search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்பனா"

    • கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார்.
    • மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்றும் வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது கோவையில் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.


    இதுதொடர்பாக மேயர் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் ஆனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில் மேயருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார்.

    இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது மேயர் ராஜினாமா செய்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என கூறி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

    கோவை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாநகராட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டார். இதனால் தி.மு.க. அபார வெற்றி பெற்றது.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என பலர் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேயராக அறிவிக்கப்பட்டவர் தான் கல்பனா.

    சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு சில பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. மேயரின் தாயார் வசித்த வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த பெண் போலீஸ்நிலையம் வரை சென்றார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மேயர் மீதே அவர் புகார் கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் சந்தையில் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலும் மேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் மேயர் கல்பனா வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருந்தது.

    அந்த வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மிக முக்கிய பொறுப்பில் உள்ள மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது தி.மு.க. மேலிடத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் மேயர் கல்பனா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியுள்ளது.

    இந்தநிலையில் கல்பனாவிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் பலர் கோதாவில் குதித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர்.

    ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
    • எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கவனித்து வருகிறார்.அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்பனா சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேள்வி:-கடந்த 2 மாதங்களாக உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

    பதில்:-எனது கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.ஏனென்றால் இது திடீரென்று நடந்தது. எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து தற்போது தேர்தல் பரபரப்பில் இருந்து வருகிறோம். ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

    கேள்வி:-உங்களது கணவரின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஜே.எம்.எம். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர எடுத்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அவர் எடுத்த முடிவு ஊடகங்கள் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது கணவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நான் ஏற்கனவே உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து வெளியே வர சிறிது நேரம் பிடித்தது. அந்த முடிவு அவருடைய தனிப்பட்டது என்று நம்புகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், என்ன செய்வது என்று அவருடன் விவாதித்தீர்களா?

    பதில்:-ஹேமந்த் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். நான் சட்ட நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சொந்தப் பொறுப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே ஒரு மனைவியாகவும், ஒரு மனிதனாகவும் குடும்பம், கட்சி, தொண்டர்களுக்காக துணை நிற்பது எனது தனிப்பட்ட கடமை என்று நான் நினைத்தேன். எனது பிறந்த நாளான மார்ச் 3-ந்தேதி அன்று ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பொறுப்பின் காரணமாக மாமனார், மாமியார் ஆசியுடன் தீவிர அரசியலில் இறங்கினேன்.

    கேள்வி:-உங்கள் கணவர் கைது செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-ஹேமந்த் கைது தொடர்பான நிலம் அவரது பெயரில் உள்ளதா என அதிகாரிகள் சோதித்திருக்க வேண்டும். அவரது பெயரில் ஒரு பேப்பர் கூட இல்லை.இந்தக் கேள்வி ஏன் ஹேமந்த்திடம் கேட்கப்படுகிறது என்று கேட்க விரும்புகிறேன். நிலம் தங்களுக்கே சொந்தம் என்று தற்போதும் கூறும் நில உரிமையாளர்களிடம் ஏன் கேள்வியை கேட்கவில்லை. நில உரிமையாளரும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-எங்களது உரிமையை பெற்று தருமாறு மத்திய அரசிடம் கேட்கிறோம். மத்திய அமைச்சகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சர்னா மதக் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம்.ஆனால் அது மறுக்கப்படுகிறது. அதுவும் ஊழல்தான். நான் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவள். ஆனால் மத்திய அரசு ஜார்கண்ட்டை வளர்ப்பு மகன் போல நடத்துகிறது. அதுவும் ஊழல்தான். நாங்கள் ஏமாற்றப் பட்டதாக உணர்கிறோம். இதனால்தான் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்குக்கு எதிராக முதல்வராக இருந்து ஹேமந்த் குரல் எழுப்பினார்.

    கேள்வி:-ஜார்கண்ட்டின் வருங்கால முதல்-மந்திரியிடம் பேசுகிறோம் என்று கூறலாமா?

    பதில்:-இப்போதே இல்லை.எனது மாமனார் சிபு சோரன், கணவர் ஹேமந்த், கட்சித் தொண்டர்களின் எண்ணங்கள், லட்சியங்களில் இருந்து நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறார்கள்.

    கேள்வி:-கட்சியினர் உங்கள் பெயரை முன்மொழிந்தால் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க தயாரா?

    பதில்:-மக்கள் என்னை ஒரு போர்வீராங்கனையாக ஆக்கியுள்ளனர். நான் ஒரு போராட்ட குணம் படைந்தவள் என்பதால் அந்த வார்த்தையை விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    ×