என் மலர்
நீங்கள் தேடியது "ED Raid"
- செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இது தொடர்பான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி சம்மனையும் அனுப்பினார்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் முடிவில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அருள்மணி என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கூட்டு சதி, மோசடி, 5 பிரிவுகளின் கீழும், கணஷே்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
கோர்ட்டின் அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆபரேஷன் முடிந்ததும் செந்தில் பாலாஜியை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஓய்வு முடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சில நாட்கள் பொறுமை காக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நபர் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது என்பது சட்டப்படி சாத்தியமாகும்.
இதற்காகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்கள் கழித்து செந்தில் பாலாஜியிடம் தீவிரமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முடிவில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்ற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில் பாலாஜியின் பினாமி ஒருவருக்கு ரூ.10.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் நிலம் எந்த வகையில் இது போன்று விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை
- நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தா
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதைத் தொடா்ந்து, தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய மற்றொரு மனு தாக்கல் ஆனது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆா்.இளங்கோ, 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இ.எஸ்.ஐ. மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.
அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம்.
சம்மன் அளித்தோம். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதற்கான குறிப்பாணையைப் பெற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார். கைது குறித்து அவரது மனைவிக்கும், சகோதரிக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது.
கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே எந்தவித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவா் ஜாமினில் தான் வெளியில் வர முடியும்; அதை நிராகரிக்க கோர முடியாது.
விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தொடா்பாக தமிழக அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும்.
மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டார். பிறகு இது தொடர்பான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று ஒத்தி வைத்தார்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.
அதன்படி முதலில் நீதிமன்ற காவல் தொடர்பான மனு மீது விசாரணை நடந்தது. அந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, "நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக" உத்தரவிட்டார்.
- செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் எனக் குற்றச்சாட்டு
- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என செந்தில்பாலாஜி தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர். மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் நடந்த விதத்தில் மனித உரிமை மீறப்பட்டது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் மருத்துவமனை வந்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப்பின் அவர் கூறியதாவது:-
செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் காத்திருந்து அவரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பின்னரும் தரையில் தரதரவென இழுத்து துன்புறுத்தினர்.
நெஞ்சுவலி என்று கூறியபோதிலும் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து தள்ளி துன்புறுத்தினர். கைது செய்யப்பட்டபோது கடுமையான வகையில் நடத்தப்பட்டேன். மூன்று அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது பேசமுடியவில்லை என்று கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனித உரிமை மீறப்பட்டதாக புகார்கள் வந்தனர். புகார் அடிப்படையிலும் தாமாக முன்வந்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம். தற்போதும் புகார் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
- செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது
கோவை:
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.
மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.
பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது.
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும்-உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?
அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க.வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பா.ஜ.க.வை நம்புவார்கள். பா.ஜ.க.வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!
கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.
* சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தை கைது செய்ய வேண்டும்.
* ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்ய வேண்டும்.
* ராஷ்ட்ரிய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்ய நடத்த வேண்டும்!
* மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி பாஜக-வை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்!
* கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தார்கள். அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது துணை முதலமைச்சராகவே ஆகி விட்டார்!
* முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தார்கள்.
* தெலுங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு!
* சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு!
ஆனா, உத்தரப்பிரதேசத்தில் மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது 'உத்தமபுத்திரன்' பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.
பா.ஜ.க.வை எதிர்க்கிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பா.ஜ.க.வோட துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லை என்றால், அ.தி.மு.க. மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112-தான்.
ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.-வின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.
இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க.-வில் சேர்ந்த பின்னர் 'புனிதர்கள்' ஆகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட 'புனிதர்கள்' மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அ.தி.மு.க.வே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிகையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?
பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரி தான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கி றேன்.
நிறைய கழக உடன்பிறப்புகள் தலைவர் கலைஞர் பேசிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். "என்ன யாரும் அடிக்க முடியாது.. ஞாபகம் வெச்சிக்க.. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது…" என்று கலைஞர் பேசிய வீடியோ. அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல்-கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!
நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்து கிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசி வரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோ பாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை.
தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ-தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!
எனவே, பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023
- கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது.
- கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர்.
இவ்வாறு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
- பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவர் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா? இல்லை? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.
மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு வாதம் நடைபெற்றது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரை கைது செய்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
- செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
- நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல என அமலாக்கத்துறை வாதம்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜிரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் கோர முடியாது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் சிறப்பு சட்டம் என்பதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் பொருந்தாது. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சரியா, இல்லையா? என உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், தமிழக மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினர். அத்துடன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆராயலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- பலத்த பாதுகாப்புடன் அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புழல் சிறை நிர்வாகம் அனுப்பியது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.
காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
- செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் விரும்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதித்தது.
இந்த நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதன் பிறகு தான் ஆபரேசன் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி விடும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்றார்.
பின்னர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு கோர்ட்டில் வக்கீல் இளங்கோ தாராளமாக எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து பரிசோதித்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தாராளமாக அவர்களும் வந்து பரிசோதிக்கட்டும் என்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மூத்த டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர்கள் குழு அவரை பரிசோதித்தது.
ஆரம்ப கால 'கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராப்ட்' அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்படும்.
தற்போது இதய கண்காணிப்புடன் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதலமைச்சர் பரிந்துரை.
- பரிந்துரை குறித்து கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று முடிவு.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோர்ட்டு அனுமதியுடன் இப்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட தகவலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், சட்டசபை சபாநாயகருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறைப்படி தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கான பதிவேட்டு எண்.1440 வழங்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.
அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் நேற்றிரவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியும் நேற்றிரவு விரிவாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை இன்று கேட்கிறார்.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதித்து கையெழுத்து போடலாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்க உள்ளார்.
இதை ஏற்கும்பட்சத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு வீட்டு வசதி வாரியத்துடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பார் என தெரிகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.