என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய ஓய்வூதியத் திட்டம்"

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.
    • அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை.

    மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டுவிட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
    • அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) போராடி வருகிறது.

    கடந்த 10-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்திய டிட்டோ ஜாக் வருகிற 30, அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

    இதையடுத்து அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்திற்கு அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கே.பி.ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், சண்முகநாதன், காமராஜ், ஜெகநாதன், ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். டிட்டோஜாக் கோரிக்கையில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியும் என்பதை விளக்கினார்கள்.

    அமைச்சரும் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தைக்கு பிறகு டிட்டோ ஜாக் சுழல்முறை தலைவர் காமராஜ் நிருபர்களை சந்தித்தார்.

    டிட்டோஜாக் கோரிக்கைகள் குறித்து எங்களை அழைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிதி சார்ந்த பணி சார்ந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினோம்.

    அரசாணை 243-யை ரத்து செய்வது பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் எடுத்து சொன்னோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியங்கள் முரண்பாடு பற்றியும் எடுத்து கூறினோம்.

    இவற்றை அமைச்சர் புரிந்து கொண்டு முதல்-அமைச்சரிடம் இதை தெரிவித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

    27-ந் தேதி பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க செல்லும் போது கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதியை பெற வலியுறுத்த இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    அதுமட்டுமின்றி உங்கள் கோரிக்கைகளில் எதை எதை உடனே நிறைவேற்ற முடியுமோ அதை முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும் என்று எங்களுக்கு வாக்கு றுதி அளித்தார். அதை ஏற்று கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர்.
    • கோவை மாவட்ட சிஐடியு அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட சிஐடியு அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத்தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடி வெடுத்து செயல்படுத்தலாம்.

    ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.

    இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×