என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சத்தீவு"

    • கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை.
    • தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

    இதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்திய-இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் வரை காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இப்போது கூட்டணி என சொல்லலாம். பிறகு மறுக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து எனது முடிவு இருக்கும்.

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போன்று இல்லை. அமைச்சரின் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.

    * டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.

    * டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க. அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.

    * டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?

    * நமது மாநிலத்தில் வழக்கு நடந்ததால், தி.மு.க. செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம்.

    * தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.

    * டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

    * அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல.

    * கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்?

    * மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி.

    * இந்த 9 மாதத்தில் எந்த அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்?

    * 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தி.மு.க. என்ன செய்தது?

    * தூம்பை பிடித்து வாலை பிடித்த கதையாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    * நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. தான். நாட்டு மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது.

    * தமிழ்நாட்டிற்கு தி.மு.க. அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். 

    • தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.
    • தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் ஒரு வார்த்தைக்கூட பிரதமர் மோடி பேசவில்லை என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு பற்றி ஒரு வார்த்தை கூட இலங்கை அதிபரிடம் பேசவில்லை.

    இது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிக முக்கிய தேவையான கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதை அலட்சியம் செய்துள்ள பிரதமர் மோடி, இந்த முக்கிய பிரச்சனை பற்றி இலங்கை அதிபரிடம் எதுவும் பேசாமல் திரும்பியுள்ளார்.

    இலங்கை பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளான பின், இந்தியாவின் நிதி உதவிகள், இதர உதவிகளை நம்பியுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் நலன்கள் மற்றும் கச்ச தீவு மீட்பு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகின.

    ஆனால் மோடி அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள இன்று வரை மறுத்து வருகிறது. இது தமிழர்கள் மீதான மோடி அரசின் பாரபட்சத்தை, அலட்சியத்தை காட்டுகிறது.

    தமிழகம் இருக்கும் இடத்தில் குஜராத்தும், குஜராத்திகளும் இருந்து, குஜராத் மீனவர்கள் இதே போல பாதிக்கப்பட்டிருந்தால், மோடி இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

    இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், சிலர் அழுது கொண்டே உள்ளதாக, கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை பேசியுள்ளார்.

    புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது ஆகியவற்றை மறைத்து விட்டு, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

    பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது இயல்பு.

    ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) அடிப்படையில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு விகிதம், மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழத்திற்கு அளிக்கப்படும் விகிதம் போன்ற விகிதங்களை ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

    புயல், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூபாய் ரூ.36,000 கோடி நிதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் ரூ.226 கோடி. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2028 கோடி செலவு செய்திருக்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.2159 கோடி கடந்த பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த உண்மைகளை பிரமர் மோடி ஏன் பேசவில்லை ? இந்த ஏமாற்று வேலைகள், பொய்கள், துரோகங்களுக்காக பாஜகவிற்கும், மோடிக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்'.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
    • மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

    கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    *கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு,

    *ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

    *மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.

    * மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

    *1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.

    *1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

    *அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.

    *அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால். இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

    *இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.

    * குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

    *கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.

    *எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஐ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

    *கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.

    *நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.

    *இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.

    *நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

    *போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த. இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    *இலங்கை செல்லும் நம் ஒன்றிய பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள்.
    • கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமராக வாஜ்பாய், ஐ.கே. குஜ்ரால், வி.பி. சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த தி.மு.க. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்தது. அப்போதெல்லாம் தி.மு.க. கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

    கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்து உள்ளார்கள். கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.

    இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், சிக்கல்கள் உள்ள நிலையில் வக்பு பிரச்சனை தேவையானது தானா? திராவிட ஆட்சியிலும் வக்பு வாரிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

    46 ஆண்டுகளாக மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டாமல் இப்போது வாக்குகளுக்காக மணிமண்டபம் கட்டுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்.

    கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர்," தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.
    • ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கிடையில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார்.

    இதனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

    அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

    இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.

    அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
    • கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

    இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.

    * தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.

    * கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.

    * இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.

    * எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.

    * கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

    • இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார்.
    • தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    கச்சத்தீவு விவகாரத்தில் வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு பலர் இங்கு பேசி இருக்கிறார்கள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை துர்காதேவி என்று பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாயே புகழ்ந்துள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தபோது 285 ஏக்கர் நிலத்தை கொடுத்து விட்டு 6500 கி.மீ. பரப்பளவை அவர் இந்திய நாட்டுக்கு வாங்கி கொடுத்தார். இங்கு பேசியவர்கள் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை மட்டுமே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார். மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னார்கள்.

    ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    செல்வப்பெருந்தகை தனது பேச்சின்போது மறைந்த தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கியமான தீர்மானத்தின் மீது நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பா.ஜ.க. கட்சியும் இந்த தீர்மானத்தை ஆதரித்து உள்ளது. எனவே இதில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றார்.

    இதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை குறிப்பிட்ட ஒரு கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. செல்வப்பெருந்தகையின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அ.தி.மு.க.வினர் அதன் பிறகு அமைதியானார்கள்.

    • எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கச்சத்தீவை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்று ஆதரித்தது.

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதில் பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தார். 6 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறார். இந்த தீர்மானத்தை முறையாக கட்டுப்பாட்டோடு ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். சபாநாயகர் அதை பார்க்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர் தேவையில்லாமல் கருத்துக்களை சொல்கிறார். நாங்களும் சொல்வதற்கு தயார்தான். எங்களை பார்த்து கேட்கிறாரே நீங்களும் (அ.தி.மு.க.), 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாக பிரதமரை சந்திக்கும் போது எல்லாம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். கிட்டத்தட்ட 54 கடிதங்கள் எழுதி இருக்கிறோம்.

    எடப்பாடி பழனிசாமி: நாங்களும் டெல்லி செல்லும் போது பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். நான் முதலமைச்சராக இருந்த போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை அழைத்து சென்று விரிவாக பிரதமரிடம் விளக்கினேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் போகவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை.

    இதை தொடர்ந்து முதலமைச்சருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் குறுக்கிட்டு பேசினார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் பதிலுக்கு பதில் விளக்கம் அளித்தார்.

    உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு இந்த தீர்மானத்தையொட்டி தான் பேச வேண்டும். இது முக்கியமான தீர்மானம் என்றார்.

    அதைத்தொடர்ந்து தீர்மானத்தை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார். அவர் உள்பட தீர்மானத்தை ஆதரித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வ நன்றியை தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

    • கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
    • கச்சத்தீவு விவகாரம் குறித்து விரிவாக தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல் கடந்து போன தமிழனின் கண்ணீரால் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்பாக இருக்கிறது? தமிழ்நாட்டு மீனவர் சிந்திய ரத்தத்தால் என்று சொல்ல வேண்டிய கவலையான நிலைமையில் தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

    ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை.

    பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மார்ச் 27 அன்று, பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில், 11 பேரை கடந்த 27-ந்தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லை தாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது.

    அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலை அளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது சவாலாக இருக்கிறது என்று ஒன்றிய மந்திரி ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இதில் என்ன சவால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. வேறொரு மாநில மீனவர்கள் இப்படி தொடர் தாக்குதலுக்கு உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன்.

    இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறேன்.

    இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது.

    எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இது போன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச்சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.

    கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசு தான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது.

    கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

    கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.க்கள் இரா. செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் பாராளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன், மறுநாளே அதாவது, 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

    அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்து உள்ளதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அப்போதே 21.8.1974 அன்று "இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது" என அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் தான்.

    கச்சதீவை மீட்கவும், கச்சத்தீவில் இருக்கிற இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலை நாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வந்திருக்கிறது. கழக அரசு ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஒன்றிய வெளியுறவுத் துறை மந்திரிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதி தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வலியுறுத்தி வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது 3.10.1991 மற்றும் 3.5.2013 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது 5.12.2014 அன்றும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது கச்சத்தீவைத் திரும்பப் பெற அவரிடம் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

    பிறகு 19.7.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடித்து உள்ளார்கள். மாநில அரசின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதால், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது" என் பதை மேற்கோள்காட்டி "கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்" என்று வலியுறுத்தி, "அதுவரை தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன்.

    ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரிக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சனையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். ஆனால், இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன்.

    ஆகவே, இந்தச் சூழலில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன்.

    "தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

    இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது" என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

    தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதன் மீது ஒவ்வொரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். கச்சத்தீவு விவகாரம் குறித்து விரிவாக தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

    அதன் பிறகு இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த தீர்மானம் இன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ×