என் மலர்
நீங்கள் தேடியது "டாக்டர் பட்டம்"
- ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார்.
- அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
நித்ரா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார். நேற்று அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மேலும் நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டத்தை வழங்கியதாக பல்கலைக்கழகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, 'தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர், கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமின்றி, தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறை என்றும் கூறினார்.
- பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார்.
- விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.
பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார்.
அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.
இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.
பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.
இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார். இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.
கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.
- தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
- தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.
ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.
தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.
இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.
இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மொரீஷியஸ் நாட்டில் தேசிய தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
- தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்.
போர்ட் லூயிஸ்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார்.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்றார்.
மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதிப்புமிகு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மொரீஷியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

2000-ம் ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி முர்மு பெற்றார்.
ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையிலான நீண்டகால நட்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.