search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்"

    • மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக உள்ள அனிதா ஆனந்த் என்பவரை அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி என்பவரின் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

    இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் பணியாற்றும் செயலாட்சியர் தேவகிக்கு ஒப்பந்த முறையில் கார் ஓட்டும் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதோடு அலுவலகத்தில் இருந்தபோது தன்னை ஒருமையில் பேசி, "என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் நினைத்தால் உன்னை கோயம்புத்தூருக்கு பணி மாற்றம் செய்துவிடுவேன்" என மிரட்டினார்.

    மேலும், " பெண் என்றும் பாராமல் தன்னை அசிங்கமாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோகுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கோகுல்ராஜ் மீது ஆபாசமாக பேசியது, பெண்ண அவமதிப்பு செய்வது, மிரட்டல், பெண் வன்கொடுமை என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே சாதாரண ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு ஊழியரை மிரட்டும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது யார் என சக அரசு ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    இந்த நிலையில் செயலாட்சியர் தேவகியும், கைது செய்யப்பட்ட கோகுல்ராஜும் ஜூஸ் குடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

    இதைதொடர்ந்து, ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு பணியில் மேலாளராக உள்ளவரை மிரட்டுவதற்கு அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.

    சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.

    இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.

    மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

    ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

    இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.

    மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.

    இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.

    பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.

    இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.

    பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.

    இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • ரூ.67 லட்சம் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 48 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.20 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (திங்கட் கிழமை) திறந்து வைத்தார்.

    மேலும், சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடி மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் ரூ.67 லட்சம் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ. 171 கோடியே 36 லட்சம்செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் ரூ. 10 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    மேலும், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.19.98 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, இரும்பு மற்றும் எக்கு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள திண்கரை (கான்கிரீட்) சாலைப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ×