என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி முர்மு"
- கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
- போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்வார். இதற்காக ஜனாதிபதி வெள்ளிக்கிழமை வாடிகன் செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார்.
- அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
நித்ரா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார். நேற்று அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மேலும் நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டத்தை வழங்கியதாக பல்கலைக்கழகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, 'தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர், கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமின்றி, தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறை என்றும் கூறினார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில்,காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையை நீதித்துறை ரத்து செய்ததைத் தொடர்ந்து வேலை இழந்த ஆயிரக்கணக்கான தகுதிவாய்ந்த பள்ளி ஆசிரியர்கள் விஷயத்தில் கருணையுடன் தலையிடக் கோரி, இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சேர்ப்பின் போது செய்யப்படும் எந்தவொரு குற்றமும் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், நியாயமான வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கறைபடிந்த ஆசிரியர்களுக்கு இணையாக நடத்துவது கடுமையான அநீதியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288
வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து,
இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
- இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக செலுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. சந்திர பயணத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கிளன் நிலையை வலுப்படுத்துகிறது.
- ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.
நாட்டில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
அனைத்து இடங்களிலும் திருவிழா சூழலை காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது.
ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது.
காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்.
சரோஜினி நாயுடு, ரமாதேவி ஆகியோர் பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.
மகளிர் அதிகாரத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது ஒவ்வொரு துறையிலும் பெண்களின் சாதனை அதிகமாக உள்ளது.
பொருளாதார அதிகாரம், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஞ்ஞானிகளின் வரலாறு காணாத வெற்றி நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
- அஞ்சல் துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் இந்த ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற பிரம்மா குமாரிகளின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக ஜனாதிபதி முர்மு தபால் தலையை வெளியிட்டார். தாதி பிரகாஷ்மணியின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் இந்த ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி முர்மு, நிலவில் இருந்து சந்தியரான் 3 அனுப்பும் புது தகவல்கள் உலகம் முழுவதற்கும் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-
விஞ்ஞானிகளின் வரலாறு காணாத வெற்றி நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. சந்திரயான்- 3 திட்டத்தின் மூலம் முழு உலகத்திற்கும் பயனளிக்கும் புதிய தகவல்கள் சந்திர நிலத்திலிருந்து பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
தாதி பிரகாஷ்மணி இந்திய விழுமியங்களையும் கலாசாரத்தையும் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்பினார். அவரது தலைமையின் கீழ், பிரம்மா குமாரிகள் உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக மாறியது. ஒரு உண்மையான தலைவரைப் போல, அவர் சவாலான சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் பிரம்மா குமாரி குடும்பத்திற்கு ஆதரவாக நின்று அவர்களை எப்போதும் வழிநடத்தினார்.
தாதி ஜி உடல் ரீதியாக நம்மிடையே இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது ஆன்மீக மற்றும் மேதாவி ஆளுமையின் நினைவுகள் மற்றும் அவரது மனித நலன் பற்றிய தகவல்கள் எப்போதும் நம்மிடையே இருக்கும். மேலும் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் முதல் தரவரிசையில் உள்ள பெண் மாணவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மகாத்மா காந்தி பகிர்ந்துகொண்ட சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு பார்வை, நவீன மற்றும் வளர்ந்த தேசமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்திற்கு இன்னும் பொருத்தமானது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தனது உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-
"சம்பாரன் சத்தியாகிரகத்தின்" போது, மக்கள் சாதித் தடைகளை துறந்தனர். குறிப்பாக உணவு தொடர்பாக, அவர்கள் ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட்டனர். 106 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி தூண்டிய இந்த சமூக சமத்துவமும் ஒற்றுமையும், வலிமைமிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தலைகுனிய வைத்தது.
சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமை பற்றிய மகாத்மா காந்தியின் பார்வை பொருத்தமானதாகவே உள்ளது. நவீன காலத்தில் அது ஒரு வளர்ந்த தேசமாக மாறுவதற்கான இலக்கை அடைய அடித்தளமாக செயல்பட வேண்டும்.
இந்திய-நேபாள எல்லையில் டெராய் பகுதியில் வசிக்கும் தாரு பழங்குடியினரின் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய பல்கலைக்கழகத்திற்கு பாராட்டுகள்
பேரரசர் அசோகரின் பல தூண் ஆணைகளின் தாயகமாக விளங்கும். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் ராம்பூர்வா காளை தலைநகரைப் பார்க்கிறார்கள், இது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் காணப்பட்டது மற்றும் தர்பார் மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் முதல் தரவரிசையில் உள்ள பெண் மாணவர்களில் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தன்னம்பிக்கையுடன் படிப்பில் சிறந்து விளங்குவதைக் கண்டால் நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். காந்தி பெண் கல்வியில் பெரும் வாக்களிப்பவர்."
- உத்தரகாண்ட் மாநிலம் கடந்த மாதம் 7-ந்தேதி சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
- ஆளுநர் பிப்ரவரி 29-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.
உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு, போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29-ந்தேதி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது உத்தரகாண்ட்.
மசோதா நிறைவேறியதும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி "உத்தரகாண்ட் மாநில வரலாற்றில் இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் சொத்து உரிமை ஆகியவற்றில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரயான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.
- செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டைக்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பயங்கரவாதிகள் சிலர் புகுந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிப் என்கிற அஷ்பக் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முகமது ஆரிப் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தள்ளுபடி செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது.
- மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஜனாதிபதி முர்மு கூறியதாவது:
மிலாது நபி என்று கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வலுப்படுத்த நபிகள் நாயகம் நமக்கு உணர்த்தியுள்ளார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் இரக்கம் காட்டவும், மனித குலத்திற்கு சேவை செய்யவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.
புனித குர்ஆனின் புனிதமான போதனைகளை உள்வாங்கி, அமைதியான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
- அல்ஜீரியா சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி வரவேற்றார்.
- அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி முர்மு உரையாடினார்.
அல்ஜீர்ஸ்:
அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 13 முதல் 19 வரையிலான நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 3 நாடுகளுக்கான அவருடைய சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி முர்மு, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகரைச் சென்றடைந்தார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.
அல்ஜீரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். அவருடன் இந்திய சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து, குழு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்புப் பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் முர்மு உரையாடினார்.