search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்தப்பூக்கோலம்"

    • அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
    • மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

    கோவை:

    கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை சுந்தராபுரம், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலத்தை சுற்றிலும் பாடல்கள் பாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் தினத்தின் முக்கிய நிகழ்வாக மலையாள மக்கள் இன்று வீடுகளில் காலையில் கனி கண்டு கடவுளை வணங்கி வழிபாடுகள் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கோவில்களுக்கு சென்றும் ஒருவருக்கு ஒருவர் வழத்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிர்மால்ய பூஜை மற்றும் சீவேலி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலும் 2 ஆயிரம் கிலோ பூக்களால் பிரமாண்டமாக அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் மாவட்ட அளவிலான கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த முறை ஓணம் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. அங்கு வசிக்கும் மலையாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் ஓணம் திருவிழாவின் முக்கியமான ஓணம் விருந்து படைக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். மலையாளிகள் படைத்து இருந்த ஓணம் விருந்து சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்பட பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் மலையாளிகள் வீடுகளில் விருந்துணவை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் ஏராளமான பூக்களை வரவழைத்து இருந்தனர். மேலும் பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலை குறைத்து தான் விற்பனை செய்யப்பட்டது.

    இருப்பினும் கேரள மக்கள் பெருமளவில் வராததால் பூ மார்க்கெட்டுகள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயி களும், பெருமளவில் விற்ப னையை எதிர்பார்த்து இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

    தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    ஓணம் ஸ்பெஷல் உணவுகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.

    ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

    ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    புத்தாடை

    கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

    திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.

    ×