என் மலர்
நீங்கள் தேடியது "திண்ணை பிரசாரம்"
- தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
- துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் 32 ஆண்டு காலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள். அமைதி பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.
எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசாரம் நடந்து வருகிறது.
இதுவரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள். வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டு பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள்.
இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வாரமும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்றுவார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.
வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
- 26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய தி.மு.க. பிப்ர வரி 16, 17, 18-ந்தேதிகளில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக கூட்டங்களை நடத்தி முடித்தது. இந்த கூட்டங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'இல்லந்தோறும் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் (26-ந் தேதி) 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. பெறுகிற வெற்றி மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் திண்ணை பிரசாரத்தை எளிமையாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 26-ந் தேதி முதல் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிய செயலாளர்கள், மாநகர, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து பேசுகின்றனர்.
26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர். 'பாசிசம் வீழட்டும்', 'இந்தியா வெல்லட்டும்' ஸ்டிக்கர்களையும் வீடுகள் முன்பாக ஒட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று முழுவதும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் திண்ணைப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.