என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவ்வாய்பேட்டை"

    • விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு.
    • விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் அறிவிப்பு.

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

    பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.

    சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் மேம்பாலப் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
    • புதிய மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் சென்னை - அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் அமைந்து உள்ளது.

    இந்த ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருவதால் ரெயில்வே அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

    இதன் காரணமாக அவ்வழியே செல்லும் செவ்வாப்பேட்டை, திருவூர், தொழுவூர், அரண்வாயில், தண்ணீர் குளம், வெள்ளக்குளம், சிறுகடல், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து தெற்கு ரெயில்வேயும், மாநில நெடுஞ்சாலைதுறையும் இணைந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரெயில்வே கேட் அகற்றப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. செவ்வாய்பேட்டை ரெயில்வே கேட்டின் ஒருபுறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்து உள்ளது. அதே நேரத்தில் ரெயில்வே கேட்டின் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் அந்த நிலங்களின் உரிமையாளர்கள், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பின்னர் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் மேம்பாலப் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

    இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பால பணி முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் புதிய மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×