என் மலர்
நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே"
- உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
- இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு:
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.
ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.
இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
- இவரது தலைமையில் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை சமீபத்தில் வென்றது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முதன்மையான ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
கர்நாடகா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களம் இறங்கியது.
தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் மத்ரே உடன் ஹர்திக் தமோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருக்கும்போது ஆயுஷ் மத்ரே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். 51 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 55 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.
ஷிவம் டுபே 36 பந்தில் 63 ரன்கள் விளாசினார். ஹர்திக் தமோர் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என இமாலய இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாடினால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ கறாராக தெரிவித்ததால் இவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.
இதற்கிடையே 2024 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இவர் தலைமையிலான மும்பை அணி சில நாட்களுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
- அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்கர்னி 107 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 44.4 ஓவரில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
அப்போது பவுலராக இருந்து சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனே ருதுராஜ் பந்தை ஆக்ரோஷமாக தரையில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
- இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
- அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்து இருந்தது. தொடர் தோல்விகள் காரணமாக இந்திய அணி ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விதிமுறையும் அடங்கும். மிக அத்தியாவசியமான சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் பங்கேற்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கு முன்பாக நடந்த முகாமில் சஞ்சு சாம்சனால் பங்கேற்க முடியாததால் அவரை கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து தேர்வாளர்களும் வாரியமும் மிகத்தெளிவாக உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி பெறாமல் உள்நாட்டுப் போட்டிகளை தவற விட்டதற்காக இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.
சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே போட்டியைத் தவறவிட்டதற்கான எந்த காரணத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்களுக்கு வழங்கவில்லை. அவர் துபாயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தேர்வு குழுவினர் ஒரு சரியான காரணத்தை விரும்புவார்கள். இல்லையென்றால் ஒருநாள் போட்டிக்கு அவரைப் பரிசீலினை செய்வது கடினமாக இருக்கும்.
கேரள கிரிக்கெட் சங்கத்துடன் சாம்சனுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதை சரிசெய்ய வேண்டும். மாநில சங்கத்திற்கும் அவருக்கும் இடையே தவறான புரிதல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.