search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெல்லோ சிட்டிசன்"

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    • மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பு, சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார்.

    இதுதொடர்பான திட்டங்கள் மற்றும் செயலாக்கங்களுக்கு 'பெல்லோ சிட்டிசன்', அவருக்கு உதவி செய்து வருகிறது. ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 3-வது ஆண்டாக, 2024-ம் ஆண்டு 'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பிளஸ்-2 படிக்கும் மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் www.aatrupadaifoundation.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த மாதம் இறுதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் இலவச பயிற்சி பெறுவதற்காக சென்னைக்கு வந்து பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களை 63811 28698, 93633 68271 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    ×