search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லூர் ராஜூ பேச்சு"

    • சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் உதயநிதி என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்றார்.

    மதுரை

    மதுரை ஜீவா நகர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடிய வில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது.தமிழகத்தில் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். நல்ல நல்ல கருத்துக்களை தன் திரைப்படம் மூலம் எடுத்து சொன்னவர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் இப்போதும் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசு. அரிதாரம் பூசியவன், நடிகன் என எம்.ஜி.ஆரை கேலி பேசினாலும் கேலி பேசியவர் குடும்பத்தையும் வாழ வைத்தார். அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெய லலிதா வும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள் அவர்கள். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். மக்களை தான் தன் வாரிசுகளாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் நினைத்தனர்.

    ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

    ஜெயலலிதா மந்திரி சபையில் 3-வது, 6-வது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார். பொய் மூட்டை களை சட்ட மன்றத்தி லும், பொதுக் கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள் தி.மு.க.வினர்.

    தி.மு.க. அரசில் 35 பேர் அமைச்சர்களாக இருந்தாலும் 10-வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் அவர். நிதி அமைச்சர் கூட 27-வது இடத்தில் தான் இருக்கிறார்.என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என்று பேசியவர் உதயநிதி.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால் சந்தி சிரிக்கிறது.தமிழக மக்களை ஏமாற்றி, பொய், புரட்டை சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர் தி.மு.க. அமைச்சர்கள். இவர்கள் ஏமாற்றுவதை எங்கே போய் சொல்வது.

    தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி எப்போது கையில் செங்கலை தூக்கி னாரோ அன்றில் இருந்தே செங்கல் விலையும் உயர்ந்து விட்டது. போதைப்பொருள் கடத்தல் மாநிலமாக தி.மு.க.வினர் தமிழகத்தை மாற்றிவிட்டார்கள்.

    மதுரையில் இப்போது 2 அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி சட்டமன்றத்தில் கரும்புள்ளி ஏற்படுத்திய தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக விரைவில் வர உள்ளது.

    ஒருமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×