search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில்"

    • தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
    • கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை நிலையம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.

    கடந்த சில நாட்களாக தரமான மஞ்சள் வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-

    கடந்த வாரம் மஞ்சள் விலை குவிண்டால் 9,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மேலும் 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விரலி மஞ்சள் 6,206 முதல் 9,589 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 6,089 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் தரமான பெருவட்டு மஞ்சள் ஒரு குவிண்டால் 10,286 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் தற்போது மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் வரத்து அங்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதிய பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் மஞ்சள் நடவும் குறைந்துள்ளது.

    ஓராண்டு பயிராக மஞ்சள் இருப்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    தவிர 'என்.சி.டெக்ஸ்' ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆகஸ்ட் மாத டெலிவரி விலை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டது.

    தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

    தேசிய அளவில் அனைத்து பகுதியிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் வடமாநில தேவைகளுக்காக ஈரோடு மார்க்கெட்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு முழுமையாக தெரியும் வரை எதிர்ப்பு அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் கூடுதல் விலையுடன் அதிகமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரவலாக மழை பெய்ததன் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
    • இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை 3 மடங்கு உயர்ந்து விட்டது. இதுபோல் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் கம்பம், ஒட்டன்சத்திரம், தாளவாடி, பல்லடம், திருப்பூர், கொடுமுடி போன்ற பகுதிகளில் இருந்து 15 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் பரவலாக மழை பெய்ததன் காரண மாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று காலை மார்க்கெட்டிற்கு 5 டன் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து இருந்தது.

    இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    அதேசமயம் பெரிய வெங்காயத்தின் விலை வழக்கம் போல் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து மீண்டும் விலை உயர்ந்துள்ளது. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகியுள்ளது.

    இதனால் கடந்த வாரம் ரூ.25 முதல் 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.50 வரை விற்பனையானது. இன்று தாளவாடி, ஆந்திரா குப்பம் போன்ற பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆந்திரா தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரையும், தாளவாடி தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ×