search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசிம் அக்ரம்"

    • பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சை நகலெடுப்பதில் சிறுவனின் துல்லியம் அக்ரம் உட்பட பலரை கவர்ந்துள்ளது.
    • வீடியோ வைரலானதை அடுத்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மகிழ்ச்சியடைந்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை 30 வயதான ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஜூன் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதையும் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை போன்ற உடல்மொழியுடன் பந்துவீசும் பாகிஸ்தான் சிறுவனின் வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

     பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சை நகலெடுப்பதில் சிறுவனின் துல்லியம் அக்ரம் உட்பட பலரை கவர்ந்துள்ளது. பாகிஸ்தானின் இளம் வீரர் ஒருவர் ஜஸ்பிரித் பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைலை அப்படியே செய்து அசத்தும் வீடியோ வைரலானதை அடுத்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மகிழ்ச்சியடைந்தார்.

    உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா உலகளவில் பல ஆர்வமுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

    இந்த வீடியோ குறித்து பாகிஸ்தானின் ஜாம்பவான் அக்ரம் தனது எக்ஸ் தளத்தில், "வா ஜீ வா. தலைசிறந்த பும்ரா போன்றே, அந்த கட்டுப்பாட்டு மற்றும் செயலைம் பாருங்கள். இது தான் இன்று நான் பார்த்ததில் சிறந்த வீடியோ," என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல. அந்த வகையில்தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த போட்டி "டை"யில் முடிய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் குரூப் "ஏ" பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா? என்பது அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    பரிதாபத்திற்குரிய செயல்பாடு. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியதால் நான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அமெரிக்கா வெற்றி பெற்றார்கள். அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

    சூப்பர் ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுப்பது ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுப்பதாக நான் அர்த்தம் கொள்கிறேன். பாகிஸ்தான் "சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு சிறந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அக்ரம் தெரிவித்துள்ளார்.

    குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    தற்போது அமெரிக்கா கனடா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தயா அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் இந்தியா, அயர்லாந்து அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் போகும்.

    • இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.

     

    இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.

     

    ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது.
    • 16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

    கராச்சி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதனால் பெங்களூரு அணி தோற்கும் போதெல்லாம் அதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி போன்ற தனிநபரால் கோப்பையை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் என்ன விமர்சனத்தை எதிர்கொள்கிறார்? ஒரு வீரர் 100 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்தால் அது நன்றாக இல்லையா? ஒருவேளை அதே ரன்களை வைத்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனங்கள் வருமா? கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் விராட் கோலி சந்திக்கிறார். நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது. எனவே அவரை விமர்சிப்பது தேவையற்றது நியாயமற்றது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது.

    16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் பலவீனமாக இருக்கின்றனர். சிலர் பவுண்டரி அளவு சிறியதாக உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் 1987-ல் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடியபோது இருந்த அதே பவுண்டரி அளவு தான் பெங்களூரு மைதானத்தில் இப்போதும் இருக்கிறது.

    270 ரன்கள் அடிக்கப்படும் ஐ.பி.எல். தொடரில் ஒருவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் உடனே நங்கூரமாக விளையாடுகிறார் என்று அனைவரும் சொல்கின்றனர். அதனால் இப்போதெல்லாம் நீங்கள் முதல் பந்திலிருந்தே நிற்காமல் அடிக்க வேண்டிய நிலைமையை சந்திக்கின்றனர்.

    என்று அக்ரம் கூறினார்.

    • இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார்.
    • உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.

    அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.

    இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.

    • எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
    • முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பார்த்த மாதிரி உள்ளதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    உலக கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவைப் போல் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். நாம் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் பற்றி பேசுகிறோம். ஆனால் இவர் வித்தியாசமானவர். அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார்.

    இன்சமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும். அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.

    எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 503 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார்.

    • இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது.

     புதுடெல்லி:

    உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பாகிஸ்தான் போராடாமலே இந்தியாவிடம் எளிதில் சரண் அடைந்தது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பக்கமாகவே இருந்தது.

    பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், தென்ஆப்பிக்காவை சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-

    இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை.

    இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம்அக்ரம் கூறியதாவது:-

    இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கிஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

    இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலகக் கோப்பைக்கு முன்பு சோர்வு ஏற்படும்.
    • இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

    உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.

    உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை.

    இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    • சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
    • 2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.

    ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி திவிரம் காட்டி உள்ளது. ஏனெனில் இந்தியா 2013-க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வாங்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். பும்ரா குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுபோக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.

    அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

    2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.

    என்று கூறினார். 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
    • கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. முதல் 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும். அந்த குறிப்பிட்ட ஓவர்களில் கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டாம். அதேபோன்று பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அமைதியாக இருங்கள்.

    ஏனெனில் கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள். இந்த மைதானத்தின் தன்மை எப்போதுமே ஆசிய நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் அந்த சூழல் ஏற்படும். ஆனால் நாம் ஜூன் மாதத்திலேயே இங்கு வந்துள்ளதால் மைதானத்தின் தட்பவெட்பமும் சரி, சூழலும் சரி வித்தியாசமாக இருக்கும்.

    எனவே பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடையாமல் விக்கெட்டை எடுக்கும் கட்டுக்கோப்புடன் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கவனக் குறைவு ஏற்படாமல் வெற்றி முனைப்புடன் பந்துவீச வேண்டும்.

    என வாசிம் அக்ரம் கூறினார்.

    • கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.
    • வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜிம் சேத்தி பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டது. பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

    அப்ரிடி தலைமையில் புதிய தேர்வு குழு அமைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்தரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது. ஆனால் அவர் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை.

    நம்பகத் தன்மையற்ற சூழல் காரணமாக ஆர்தர் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். கடந்த கால சம்பவமும் ஒரு காரணமாகும்.

    வெளிநாட்டு பயற்சியாளர்கள் பாகிஸ்தான் வரமறுப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீரருமான வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    என்னை கேட்டால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி இருப்பேன். கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.

    வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாசிம் அக்ரம் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்
    • நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?.

    பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    56 வயதான வாசிம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். தான் முதன்முதலாக பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆனபோது, அப்போதைய கேப்டன் சலீம் மாலிக் தன்னை வேலைக்காரன் போன்று நடத்தினார். துணிகள் மற்றும் காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    வாசிம் அக்ரமின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார்.

    சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது.

    நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

    நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும்.

    துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இதுவரை அவரிடம் பேசவில்லை. எந்த அர்த்தத்தில் அவர் அப்படி எழுதினார் என்பது எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.

    ×