search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட் உத்தரவு"

    • எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
    • அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக தற்போது முதலமைச்சராக பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சட்டசபை உரிமைக்குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

    இதையடுத்து உரிமைக்குழு, தி.மு.க. எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது.

    இதை எதிர்த்து முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், சட்டசபைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.


    அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சட்டசபை தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை அவருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டுமெனக் கூறினார்.

    அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டசபை மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒன்றோடு ஒன்று தலையீடு செய்யக்கூடாது. உரிமை மீறல் நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட விரும்பவி்ல்லை. அவ்வாறு தலையீடு செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் அது மிகவும் ஆபத்தானது. இதுதொடர்பாக புதிதாக அமைந்துள்ள சட்டசபை முடிவுக்கே விட்டுவிடலாம், என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் தீர்ப்பை பிறப்பிக்க தயாரான போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள 18 எம்.எல்.ஏக்களில், நான்கு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 14 பேருக்கு இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த வழக்கில் தற்போது நீங்கள் தீர்ப்பளித்தால், இவர்கள் மேல்முறையீடு செல்லும் பொழுது எங்களுடைய கருத்தை கேட்காமலேயே ஐகோர்ட்டு தீர்ப்பளித்து விட்டது என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்ட பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்யும்போது அவர்கள் நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கு நடத்தியுள்ளனர் .

    இதை நான் கூட கவனிக்கவில்லை. அதற்காக மன்னிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.

    உடனே நீதிபதிகள் ஆவணங்களை எடுத்து பார்த்தனர். பின்னர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப வில்லை. நோட்டீஸ் அனுப்பாததற்கு காரணம் அவர் கிடைக்க வில்லை என்று அச்சிடப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்கள் அனைவரும் பிரபல மானவர்கள் என்று கூறினர். பின்னர், எதிர்மனு தாரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேருக்கும் எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது நேரிலோ நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் நோட்டீசை பெற்றுக் கொண்டு வருகிற வியாழக்கிழமை தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கலாம். இந்த வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    • தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
    • கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனக ராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருகிறார்.

    கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பற்றி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தொடர்வதற்கான அனுமதியை கோரிய மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தொடர்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

    • மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்
    • பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, அதுபோன்ற எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    அதேபோல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    • வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த கூட்டத்தை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ×