என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைக்கம் போராட்டம்"

    • வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல் மந்திரி அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் 1924-ம் ஆண்டு வைக்கத்துக்குச் சென்று போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதாகினர்.

    இந்தப் போராட்டம் நின்றுவிடக் கூடாது என்பதால் தந்தை பெரியார் வைக்கம் சென்று போராடினார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடப்படுகிறது.

    இதற்கிடையே, கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ம் தேதி முதல் 603 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், இந்தக் கடிதத்தை கேரள மந்திரி சாஜி செரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வழங்கினார்.

    கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பங்கேற்க தனது இசைவினைத் தெரிவித்தார்.

    • முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது.
    • வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது.

    ஈரோடு:

    கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்க கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது.

    இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தை சேர்ந்தவருமான டி.கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காக போராட முன் வந்தார். இதற்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.

    இந்த அறவழி போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனையடுத்து படிப்படியாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் "நீங்கள் இங்கு வந்து இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டு விடுமே என்று கவலைப்படுகிறோம்" என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாகிரகம் செய்ய தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமை கொடுமைக்கெதிராக தட்டியெழுப்பினார். ஈ.வே.ரா. பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாக கவர்ந்தது. இதனால் அங்கிருந்த போலீசாரால் ஈ.வே.ரா பெரியார் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    பின்னர் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா. பெரியார் விடுதலையானார். விடுதலையான ஈ.வே.ரா. பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்பு 1925-ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இதனைத் தொடர்ந்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது. அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரளா மாநில காங்கிரஸ் சார்பாக நினைவு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே வைக்கம் நூற்றாண்டு நினைவு பேரணி தொடக்க விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை அமைச்சர் முத்துசாமி வரவேற்றார். பின்னர் பன்னீர்செல்வம் படத்தில் உள்ள பெரியார் சிலை, கருணாநிதி சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
    • அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

    சென்னை:

    இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும்.

    கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

    இந்த போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்ததால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார்.

    அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றி யில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.

    இந்த போராட்ட வெற்றி யின் 100-ம் ஆண்டை குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட் டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென இன்று காலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு விழா மாற்றப்பட்டது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்றே சென்னை வந்துவிட்டார். அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று தங்க வைத்தனர்.

    இன்று காலையில் விழா நடைபெற்ற வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.

    அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.

    அதே போல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா. மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., பரந்தாமன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.

    • தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
    • மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.

    திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது.
    • உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.

    சென்னை:

    பெரியார் தலைமையில் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கழக தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தியாகி பார்த்தசாரதி செட்டியார் நினைவுநாள் நிகழச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேசும் போது, வைக்கம் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இன்று எல்லோரும் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

    தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது. அப்போது வைக்கத்தில் நடத்தப்பட்ட போராட்ட வெற்றியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சமீபத்தில் கொண்டாடியது.

    உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.

    வைக்கம் போராட்டத்தில் கேரளாவில் காங்கிரஸ் தோழர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டதால் காந்தியடிகள் காங்கிரசின் பிரதிநிதியாக பெரியாரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். அப்படித்தான் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்,

    இப்போது நான் கர்நாடகா, ஒடிசா மாநில பொறுப்பாளராக இருக்கிறேன். அங்கு சோனியா, ராகுல் உத்தரவின் பேரில் அவர்களது பிரதிநிதியாக ஒரு பேராட்டத்துக்கு சென்றால் அந்த வெற்றி எனக்கு கிடைக்கும் வெற்றி அல்ல காங்கிரசுக்கு கிடைக்கும் வெற்றி.

    அதே போலத்தான் அன்று பெரியாரின் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி.

    ஆனால் இப்போது காங்கிரஸ் பெற்று தந்த வெற்றிகளையெல்லாம் காங்கிரசை புறந்தள்ளிவிட்டு மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள்.

    தமிழகத்தில் 56 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இன்றைய அரசியல் ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையில் உள்ளது. ஆனால் அந்த ஓட்டு போடும் உரிமையை அனைவருக்கும் பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×