என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபில் சிபல்"

    • வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
    • இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

     தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை  எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

    இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.

    அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி  காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.

    அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

     

    இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் 

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். டெல்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில், நீதிபதி யஸ்வந்த வர்மா வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தனர். அப்போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், பணம் இருப்பதுபற்றி உச்சநீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

    அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஊழல் முறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய நிலையில், நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, "நீதித்துறையில் ஊழல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனை. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் இதுப்பற்றி பேசுவது முதல்முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது"

    "நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை கண்காணிக்க உச்சநீதிமன்றத்திற்கு இதுதான் தக்க தருணம். நியமன விவகாரங்கள் வெளிப்படையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் மிகவும் தீவிரமான விவகாரம், பிரதமர் மோடி என்ன கூறினாலும் ஊழல் அதிகரித்துவிட்டது," என்று கூறினார்.

    • ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது
    • பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் ஜனநாயம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பாராளுமன்றத்தின் முட்டுக்கட்டை ஏன்? அரசு என்றால் இந்தியா என்று பொருள் அல்ல. அதைப்போல இந்தியா என்றால் அரசு என்று பொருள் அல்ல. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை. அதை இந்தியாவை விமர்சிப்பதாகவோ, தேசப்பற்று இல்லாததாகவோ கருத முடியாது' என குறிப்பிட்டு உள்ளார்.

    கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் இவ்வாறு பேசியிருப்பதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.

    • மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.
    • மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர்.

    புதுடெல்லி:

    ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்ததை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீசு அனுப்பி உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர். இது சிறிய மனிதர்களின் அற்ப அரசியல் என விமர்சனம் செய்து உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மேலிடம் மீதான அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகி கபில் சிபல் தனியாக அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • எதிர்க்கட்சித்தலைவர்களின் பெயரைக் கெடுக்க பா.ஜ.க. விரும்புகிறது.

    புதுடெல்லி :

    நாடெங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் வழக்குகள் பாய்வதும், சோதனைகள் நடத்தப்படுவதும் எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இப்போது மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசில் இருந்து விலகி 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற மூத்த வக்கீல் கபில் சிபல் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க விரும்புகிறது.

    எனவேதான் எல்லா எதிர்க்கட்சித்தலைவர்களையும் குறிவைக்கிறது. ஜார்கண்ட், சத்தீஷ்கார், கேரளா என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், தலைவர்களும் எவ்வாறு குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை வீழ்த்துவதற்கு அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் விதிகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித்தலைவர்களின் பெயரைக் கெடுக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காக சி.பி.ஐ.யையும், அமலாக்கத்துறையையும் மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்கூட்டியே தெரிந்து கொள்கிறது.

    மத்திய அரசுக்கு எதிராக பேசியபோதே கெஜ்ரிவால் குறி வைக்கப்படுவார் என நான் கணித்துவிட்டேன்.

    எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேராத வரையில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது என்பது மிகக்கடினமானதாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள்
    • உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    புதுடெல்லி :

    பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர்களுக்காக தீர்மானிக்க முடியாது" என கூறி உள்ளார். இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் குஷ்பு, 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தமட்டில், எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்? உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது.
    • பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள்.

    இது எதுவுமே இல்லாததால்தான் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேர்தல் முடிவு வெளியானதும் கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீத கமிஷன், தி கேரளா ஸ்டோரி, பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய்மை ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
    • விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் 'ரோஜ்கார் மேளா'வில் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி வழியாக பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசினார். அப்போது அவர், "அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆள்தேர்வில் ஊழலுக்கும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

    இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுபற்றி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஆள் எடுப்பு செயல்முறையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதும் முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறி இருக்கிறார். பாராட்டுகள். ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக, தற்காலிக ஆசிரியர்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்டவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதுதான் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கான ஒளிரும் எடுத்துக்காட்டு. பிரதமர் அவர்களே, என்ன சொல்கிறீர்கள்" என கூறி உள்ளார்.

    • அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை
    • எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும்

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:-

    அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும். அதிகாரத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டுதல்படி காவல்துறை பெருமளவில் செயல்படுகிறது.

    இந்த சூழலில் 60 முதல் 90 நாட்கள் போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை காவலில் வைக்கிறீர்கள் என்றால், அது பேரழிவுக்கானதாகும்.

    தேசத்துரோக சட்டம் மாற்றப்பட்ட விதம், தேசிய பாதுகாப்பு தொடர்பான விதிகளை நடைமுறைப்படுத்துவது, தேசிய பாதுகாப்பிற்காக எந்த சூழ்நிலையில் ஒரு நபர் மீது வழக்கு தொடரலாம் என்பதை வரையறுக்காமல் காவல்துறைக்கு அதிக அதிகாரம் கொடுத்து, மறுபுறம் மக்களை மௌனமாக்குவதை ஏற்க முடியாது'' என்றார்.

    முன்னதாக,

    1898-ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறை சட்டமும் (சிஆர்.பி.சி.), 1872-ம் ஆண்டு இந்திய சாட்சியங்கள் சட்டமும் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இந்த சட்டங்களில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேற்கண்ட 3 சட்டங்களை மறுசீரமைத்து, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    இந்திய தண்டனை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா மசோதா-2023, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதா-2023, இந்திய சாட்சியங்கள் சட்டத்துக்கு பதிலாக பாரதீய சாக்யா மசோதா-2023 ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    அந்த 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நமது குற்றவியல் நீதிமுறை, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களால் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர்கள், அவர்களது வசதிக்கேற்ப அச்சட்டங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களது ஆட்சியை பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் அவற்றை உருவாக்கி உள்ளனர்.

    அந்த சட்டங்களின் நோக்கம், தண்டிப்பதாகத்தான் உள்ளது. நீதி வழங்குவதாக இல்லை. தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கி உள்ளனர்.

    இந்த குறைகளை போக்கி, தற்கால தேவைகளை கருத்தில்கொண்டு, 3 புதிய குற்றவியல் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 302-வது இடத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த சட்டங்களில் முதல் அத்தியாயத்திலேயே இடம்பெற்றுள்ளது.

    புதிய மசோதாக்களில், தேச துரோக குற்றம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பிரிவினை செயல்கள், ஆயுத புரட்சி, நாசவேலைகள், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து விளைவித்தல் ஆகிய புதிய குற்றச்செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், சிறுமிகளை கற்பழித்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சினைகள் போன்றவற்றுக்கு பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் தீர்வு காணப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகவோ, வேலை, பதவி உயர்வு பெற்று தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டி பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதப்படும். இப்படி கருதப்படுவது இதுவே முதல்முறை.

    சிறிய குற்றங்களுக்கு முதல் முறையாக சமூக சேவை செய்வது, தண்டனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

    பொய் வழக்கு என்ற குற்றச்சாட்டை தவிர்க்க, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகளின்போது வீடியோ எடுப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுப்பது விசாரணையின் முக்கிய அங்கமாக இருக்கும்.

    இந்த மசோதாக்கள் மூலம் நமது குற்றவியல் நீதிமுறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்று இச்சபையில் உறுதி அளிக்கிறேன். இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் உணர்வு, இவற்றில் இருக்கும்.

    மசோதாக்களின் நோக்கம், நீதி அளிப்பதுதான். தண்டனை அளிப்பது அல்ல. குற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே தண்டனை அளிக்கப்படும். விரைவாக நீதி வழங்கவும், தற்கால தேவைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டும் இம்மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், 3 மசோதாக்களையும் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

    பாரதீய நியாய சன்ஹிதா மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல், வஞ்சக எண்ணத்துடன், திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால், அது கற்பழிப்பாக கருதப்படாத போதிலும், அத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

    வஞ்சக எண்ணம் என்பது வேலை வாங்கித்தருவதாகவோ, பதவி உயர்வு பெற்றுத்தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டுதல், உண்மையான அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.

    ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்படும். அதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    கொலை குற்றத்துக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும். கூட்டு கற்பழிப்புக்கு 20 ஆண்டுகள் சிறை அல்லது இயற்கையாக மரணம் அடையும் வரையோ தண்டனை விதிக்கப்படும்.

    ஒரு பெண், கற்பழிப்புக்கு பிறகு இறந்தாலோ அல்லது நிரந்தர பாதிப்பு அடைந்தாலோ, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடும் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படும். அதாவது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.

    12 வயதுக்கு குறைவான சிறுமி கற்பழிக்கப்படும்போது, குற்றவாளிக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை நீட்டிக்கப்படலாம்.

    கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். அபராதமும் விதிக்கப்படும்.

    போலீஸ் அதிகாரியோ, அரசு ஊழியரோ அல்லது ஆயுதப்படைகளில் பணியாற்றுபவரோ கற்பழிப்பில் ஈடுபட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது, ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது.
    • வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்திருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது. பா.ஜனதாவுடன் இன்னும் இருப்பவை எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான்.

    அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜனதா, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டார்கெட் செய்யப்பட்டது
    • மக்களவை தேர்தல் வர இருப்பதால் இன்னும் அதிகமானோர் மீது குறி வைக்கப்பட்டலாம்

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கூறியதாவது:-

    அவர்கள் (பா.ஜனதா) தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்துள்ளனர். மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அவர்கள் இன்னும் பலர் மீது குறிவைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவை டார்கெட் செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது.

    அவர்கள் சிபுசோரனை டார்கெட் செய்தார்கள். சிபுசோரன் மற்றும் 30 முதல் 40 அதிகாரிகளை சத்தீஸ்கரில் டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் அவர்கள் செய்ததையும் பார்த்து இருப்பீர்கள்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் அடைத்தார்கள். மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் ஏன் விழித்துக் கொள்ளவில்லை?

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.
    • பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    டெல்லி மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அமலாக்கதுறை ஒரு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பதவியில் உள்ள முதல்வர்கள் மீது பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறது.

    இது நாட்டில் மிகவும் சோகமான நிலையை உருவாக்கி வருகிறது. இது எங்கேபோய் முடியும்.

    அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு முன்பும் தேர்தலில் போட்டியிட்ட பலரின் பெயர்களை உங்களிடம் கூறி உள்ளேன். அவர்கள் மீது எந்தெந்த வழக்குகள் உள்ளன என்பதை கூறியுள்ளேன். 

    இதுபோல வழக்குகள் உள்ள வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    இது போன்ற நடவடிக்கையால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்ய முடியாது. அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், அது கண்டிப்பாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×