என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயிற்றுப்பொருமல்"

    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும்.
    • தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

    வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் அழுத்தம், வீக்கம் என்பது பொதுவான ஒரு இரைப்பை குடல் நோய் அறிகுறியாகும். வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பு அதிகரிக்கும் போது குடலில் உள்ள வாய்வுவின் அழுத்தமும் அதிகரித்து வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது.


    காரணங்கள்:

    உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.

    குடலில் உணவு செரிக்கும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்களை நிகழ்த்தும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன.


    தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவில் தான் வாயு இருக்கும். இவை ஏப்பம் மூலமாக வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறி விடும். சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது.

    ஆனால் குடலில் 'பெப்சின்' போன்ற என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அருகில் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.


    பொதுவாக வயிற்றிலுள்ள ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சத்தமே இல்லாமல் வாயு வெளியேறும். ஆனால் இந்த கலவை அதிகமாகிவிட்டால் பக்கத்தில் உள்ளவர்கள் அதிரும் படியான சத்தம் கேட்கும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.

    தீர்வுகள்:

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு எடுப்பது நல்லது.

    தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீரகம் உடலின் அக உறுப்புகளை சீராக்கி, உடலைப் பலப்படுத்தும். சீரகத் தண்ணீர் தினமும் காலை, மாலை வேளைகளில் இளஞ்சூட்டில் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.

    சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, தேவையானபோது சுடு சோற்றில் உப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும். மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.

    வயிற்றுப் பொருமலுக்கு ஓமத் தண்ணீர் ஒரு அருமருந்து, பெரியவர்கள் 5-10 மி.லி. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    பழைய சாதத்தில் சின்ன வெங்காயம், இஞ்சித் துண்டு, மோர், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்களான லேக்டோபேசில்லஸ், பிபிடோபாக்டீரியா, சக்காரோமைசஸ் இவைகள் சீரான அளவில் குடலில் இருந்து ஏராளமான நன்மைகள் செய்யும்.

    தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் உதட்டில் வைத்து குடிக்க வேண்டும். உணவை அவசரப்படாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் இவைகளை முறையாக எடுத்து வந்தால் செரிமான மண்டல பிரச்சினைகள் சீராகி, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் நீங்கும், மலச்சிக்கல் இராது.

    • நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
    • வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    பொதுவாக உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லது. தண்ணீரை மேல்நோக்கிய நிலையில் குடிக்காமல், வாய் வைத்து அருந்த வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    உணவுமுறை:

    * சுண்டைவற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு ஒரு கிராம் இவைகளை வறுத்து பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மதிய உணவின் போது இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் நெய்விட்டுப்பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத்தொல்லைகள் சரியாகும்.

    * சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சமஅளவில் எடுத்து பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல் தீரும்.

    * சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டு தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்பு சேர்த்து மோர் விட்டு பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

    * மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பிரண்டை வடகம், கண்டை வற்றல் சூரணம், ஏலாதி சூரணம், அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம். குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன.

    ×