என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியில் அமர்த்தும்"

    • வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
    • குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால் தண்டனை விதிக்க நேரிடும்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குறைந்த பட்ச ஊதிய சட்டம், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் இம்மாதம் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கைக்கு இணை ஆணையரிடம் கேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    கொத்தடிமை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், 16 செங்கல் சூளைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணியாக, 31 மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிற்கூடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

    அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணி புரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×