என் மலர்
நீங்கள் தேடியது "திருஉத்தரகோசமங்கை"
- திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- பக்தர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோவில் வளாகத்தில் மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சந்தனக்காப்பு களையப்படும்.
நாளை மறுநாள் (5-ந் தேதி) காலை 8 மணிக்கு சந்தனம் களைதலும், 9 மணிக்கு மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சந்தன பாக்கெட் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பொது தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 என 4 பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வி. ஐ, பி, வி.வி.ஐ.பி.க்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல 2 புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100, ரூ.250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலை யில்லா சந்தனம் வழங்கப்படும். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 20 காமிரா கூடுதலாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்திற்கே சென்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட கோவில் நிர்வாகத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.
மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் 6-ந் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தா னம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அறிவுரையின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
- உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர்.
பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் என்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதார் மங்கள நாயகி திருக்கோவில்.
இங்கு தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவானது.
திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
திரு உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
திருஉத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் என்று நம்பப்படுகிறது.
மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
மறுமையில் முக்தி கிடைக்கும். மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம்.
எனவே முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.
மூலவருக்கு மங்கள நாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
இறைவிக்கு மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இந்த தலத்தில்தான் நடந்தது.
உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திர கோசமங்கை இருந்திருக்கிறது.
ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
- உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.
- அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது.
அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
ஒளிவெள்ளத் தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.
அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை.
எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும்.
அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.
இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.
திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம்.
இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.
அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.
இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகத நடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.
வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.
- முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
- ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ராமநாதபுரம்:
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் மரகத நடராஜரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். இன்று காலை மீண்டும் சந்தனம் பூசப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சி அளித்தார்.
ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் முதல் சிவ ஸ்தலமாக மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் தென்முகத்துடன் பச்சை கல்லினால் ஆன மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலியால் அதிர்வு ஏற்பட்டால் சேதமடைந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் முழுமையாக சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரின தினத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் சிவச்சாரியர்கள் கோவில் நடை திறந்து மரகத நடராஜர் தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் சிலையில் உள்ள சந்தனம் களையப்பட்டு பால், பழம், பன்னீர், திருநீறு, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசன திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்னர் முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தரிசனம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் ரூ.10, 100, 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோவில் நிர்வாகம் முழு கவனத்துடன் செயல்பட்டது. இக்கோவிலில் கட்டணமில்லா தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ 100, இந்த ஆண்டு ரூ.250, ரூ.150 என உயர்த்தி விற்பனை செய்தனர். இக்கோவில் மரகத நடராஜர் தரிசனம் செய்வது ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் வரும் பக்தர்கள் அனைவரிடமும் கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய முடியும் என்ற நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்பட்டதாக பக்தர்கள் வேதனையடைந்தனர்.