search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதிகள் கைது"

    • இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
    • இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

    இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ‘கியூ’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கியூ’ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேலூர் வாலாஜாப்பேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) ஆகிய 6 பேரை பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை 'கியூ' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் 6 பேரும் நியூசிலாந்து நாட்டிற்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்றது தெரிய வந்தது. இவர்கள் நியூசிலாந்து செல்வதற்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து உதவியதும், அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து 'கியூ' பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 9 பேரிடமும் 'கியூ' பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×