என் மலர்
நீங்கள் தேடியது "ஆறாட்டு"
- தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு
- கேரளா நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பியது
குழித்துறை :
திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு ஆண்டு தோறும் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாப புரத்திலிருந்து சரஸ்வதி தேவியும், வேளி மலையிலிருந்து முருகனும், சுசீந்திரத்திலிருந்து முன் உதித்த நங்கையம்மனும் ஆண்டுதோறும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கடந்த 12-ம் தேதி நவராத்திரி பவனி பத்மநாபபுர த்திலிருந்து தொடங்கியது. சரஸ்வதி தேவி அலங்கரிக்கப்பட்ட யானை மீதும், முன் உதித்த நங்கையம்மன், முருகன் விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பக்தர்கள் வழிநெடுக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
திருவனந்தபுரம் சென்று அடைந்த விக்கிரகங்களை வைத்து, 9 நாள் நவராத்திரி பூஜை நடந்தது. அங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஒரு நாள் நல்லிருப்புக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி விக்ரங்கள் குமரிக்கு புறப்பட்டது. முதல் நாள் நெய்யாற்றங்கரை கிருஷ்ணன் கோவில் சென்றடைந்து அங்கு தங்கியது.
பின்னர் 2-வது நாளான நேற்று காலை திரும்பி மாலையில் குமரி -கேரளா எல்லையான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சுவாமி விக்ரகங்கள் மற்றும் உடைவாள், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் பவனியாக வந்த சாமி விக்கிரகங்கள், குழித்துறை மகாதேவர் கோவில் வளாகத்தில் உள்ள சாமுண்டேஸ்வரியம்மன் கோயில் வந்தடைந்தது. அதன் பின்னர் அங்கிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சுவாமி விக்கிரகங்களுக்கு ஆராட்டு நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆறாட்டுக்குப் பிறகு சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் புறப்பட்ட சுவாமி விக்ரங்களுக்கு வழி நெடுக ஏராளமான பக்தர்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்து சுவாமியை வழிபட்டனர்.
காலை 8.30 மணிக்கு மீண்டும் பத்மநாபபுரத்துக்கு புறப்பட்டது. இந்த சுவாமி விக்ரகங்கள் மதியம் பத்மநாபபுரம் வந்தடைந்தது. அதன் பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி சிலை பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆலயத்திலும், குமாரகோவில் முருகன் விக்ரகம் குமாரகோவில் குமாரசாமி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் சுசீந்திரத்திலும் கொண்டு வைக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்த சுவாமி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.