search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசை தசரா திருவிழா"

    • நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
    • பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.

    கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள், தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

    • நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும்.

    தூத்துக்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    6-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

     தசரா திருவிழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், நாராயணர், அனுமர், காளி போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    மேலும் ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவிலில் பிறை அமைத்து குழுவாக தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள் பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தசரா திருவிழா களைகட்டியது.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள், கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி, கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    • பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்கார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்சுவரர் கோவில் கடற்கரையில் நடக்கிறது.

    விழா நாட்களில் முத்தாரம்மன் வெவ்வேறு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    நான்காம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு காவடி திருவீதி வலம் வருதல் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×