search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழாய்வு பணிகள்"

    • தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
    • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார். அவை வருமாறு:-

    1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் பத்தாம் கட்டம்.

    2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம்

    3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம்

    4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம்

    5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம்- முதல் கட்டம்

    6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கட்டம்

    7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம்

    8. மருங்கூர், கடலூர் மாவட்டம் முதல் கட்டம்

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 28 ஆகிய இரண்டு நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

    • பெருங்கற்காலத்துக்கு பிறகு இரும்பு பயன்படுத்த துவங்கிய பின்னர் அவற்றை உருக்கி பல்வேறு ஆயுதங்கள் செய்துள்ளனர்.
    • விளைநிலத்தில் அமைந்துள்ள இந்த நெடுங்கல் தொன்மை வாய்ந்தது.

    உடுமலை:

    உடுமலை அருகே கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, கோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச்சின்னங்கள் அமைந்துள்ளன.குறிப்பாக பெருங்கற்காலத்திலும், தென்கொங்கு பகுதி சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கு உதாரணமாக கொங்கல்நகரத்தில் 20 அடி உயர நெடுங்கல் காணப்படுகிறது.விளைநிலத்தில் அமைந்துள்ள இந்த நெடுங்கல் தொன்மை வாய்ந்தது.நெடுங்கல் என்பது பெருங்கற்கால ஈமச்சின்னத்தின் ஒரு வகையாகும்.இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப்புதைத்த இடத்திலோ வைக்கப்படுகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அப்பகுதி முழுவதும் கல்திட்டைகளும், முதுமக்கள் தாழி உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.இந்த நெடுங்கல் பகுதியில், அகழாய்வு செய்வதன் வாயிலாக மதுரை கீழடி, கொடுமணல் உட்பட இடங்களில் முன்னோர்களின் நாகரீகம் கண்டறியப்பட்டது போல இப்பகுதியின் தொன்மையும் வெளிவரும்.இதில் தற்போது லேசான விரிசல் ஏற்பட்டு கல்லின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    இதே போல் அருகில் உள்ள சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் பகுதியில் கடந்த 2015ல் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில் அகலமான வாயுடன் கூடிய சுடுமண் மண்பாண்டங்கள்,பச்சை நிற கல்மணிகள், உடைந்த சங்கு வளையல், வட்ட சுடுமண் சில்லு, சாணை பிடிக்கப்பட்டு தேய்ந்த கல்லின் எச்சம், சிதிலமடைந்த எடைக்கல், கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்ட வண்ணப்பூச்சு மற்றும் வளைகோடுடைய உடைந்த ஓடுகளும் சேகரிக்கப்பட்டன.மேலும் பெருங்கற்காலத்துக்கு பிறகு இரும்பு பயன்படுத்த துவங்கிய பின்னர் அவற்றை உருக்கி பல்வேறு ஆயுதங்கள் செய்துள்ளனர்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் கோட்டமங்கலம் பகுதியில் இரும்பு கசடுகள், மேற்பரப்பு ஆய்வில் அங்கு கண்டறியப்பட்டது.தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் தெரியாமல் அவை பல வழிகளில் அழிக்கப்பட்டு வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய தென்கொங்கு நாட்டின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் கொங்கல்நகரம் பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ×