சேர்க்கப்படுகிறது. அதை அவர்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாக நாங்கள் அறிகிறோம்.
மேலும், வெளியில் உள்ள பணத்தை தி.மு.க. நிர்வாகிகளால் அரசாங்க வருவாயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கின்ற வேலையும் செய்வதாக நாங்கள் அறிகிறோம்.
இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்லாமல் அரசாங்கப் பணத்தை எடுத்து ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துவது என்பது அரசியல் அமைப்பிற்கு எதிரான ஒன்று.
ஏற்கனவே தி.மு.க.வினர், தொகுதி முழுவதும் 111 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு அவர்களை செல்லவிடாமல் தினந்தோறும் ரூ.1000 வழங்கி, 3 வேளையும் உணவு கொடுத்து ஒரு புதுவித ஈரோடு தேர்தல் பார்முலாவை கையில் எடுத்திருக்கக்கூடிய இந்த வேளையில், தற்போது டாஸ்மாக் விற்பனை பணத்தை அதே தொகுதிக்கு செலவழித்து, அரசாங்கப் பணத்திலும் எப்படி தேர்தல் பணி செய்யலாம் என்கின்ற ஒரு பார்முலாவை இந்த தேர்தலில் புகுத்தி இருக்கிறார்கள்.
எனவே, உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் இந்த நவீன முறைகேட்டில் ஈடுபடும் தி.மு.க. நிர்வாகிகள் மீது கவனம் செலுத்தி, முறையாக டாஸ்மாக் விற்பனை பணம் அன்றைய தினமே அரசு கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் விற்பனை பணத்தை வசூல் செய்து அதை உரிய வங்கிகளில் அரசாங்கக் கணக்கில் வரவு வைப்பதற்கு, இந்தத் தேர்தல் முடியும்வரை ஒரு தனி அதிகாரியை நியமித்து மேற்பார்வை இடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து இன்று மீண்டும் புகார் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தி.மு.க. விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீர் போல் வாரி இறைக்கிறார்கள். மேலும் வாக்காளர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் செத்துவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அறைபோட்டு விஞ்ஞான ரீதியாக யோசித்து தேர்தல் விதிகளை மீறி வருகிறார். ஈரோடு தொகுதியில் உள்ள 40 டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் வருவாயை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி வருகிறார். தி.மு.க.வினர் தொடர்ந்து தேர்தல் விதி முறைகளை மீறி வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
சென்னை :
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.
அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.
மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
- இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.
அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.
அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட உள்ளார். இதில் தேவையான திருத்தங்கள் செய்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி எம்.எல்.ஏ. பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் இன்பதுரை கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திர மோகன், பா.ஜனதா சார்பில் கராத்தே தியாகராஜன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுக நயினார், சுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டாக்டர் ரவீந்திரநாத், வீரபாண்டியன், தே.மு.தி.க. சார்பில் துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், ரமேஷ், ஆம்ஆத்மி சார்பில் ஸ்டெல்லா மேரி, பாரூக், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்து கூறினார்கள்.
கள்ள ஓட்டுகளை முற்றிலும் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர் பெயர்களை கண்டறிந்து நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் வைத்தனர்.
இந்த கருத்துக்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்.
- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தற்போது 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி ராஜேந்திரன்; காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனர் மதுமதி; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஜவுளிகள் ஆணையர் வள்ளலார்;
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிசாமி; அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம்; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வேளாண்மை ஆணையர் சுப்பிரணியன்;
கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலேண்மை இயக்குனர் சங்கர்; திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ்;
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி; தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் 1½ மணி நேரம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அழைத்து ஆய்வு செய்வது, அதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவது, இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு 3 முறை பயணிப்பது ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை சத்யபிரதா சாகு வழங்கினார்.